JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

'Meenakshi - Shakthivel' - Episode 1

JLine

Moderator
Staff member
Friends,
A small intro about the story:

In the shadows of a city that never sleeps, crime whispers, and sometimes, it screams.
Shakthivel IPS thought he’d seen it all.. Blood-stained crime scenes, lies dressed as truth, and justice slipping through the cracks. But when a series of murders follows the same chilling pattern, he doesn’t flinch. Rules get bent. Lines blur. Because to him, justice isn’t a job. It’s personal.
Love has no place in homicide, but it ends up being the very thing that fuels him. Because sometimes, love isn’t a weakness. It’s the weapon that keeps you fighting.
Meenkashi-Shakthivel, a standalone crime thriller where every clue cuts deeper, and every heartbeat counts. (I wish this happens to every reader :))
தூங்காத ஒரு நகரத்தின் நிழலில், குற்றம் இரகசியமாய்க் கிசுகிசுக்கிறது - சில சமயங்களில், அது அலறுகிறது.
சக்திவேல் ஐபிஎஸ், இரத்தக்கறை படிந்த குற்றக் காட்சிகள், உண்மையாக உடையணிந்த பொய்கள், மற்றும் விரிசல்களில் நழுவும் நீதி அனைத்தையும் தான் பார்த்ததாக நினைத்தான். ஆனால் தொடர்ச்சியான கொலைகள் அதே நடுங்க வைக்கும் முறையைப் பின்பற்றும்போது, அவன் தயங்கவில்லை. விதிகள் வளைக்கப்படுகின்றன. கோடுகள் மங்கலாகின்றன. ஏனென்றால், அவனுக்கு, நீதி ஒரு வேலை அல்ல. அது தனிப்பட்டது.
கொலையில் காதலுக்கு இடமில்லை, ஆனால் அது அவனைத் தூண்டும் விஷயமாகவே முடிகிறது. ஏனென்றால், சில நேரங்களில், காதல் ஒரு பலவீனம் அல்ல. அது உங்களைப் போராட வைக்கும் ஆயுதம்.
நன்றி!

ஜேபி
 

JLine

Moderator
Staff member
மீனாக்ஷி - சக்திவேல்

அத்தியாயம் - 1

பல நூற்றாண்டுகளாகக் கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் முத்து நகரம் - 'Pearl City' என்றழைக்கப்படும் தூத்துக்குடி.

கி.பி.7-ஆம் நூற்றாண்டு மற்றும் 9-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் ஆட்சிவசம் இருந்துவந்த இந்நகரத்தில் துறைமுகம் ஒன்று நிறுவப்பட்டது.

பழமை வாய்ந்த சிறிய துறைமுகமாக விளங்கிய அத்துறைமுகத்தின் கலங்கரை விளக்கம் கடல் வாணிபத்திற்கு மிகவும் உதவி இருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.

தற்போது இத்துறைமுகத்தின் வாயிலாக உப்பு, பருத்திநூல், சென்னா இலைகள், பனைப்பொருட்கள், நார், உலர்மீன்கள் மற்றும் உள்நாட்டு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மேலும் இத்துறைமுகத்தின் வாயிலாக நிலக்கரி, கொப்பரைகள், பருப்பு வகைகள் மற்றும் தானிய வகைகளும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இத்துறைமுகம் நாட்டின் 10-வது பெரிய துறைமுகமாகும். இத்துறைமுகம் வருடத்திற்கு 1 மில்லியன் சரக்குகளைக் கையாள்கிறது என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

அப்பேற்பட்ட துறைமுகம் வழியாகச் சில நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து சரக்குப் பெட்டகம் மூலம் கடத்தி வரப்பட்ட ஏறக்குறைய இருபது டன் போதைப் பொருட்களை, மத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது, அந்நகர மக்களை அதிர்ச்சியடையச் செய்தது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களாக நகரத்தில் இளைஞர்களின் மத்தியில் போதை மருந்து அதிகளவில் புழங்குவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் வர, இதனில் சரக்குப் பெட்டகத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் காவல்துறையினருக்கு கிடுக்கிப்பிடி போட, அதனைக் கட்டுப்படுத்தும் பொறுப்பிற்காகச் சென்னையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு வரவழைக்கப்பட்டான், சக்திவேல் IPS.

அன்று தான் Addl SP [Additional superintendent of police] ஆகப் பதவி ஏற்றிருந்த இருபத்தி ஒன்பது வயது இளைஞன்.

"உங்களைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை சார். அந்தளவுக்குத் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, நம்ம நாடு முழுவதுமே மிகவும் பிரபலமாகப் பேசப்படும் போலீஸ் ஆஃபிசர் நீங்க. இப்போ எங்க மாவட்டத்திற்கு மாற்றலாகி வந்திருக்கீங்க. நீங்க இங்க வரப் போறீங்கன்னுத் தெரிஞ்சதுமே எந்தளவுக்கு எங்களுக்கு, ஐ மீன் பொதுமக்களில் ஒருவனான எனக்குச் சந்தோஷம் ஏற்பட்டுச்சோ, அதே அளவுக்குத் தப்பான அரசியல் பண்ற அரசியல்வாதிகளுக்கும், பணம் ஒன்றே எங்களுடைய அடித்தளம் அப்படின்னு திமிரோட பல கொடூரமான குற்றங்கள் செய்துட்டு வரும் கோடீஸ்வர கிரிமனல்ஸுக்கும், அதிர்ச்சியையும் பயத்தையும் உருவாக்கி இருக்கீங்க சார் நீங்க."

பத்திரிக்கையாளர்கள் மத்தியில் நின்றிருந்த இளம் நிருபர் ஒருவருடய பேச்சைக் கூர்மையான பார்வையுடன் கேட்டுக் கொண்ட சக்திவேல், பதில் எதுவும் கூறாது, ஆமோதிப்பாய் மெள்ள தலையசைத்தான்.

அங்குக் குழுமியிருந்த அனைவருக்குமே தெரியும், இவன் அதிகம் பேசாதவன். வார்த்தைகளைவிடச் செயல்களில் நம்பிக்கை வைத்திருப்பவன்.

'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்' என்பதையே தன் வாழ்க்கையின் முதல் குறிக்கோளாக வைத்திருக்கும் இவனே ஆக்ரோஷத்தின் மறுபெயர் என்றும் அனைவருமே அறிந்திருந்தனர்.

'சரி' என்பது போல் தலையசைத்தவனின் இசைவு ஒன்றே போதுமே என்பது போல் சிறு புன்னகையுடன் தனது கேள்வியை எடுத்து வைத்தான் அந்த இளம் பத்திரிக்கையாளன்.

"சமீபகாலமாக நடந்து வரும் இளம் பெண்கள் மற்றும் இளம் ஆண்களின் கொலைகளும், குறிப்பா போதை மருந்துக்கு அடிமையாகிய இளைஞர்கள் செய்து வரும் கொடூரமான கொலைகளும், அக்கிரமங்களும் உங்களுக்குத் தெரியும். இதைத் தடுக்க நீங்க வைத்திருக்கும் திட்டங்கள் என்ன சார்?"

நெடுநெடுவென்ற உயரத்துடன், இறுகிய தசைகள் கொண்ட கட்டுக்கோப்பான தேகத்துடன், நரம்புகள் புடைக்கும் கைகளைப் பின்னால் கட்டியவாறே நின்றிருந்த சக்திவேல் ஒரு முறை அனைத்துப் பத்திரிக்கையாளர்களின் மீதும் பார்வையைப் பதித்தவன் கணீரென்ற குரலில் பேசத் துவங்கினான்.

"சமூக விரோதிகளைக் கட்டுப்படுத்த வழக்கமான சட்ட விதிகள் போதவில்லை என்றால், குண்டர் சட்டம் போன்ற சிறப்பு விதிகளைப் பயன்படுத்த நான் தயங்க மாட்டேன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். அதே போல் இப்போ தூத்துக்குடியில் தலைவிரித்தாடுவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே புழங்கும் போதைப் பொருட்கள். ஆகையால் இவர்களுக்குப் போதைப் பொருளை விநியோகம் செய்யும் வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் இனி ஒன்றாக இணைக்கப்படும். மேலும் அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்.....

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் புரியும் குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்றச்செயல்களைத் தடுப்பதன் மூலம் உயிர்களைப் பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும். போதைப்பொருள் புழக்கம் மற்றும் மக்களிடையே சாதி, மதப் பிளவுகளைத் தடுப்பதற்காகக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட, மாற்றத்தைத் தேடி ('In search of a change') என்ற சமூகச் செயல்திட்டம் மாவட்டம் முழுவதும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டது. அது இனியும் தொடரும்."

அவனது பதிலில் தெம்புப் பெற, சிறு சிரிப்புடன் அந்த இளம் நிருபருக்கு அருகில் நின்றிருந்த மற்றுமொரு பத்திரிக்கையாளர் துணிச்சலுடன், "சார், இந்திய தேசம் முழுவதுமே இப்போ போதை என்கிற அரக்கன் கைகளில் சிக்கி இருக்கு, அதில் தூத்துக்குடியும் விதிவிலக்கல்ல. ஆனால் திடீர்னு ஏன் உங்களை இங்கு மாற்றம் செய்திருக்காங்க? இங்க இருக்கும் போலிஸ் ஆஃபிசர்ஸால் இந்தக் குற்றவாளிகளைப் பிடிக்க முடியலையா? அவர்களது தகுதி அந்தளவிற்குக் குறைந்துவிட்டதா, என்ன?" என்றார்.

அவர் நக்கலாக வினவ, அதுவரை சற்று இளகுவாக முகத்தை வைத்திருந்த சக்திவேலின் முகம் இறுக்கமாய் மாறினாலும், நெற்றிப்பொட்டை தடவியவனின் உதடுகளில் புன்னகைத் தோன்றியது.

சிரிப்பென்பதே அறியாதவனின் இள நகையையும், அவனது நெற்றிப்பொட்டு தடவலையும் கண்டதில் அனைத்துப் நிருபர்களுக்குமே பயம் பிறந்தது.

அதுவும் இல்லாது, மாநிறத்திற்கும் சிறிது கீழான நிறத்தைக் கொண்டிருந்தவனின் இரும்பு தோள்களும் அகன்ற மார்பும் அவனது காக்கி சட்டைக்கு எதிராகப் புடைக்கும் விதத்திலேயே தெரிந்தது, அவனுக்கு இந்தக் கேள்விப் பிடிக்கவில்லை என்று.

பார்ப்பவர்களின் கண்களை ஈர்க்கும் அவனது ஊடுருவும் பார்வை, கண்ணுக்குத் தெரியாமல் அவனிடமிருந்து வெளிப்படும் சக்தியை அனைவருக்குமே உணர்த்தியதில் சிறு சலசலப்பு அங்கு ஏற்பட, "There is no reduction in their qualifications, but the brutality of criminals increased." என்றதில் அனைவருக்குமே புரிந்து போனது, அவனது ஆட்டம் எப்படி இருக்கும் என்று.

அவன் பதிலளித்தும் விடாது அந்தப் பத்திரிக்கையாளர் மீண்டும் கிண்டலாக, "குற்றவாளிகளின் கொடூரம் அதிகரித்திருக்குன்னு சொல்றீங்க, அப்படின்னா அதுக்காகத் தான் உங்களை இங்க மாற்றம் செய்திருக்காங்கன்னு சொல்றீங்களா? I mean the brutality of criminals needs a brutal police officer? இல்லை பாம்பின் கால் பாம்பறியுங்கிற மாதிரியா?" என்றார்.

[குற்றவாளிகளின் மிருகத்தனத்திற்குச் சரிசமமாக ஒரு மிருகத்தனமான போலீஸ் தேவை]

அவரது கேள்விக்கு ஒரே ஒரு விநாடி நிதானித்தவன், "பாம்பின் கால் பாம்பு அறியும். அதுக்கு உண்மையான அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? தெரிஞ்சுட்டு வந்து பிறகு என்னிடம் கேள்விக் கேளுங்க." என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் அனைத்துப் பத்திரிக்கையாளர்களின் மேலும் பார்வையைச் செலுத்தியவன்,

"நான் ஒன்றும் பெரிய அரசியல்வாதியோ அல்லது பிரபலமான சினிமா நடிகனோ இல்லை. ஒரு காவலதிகாரி. என் கடமையைச் செய்ய மட்டுமே நான் இங்க வந்திருக்கேன். என்னை இண்டெர்வியு செய்வது எல்லாம் அதிகப்படி. பட், தேவைப்பட்டால் நீங்க என்னை நேரடியாவே தொடர்பு கொள்ளலாம்." என்றவனாய் தனக்காகக் காத்திருக்கும் டி.ஜி.பியைக் [DGP] காண நடக்க, மீண்டும் ஒரு பத்திரிக்கையாளரிடம் இருந்து ஒரு கேள்வி.

"எப்படிச் சார் நாங்க உங்களைத் தொடர்பு கொள்வது? எல்லாப் போலீஸ் ஆஃபிஸர்ஸும் சொல்றது போல வழக்கம் போல் நூறுக்குக் கால் பண்ண சொல்வீங்க, அப்படித்தானே?"

விடுவிடுவெனப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தவன் சட்டென நின்றவனாய் பத்திரிக்கையாளர் கூட்டத்தை நோக்கி திரும்பினான்.

"உங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்கள் குறித்து அதனைப் பற்றித் தெரிந்தவர்கள், 988******* என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இதில் நீங்க என்னை நேரடியா தொடர்பு கொள்ளலாம். But only real crimes will be addressed. குற்றங்கள் நடப்பதா விளையாட்டுத்தனமா, ஐ மீன் ப்ரான்க் கால்ஸ் செய்பவர்களுக்குக் குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் அதே தண்டனை வழங்கப்படும்."

சற்று உரத்தக் குரலில் கூறியவனாய் பேட்டி முடிந்தது என்பது போல் தலையசைத்துவிட்டு டி.ஜி.பியின் அறையை நோக்கி நடந்தவனின் மிடுக்கான நடையும், அதீத வேகமும், பாறையாய் இறுகிப் போயிருந்த முகமும் அங்குக் குழுமியிருந்த மற்ற காவலர்களுக்கும் ஒருவித கலக்கத்தைக் கொணர்ந்தது.

‘இனி தூத்துக்குடியில் அதகளம் தான்!’

அனைவரது மனதிலும் ஓடிய ஒரே விஷயம் இது தான்.

அங்கு அவனுக்காகக் காத்திருந்த டி.ஜி.பியின் அறைக்குள் அவன் நுழையவும் அவரது அலைபேசி அலறவும் நேரம் சரியாக இருந்தது.

அறைக்குள் நுழைந்தவனைத் தலையசைத்துச் சைகை செய்து வரவேற்றவரின் முகம் அலைபேசியின் மறுமுனையில் தெரிவிக்கப்பட்ட தகவலில் அதிர்ச்சியைத் தழுவியது.

"வாட்? எப்போ?"

"*****"

"வயசு?"

"*****"

"Damn...."

பேசிக் கொண்டே நெற்றியை அழுந்த தடவியவரின் திகைத்த முகத்தைப் பார்த்த சக்திவேல் அவர் பேசி முடிக்கும் வரை காத்திருக்க, அலைபேசியை அணைத்தவர், "மறுபடியும் ஒரு கொலை சக்திவேல்." என்றார் கசந்த குரலில்.

"Pattern?"

கேட்ட சக்திவேலை இருக்கையில் அமருமாறு சைகை செய்தவர் தானும் தன் நாற்காலியில் உட்கார்ந்தவராய், "இது வரை ஏழு பேர் கொலை செய்யப்பட்டிருக்காங்க, ஆனால் ஒவ்வொரு கொலையும் வித்தியாசமான முறையில் நடந்திருக்கு சக்திவேல். ஒருத்தனைப் பார்த்தால் சூசைட் மாதிரி செட் பண்ணிருக்காங்க. இன்னொரு மர்டர் அவன் குடித்திருக்கும் ஆல்கஹாலில் விஷம் கலந்திருக்க மாதிரி தெரியுது. இன்னொருத்தன் கையை அறுத்துக்கிட்டு ரத்தத்தோட கிடக்கின்றான்." என்றார்.

"ஆனால் இது எல்லாமே கொலைதான்னு உறுதிப்படுத்திட்டீங்களா?"

"யெஸ், ஹண்ட்ரட் பெர்சண்ட் கொலைதான். ஆனால் பேட்டர்ன் தான் வேற வேற மாதிரியா இருக்கு சக்திவேல்."

"ஆனால் ஒரே விஷயத்தில் மட்டும் ஒத்துப் போறாங்க, ரைட்.?"

"யெஸ். எல்லாமே பதினெட்டில் இருந்து இருபத்தி ஐந்து வயசுக்குள் இருக்கும் இளைஞர்கள்."

"ஒகே சார். மற்றதை நான் பார்த்துக்குறேன்."

கூறியவனாய் விடைபெற்ற சக்திவேலின் காவல்வாகனம் அடுத்து நின்றது, தூத்துக்குடியின் செல்வந்தர்கள் குடியிருக்கும் அந்தக் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்டிருந்த ஒரு பிரம்மாண்டமான வீட்டின் முன்பு.

********************************

அதே நேரம், தூத்துக்குடியில் இருந்து ஏறக்குறைய நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள, சாத்தாங்குளம் வட்டத்தில் அமைந்துள்ள நீலூர்குளம் என்ற சிற்றூரின் நடுவில், கிராமமக்கள் சூழ ஒரு பஞ்சாயத்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வழக்கம் போல் பெருத்த கிளைகளோடு விரிந்திருக்கும் பெருமரத்தின் கீழ் அமர்ந்திருந்த பெரிய மனிதர்களின் கண்களில், தனக்காக நியாயம் வேண்டி இந்தப் பஞ்சாயத்தைக் கூட்டியிருந்த இளம் பெண்ணின் பரிதாபமான தோற்றத்தின் விளைவாக இரக்கம் சுரந்திருந்தது.

"உன் பக்கத்தில் இருக்குற நியாயம் எங்களுக்குப் புரியாமல் இல்லம்மா. ஆனாலும் உன் சித்தப்பனுடைய நிலமையையும் யோசிச்சுப் பாரு. அவர் சொல்றது போல உன் அப்பன் ஆத்தா வசதிக்கு மீறி ஆசைப்பட்டிருக்கவும் கூடாது, அதுக்காக இப்படி அளவுக்கு மீறி பணம் கடனா வாங்கி இருக்கவும் கூடாது. அதைத் திரும்பக் கொடுக்காமல் இப்படி அல்ப ஆயுசுல செத்துப் போயிருக்கவும் கூடாது. அவனவன் சுடுகாட்டுல பொணத்துக்குத் தீ மூட்டிய கையோட மறுவேலை பார்க்க போயிடுறானுங்க. ஆனா உன் சித்தப்பன் அனாதையா நின்ன உன்ன தன் மகளைப் போலப் பாத்துக்குறேன்னு இங்க கூட்டிட்டு வந்தாரு. உன் அம்மாக்கூடப் பொறந்தவரு, உன் மாமன் ஒருத்தரு இருக்காரு, ஆனால் வெளிநாட்டுல. உன் அம்மா செத்த சேதி தெரிஞ்சும் கூட உன்ன வந்து பார்க்கலை.....

ஆனா இதே சித்தப்பன் தான உன்னைப் பத்திரமா இத்தனை நாளு பார்த்துக்கவும் செஞ்சாரு. இப்போ அவரு மனச குளிர்விக்கிற, அவருக்கும் ஆதாயம் கிடைக்குற மாதிரி ஒரு வரன் வந்திருக்கு. உன்னையும் பார்த்துக்குறேன், உன் சித்தப்பனோட புள்ளைகளையும் கரை சேர்க்குறேன், பத்தாததுக்கு உன் பெத்தவங்க வாங்கிய கடனையும் அடைக்கிறேன்னு ஒரு மாப்பிள்ளை வரவும் உன்னைப் பத்திரமா ஒரு இடத்துல ஒப்படைக்கிற முடிவுல கல்யாணமும் பேசிட்டாரு. இப்பப் போய் அந்த மாப்பிள்ளையை எனக்குப் பிடிக்கலை, இந்தக் கல்யாணமே எனக்கு வேணாமுன்னு சொன்னால் என்னம்மா பண்றது, சொல்லு?"

பஞ்சாயத்திற்குத் தலைமை வகிக்கும் முதியவரின் கேள்விக்குப் பதில் கூற இயலாது குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்த பெண்ணின் தளிர் மேனி தனது அவலநிலையின் விகாரத்தை நினைத்து நடுங்கிக் கொண்டிருந்தது.

அவர் கூறுவதிலும் நியாயம் இருக்கின்றது! ஆனால் என் வாழ்க்கை? ஒரு வயதானவரை நான் திருமணம் செய்து வாழ முடியுமா?

அவளது உள்மனம் அரற்றிக் கொண்டிருந்த அக்கணம், பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு அருகில் நின்றிருந்திருந்த காரில் இருந்து இறங்கிய அந்தப் பெரிய மனிதரின் கண்கள், தலைகுனிந்து நின்றிருக்கும் அந்தப் பெண்ணின் மீது நிலைத்தது.

இருபதுகளின் துவக்கத்தில் அவளது வயது இருக்கலாம் என்று நினைத்தவருக்கு ஏதோ மகளைப் போல் பார்த்துக்கொள்வார் அவளது சித்தப்பா என்று நாட்டாமைக் கூறினாலும், ஆங்காங்கு கிழிந்து ஒட்டுப் போட்டிருக்கும் அவளது ஆடைகளிலேயே ஏழ்மைத் தெரிகின்றதே, இது தான் பெற்ற மகளைப் போல் ஒரு பெண்ணைப் பார்த்துக் கொள்ளும் இலட்சணமா என்று தோன்றவும் செய்தது.

"பஞ்சயாத்தைக் கூட்டிட்டு இப்படிக் கேட்குற கேள்விக்குப் பதில் சொல்லாம தலைக் குனிஞ்சிட்டே நின்னுட்டு இருந்தா என்னம்மா அர்த்தம்?"

தலைவருக்கு அருகில் அமர்ந்திருந்த மற்றொரு முதியவர் கேட்க, மெல்ல நிமிர்ந்து நோக்கியவளின் பேரழகிய முகத்தின் தெய்வீக அம்சத்துடன் கலந்திருந்த வசீகரம், காரில் இருந்து இறங்கிய பெரிய மனிதரை அசரடித்தது.

அணிந்திருந்த பழைய பாவாடைத் தாவணியிலும் வடித்து வைத்த சிலைப் போல் நின்றிருந்தவளின் செக்கச்செவேலெனச் சிவந்த நிறத்தைக் கொண்டிருந்தவளின் களையான முகத்தைப் பார்த்தவர், அவளுக்கு எதிராக நின்றிருக்கும் அவளது சித்தப்பனைப் பார்த்தார்.

'அடப்பாவி, பசும்பொன்னையும் தோற்கடிச்சிடற மாதிரி தங்கம் கணக்கா இருக்குது இந்தப் பொண்ணு. எப்படிடா இவ்வளவு சின்னப்பொண்ணை ஒரு கிழவனுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுக்க முடிவு செஞ்ச? சித்தப்பன்னா பெத்த அப்பனுக்குச் சமானம் இல்ல? நீ பெத்த பொண்ணா இருந்தா இப்படி ஒரு பாதகத்த செய்வியா?'

மனம் நெருட, அமைதியாய் கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு, தான் வந்திருந்த காரின் மீது இலேசாகச் சாய்ந்தவாறே பஞ்சாயத்தைக் கவனிக்க, அழுகையுடன் சின்னக் குரலில் அந்தப் பெண் பேசத் துவங்கினாள்.

"ஐயா! எங்க அப்பாவும் அம்மாவும் எதுக்கு அவ்வளவு பணம் கடனா வாங்கினாங்கன்னு உங்க எல்லாருக்கும் தெரியுமா? எங்கல்யாணம் எப்படியாவது நல்லபடியா நடக்கணுங்கிறது தான் அவங்க கனவே. அதுக்காக வாங்கின பணம் தான் அது. ஆனால் அது நடக்குறதுக்குள்ள விபத்துங்கிற பேருல விதி அவங்களைக் கொண்டு போயிடுச்சு. என்னைக் கல்யாணம் கட்டிக்க இருந்தவரும் இந்தக் கல்யாணமே வேண்டாம்னு போயிட்டாரு, அதோட என் கல்யாணமும் நின்னுப் போயிடுச்சு. என் மாமாவப் பத்தி பேசுறீங்க, ஆனால் அப்படி ஒருத்தவங்க இருக்காங்கன்னு எங்க அம்மாவே எனக்கு ரொம்ப நாளா சொல்லலை. எங்க அப்பா அம்மா கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்க என் அம்மாக்கிட்ட பேசுறதையே நிறுத்திட்டாங்கன்னு சொன்னாங்க. அவங்களுக்கும் எங்க அம்மாவுக்கும் எந்த வித தொடர்பும் இல்லைன்னு அம்மா சொல்லிருக்காங்க, அப்புறம் எப்படி அவங்க என்னைப் பார்க்க வருவாங்க?....

இதுல அப்பா உயிரோடு இருக்கிற வரை எங்க வீட்டுப்பக்கம் கூட வராத சித்தப்பா திடீர்னு வந்து நான் உன்னைப் பார்த்துக்குறேன்னு சொன்னப்ப நான் போக மாட்டேன்னு தான் சொன்னேன், ஆன எங்க ஊர்க்காரவங்க எல்லாருமா சேர்ந்து தான் என்னை இவர் கூட வலுக்கட்டாயமா அனுப்பி வச்சாங்க. இப்ப திடீர்னு இப்படி ஒரு வயசானவருக்கு என்னைக் கல்யாணம் செஞ்சுக்குடுக்கப் போறேன்னு சித்தப்பா வந்து நிக்கிறாரு. என்னைப் பத்திக் கவலைப்படாம நீங்க எல்லாரும் அவருக்கு ஆதரவா பேசுறீங்க. இதுக்கு எதுக்குய்யா பஞ்சாயத்து? பேசாமல் என்னை ஏதாவது கிணத்துல பிடிச்சு தள்ளிவிட்டுடுங்க, நான் நிம்மதியா போய்ச் சேர்ந்துடுறேன்."

"அதாவது உன் அப்பனுடைய மூத்த சம்சாரம் குழந்தையோட கிணத்துல விழுந்து தற்கொலை செஞ்சுக்கிட்டது மாதிரி. அது சரி, ஆத்தாவும் சரியில்லை. அப்பனும் சரியில்லை. அப்புறம் நீ எப்படி இருப்ப? அதெல்லாம் சரிதான், நீ செத்துப்போயிட்டா உன் அப்பன் வாங்கிய கடனை யாரு அடைக்கிறது?"

கரகரக்கும் தொண்டையுடன் ஏகத்துக்கும் எகிறியவராய் கேட்கும் ஏறக்குறைய ஐம்பது வயதில் இருக்கும் அந்தச் சித்தப்பாவை ஒரு முறைத் திரும்பிப் பார்த்த அந்தப் பெரியவர், தான் சாய்ந்திருந்த காரில் இருந்து நிமிர்ந்து நின்றவராய், "அந்தப் பணத்தை நான் கொடுக்குறேன். நீங்க இந்தப் பொண்ணை விட்டுடுங்க." என்றதில் அங்குக் கூடியிருந்த அனைத்து மக்களின் முகமும் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பின.

அடுத்த நொடி திகைப்பில் ஆழ்ந்தன.

'பெரியய்யாவா வந்திருக்குறது? இவரு எப்போ இங்க வந்தாரு?'

அனைவரும் தங்களுக்குள் சலசலத்துக் கொள்ள, கம்பீரமாய் நிமிர்ந்த நடையுடன் அந்தப் பெண்ணை நோக்கி நடந்த அந்தப் பெரியவரைக் கண்டதும், அக்கிராம மக்கள் மட்டுமல்லாது, நாட்டாமை உட்பட மற்ற தலைவர்களும் கூட அரக்கப்பரக்க எழுந்து நின்றனர்.

"ஐயா! நீங்க எப்போ வந்தீங்க? பஞ்சாயத்து கவனத்துல உங்களைக் கவனிக்கலை. மன்னிச்சிக்கங்க ஐயா."

அமர்ந்திருந்த மேடையில் இருந்து விடுவிடுவென இறங்கி, பெரியவரை நோக்கி நடந்தவராய் மன்னிப்பு யாசிக்கும் வகையில் நாட்டாமை பணிவுடன் அவர் முன் நின்றார்.

அவரது முகத்தைக் கூர்ந்துப் பார்த்த அந்தப் பெரியவர், "என்ன ராமசாமி? நான் வந்ததுல இருந்து பார்த்துட்டு இருக்கேன், ஒருத்தர் கூட இந்தச் சின்னப் பொண்ணுக்கு ஆதரவா பேசுற மாதிரியே தெரியலையே. பிறகு எதுக்கு இப்படிப் பஞ்சாயத்துங்கிற பேருல எல்லாரும் கூடியிருக்கீங்க?" என்றார் கம்பீரக் குரலில்.

"ஐயா! அது வந்து?"

"வந்து போயெல்லாம் இல்ல. யாருக்கிட்ட இந்தப் பொண்ணாட அப்பா கடன் வாங்கினாருன்னு சொல்லு, நா அந்தக் கடனை அடைக்கிறேன்."

"ஐயா, நீங்க எதுக்கு?"

"என்னையே எதிர் கேள்வி கேட்குற பார்த்தியா ராமசாமி?"

"ஐயோ சாமி, அப்படி எல்லாம் இல்லை. உங்கள எதிர்க்கேள்விக் கேட்குற துணிவு இங்க யாருக்கு இருக்கு."

"அப்படின்னா இந்தப் பொண்ணோட ஊரு எது, அங்க யாருக்கு இந்தப் பொண்ணோட அப்பா கடன் பட்டிருக்காருன்னு மட்டும் சொல்லு. போதும்."

ஊரின் தலைவரே இப்படிப் பயந்துப் பேசும் பொழுது மற்றவர்கள் எப்படி இருப்பர்? அனைவருமே நின்றிருந்த இடத்தில் இருந்து அசுரகதியில் நடந்தவர்களாய் அந்தப் பெரியவரைச் சுற்றி நின்று கொள்ள, சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த சித்தப்பனின் நிலை தான் ஐயோவென்று ஆகிப் போனது.

'போச்சு, எல்லாம் போச்சு. இந்த அனாதைக்கு ஒரு வருஷம் சாப்பாட்டு போட்டு துணிமணி வாங்கிக் கொடுத்தது எல்லாம் விழலுக்கு இறைச்ச நீராகிடுச்சே.'

மனம் புலம்ப, அமைதியாய் தன்னை நோக்கி நடந்து வந்தவரை கோபத்துடன் பார்த்த அந்தப் பெரியவர், "நீங்க தான இந்தப் பொண்ணோட சித்தப்பா? ம்ம், யாருக்குப் பணம் கொடுக்கணும், எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லுங்க, நான் கொடுக்குறேன். அத்தோட இந்தக் கல்யாண பேச்சையும் விட்டுடணும்." என்றார்.

"சரிங்க, ஆனால் அப்பன் ஆத்தா இல்லாத பொண்ண நான் தான் இந்த ஒரு வருஷமா பார்த்துக்குறேன். ஏதோ ஒரு நல்ல வரன் வரவும் கல்யாணம் முடிச்சு இவளை அனுப்பிட்ட பொறவு நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சேன். இப்படித் தீடீர்னு நீங்க வந்து கடனை எல்லாம் நான் அடைக்குறேன், நீ கல்யாணத்தை நிறுத்துன்னு சொன்னீங்கன்னா, இவளை நான் என்ன செய்யறது? சொச்ச காலம் முழுக்க நான் இவளுக்கு வடிச்சுக் கொட்ட முடியுமா? எனக்கும் அஞ்சுப் புள்ளைக இருக்கு, நான் அவங்களைப் பார்க்குறதா இல்லை இந்த அனாதையைப் பார்க்குறதா?"

ஈவு இரக்கமின்றிப் பேசும் சித்தப்பனை பார்த்த அந்தப் பெரியவரின் கண்கள் அருகில் நிற்கும் ஊர் நாட்டாமையையும் மற்ற தலைவர்களையும் பார்த்தன.

"ஆக இந்த ஆளு நல்லாப் பார்த்துக்குவாருன்னு நம்பி இந்தப் பொண்ண அதோட விருப்பம் இல்லாமலேயே இவர் கூட எல்லாரும் அனுப்பி வச்சிருக்கீங்க, அதோட ஊர்காரவங்களையும் சேர்த்துத்தான் சொல்றேன், அப்படித்தானே?" என்றவர் சித்தப்பனின் பக்கம் திரும்பியவராய், "இந்தப் பொண்ண என் வீட்டுக்கு நான் கூட்டிட்டுப் போறேன்." என்றதில் அனைவரின் கண்களும் வியப்பில் விரிந்தன.

"ஐயா! நீங்க?"

"ஏன் ராமசாமி, என் பேருல நம்பிக்கை இல்லையா?"

"கடவுளே! என்ன சாமி சொல்றீங்க? உங்களை நம்பாம போறதும், நம்ம குலச்சாமிய நம்பாம போறதும் ஒண்ணு இல்லையா?"

"பிறகு என்ன?"

கூறிய பெரியவர் அந்த இளம் பெண்ணை நெருங்கியவராய்,

"இந்தச் சின்ன வயசுல அப்பன் ஆத்தா ரெண்டு பேரையும் ஒண்ணா பறிகொடுத்துட்டு இப்படி நிக்குறது ரொம்பப் பெரிய கொடுமைம்மா. அந்தக் கொடுமை உனக்கு வந்திருக்கக் கூடாது, ஆனா நடக்குறது, நடக்கப் போறது எல்லாத்துக்கும் நம்மால காரணக் காரியம் கண்டுப்பிடிக்க முடியுமா, சொல்லு? என் பேரு மார்த்தாண்ட நாடார். மார்த்தாண்டம்னு கூப்பிடுவாங்க. என்னை நம்பி என் கூட வா. உன்னை நான் என் மகளாட்டம், அதாவது என் நிஜ மகளாட்டம் பார்த்துக்குறேன். ஏன் தெரியுமா? எனக்குப் பொறந்திருக்குறது எல்லாமே ஆம்பளைப் புள்ளைக. என் பொஞ்சாதிக்குப் பொம்பளை புள்ள இல்லையேன்னு எப்பவுமே ஒரு குறை. அந்தக் குறையைத் தீர்த்து வைக்கிற மாதிரி நீ வந்திருக்க. அதனால உன்னை எங்க மகளாவே நாங்க பார்த்துக்குவோம், பயப்படாம வா." என்றதில் அந்த இளம் பெண்ணின் கண்களில் நீர் கரைப்புரண்டு ஓடியது.

ஏனோ அந்தப் பெரியவரின் வார்த்தைகளில் அவளுக்கு அவ்வளவு நம்பிக்கைப் பிறந்தது.

ஆமோதிப்பது போல் வெறும் தலையை மட்டும் அவள் அசைக்க, காரில் அவள் ஏறி அமர்ந்ததும் முன் பக்கம் அமர்ந்த பெரியவரை நோக்கி காரைக் கிளைப்பியவாறே திரும்பினான் அவர்களின் ட்ரைவர்.

"ஐயா!"

"போச்சு, நீயுமா?"

"அது வந்து.."

"செந்திலு, நான் பல தடவை சொல்லிருக்கேன். எதுவானாலும் சட்டுன்னு கேட்டுப்புடு, இப்படி வந்து போயின்னு இழுக்குறது எனக்குப் பிடிக்காதுன்னு."

"சரி இழுக்காமலேயே கேட்குறேன்.." என்றவன் காரை செலுத்தியவாறே அவரின் புறம் சற்று சாய்ந்தவனாய், "சக்.." என்றவனை முடிக்கவிடாது அவனது தோளில் கை வைத்து அவனைத் தள்ளி நிமிர்த்தினார் மார்த்தாண்டம்.

"நீ ஒழுங்க நேரா உட்கார்ந்து வண்டிய ஓட்டு, மத்ததை நான் பார்த்துக்குறேன்."

"ஆமா, நீங்க பார்த்துக்குவீங்கத்தான், இல்லைன்னு சொல்லலை.. ஆனால்.."

"ஆனா என்னடா?"

"அதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா?"

"உனக்கு வர வர வாய்த்துடுக்கு ஜாஸ்தியாகிடுச்சு. கறியும் சோறுமா போட்டா, இப்படித்தான்."

"அது சரி."

"இப்ப என்னடா சொல்ல வர்ற?"

"நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்குப் புரியும். நீங்க பாட்டுக்கு இந்தப் பொண்ண என் மகளாட்டம் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு கூட்டிட்டு வந்துட்டீங்க. ஆனா.."

எதுவோ சொல்ல வந்தவன் சட்டென நிறுத்தினான்.

"என்னடா இழுக்குற, சொல்ல வந்ததைச் சீக்கிரம் சொல்லி முடி ."

அவன் என்ன சொல்ல வந்தானோ தெரியவில்லை, ஆனால், "நம்ம சின்ன ஐயா?" என்று விளித்தான்.

"நான் அவனுக்கு அப்பா.. மறந்துடாத."

"அது சரி.."

"திரும்பவுமா? ஒழுங்கா வண்டிய ஓட்டுறதுல மட்டும் கவனம் செலுத்து, மத்ததை நான் பார்த்துக்குறேன்."

பஞ்சாயத்து நடந்த கிராமம் மட்டுமல்லாது சுற்றிலும் உள்ள ஏறக்குறைய இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், ஊர்களுக்கும் ஒரு தலைவர்(தெய்வம்) போல் உள்ளவர் மார்த்தாண்ட நாடார்.

அவர் எதிரில் வந்து நிற்க கூடப் பயந்து ஒடுங்கும் மக்களுக்கு நடுவில், அவரிடம் தைரியமாய் உரையாடும் ஒரே மனிதன், அவர்களின் கார் ஓட்டுநன் தான்.

இருபத்தி மூன்று வயதே ஆன செந்திலும் மார்த்தாண்டத்திற்கு மகன் போல் தான். சொல்லப் போனால் அவருக்குப் பிரியமானவன் அவன் என்றே கூறலாம். ஏனெனில் மார்த்தாண்டத்தைக் கண்டு அஞ்சி அவரை விட்டு சில அடிகள் தொலைவில் நின்றே பேசுபவர்கள் அவரின் குடும்பத்தினர் (ஒரே ஒருவரைத் தவிர!).

அங்கனம் இருக்க, ஏனோ துணிச்சலுடனும், சற்று துள்ளலுடனும் பேசும் செந்திலை மார்த்தாண்டத்திற்கு வெகுவாய் பிடித்துப் போனது.

அதற்குக் காரணம் செந்திலின் தந்தை மார்த்தாண்டத்தின் வீட்டில் பல வருடங்களாக ஓட்டுநராகப் பணி புரிந்து வந்தவர்.

பார்வையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓட்டுநர் பணியில் இருந்து அவர் விலக, தந்தைக்குப் பதில் வேலைக்குச் சேர்ந்த செந்திலின் உரிமையான பேச்சு மார்த்தாண்டத்திற்குப் பிடித்துப் போனது.

அதன் விளைவே இப்பொழுதுக் கூட நடந்து கொண்டிருக்கும் அவர்களின் உரையாடல்.

ஆயினும் அவன் கூற வருவதும் சரியே! இந்தப் பெண்ணால் தங்கள் குடும்பத்திற்குள் ஏற்படப் போகும் விவாதங்களும் சண்டைகளும் மார்த்தாண்டத்திற்கும் புரிந்தது.

அதுவும் இல்லாது ஊரே புகழும் மார்த்தாண்டத்திடம் ஒரு பழக்கம் இருந்தது. எந்தளவிற்கு அவர் கடவுளை நம்புவாரோ அதே அளவிற்கு ஜாதகம் ஜோதிடம் இராசிகட்டம் சாஸ்திரம் சம்பிரதாயம் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று அவற்றின் மீது அபரிதமான நம்பிக்கை வைத்திருப்பவர் அவர்.

ஒரு வேளை இந்தப் பெண் வந்த நேரம் ஏதாவது தீங்கு நேரிட்டால் இவள் மேல் பழிவருமோ என்றும் அவனுக்குள் சிறு கலக்கம்.

அத்துடன் இவரது கடவுள் பக்திக்கும், ஜோதிட நம்பிக்கைக்கும் நேர் எதிராயிற்றே அந்தச் சின்ன ஐயா!

ஆனால் அந்தச் சின்ன ஐயாவிற்குத் தந்தையாயிற்றே நான், என்னை மீறி அவனால் என்ன செய்ய முடியும் என்று எண்ணியவராய் இருக்கையில் தலைசாய்த்து மார்த்தாண்ட நாடார் அமர, ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் கார், மூன்று மாடிகள் கொண்ட அந்தப் பெரிய கிராமத்து வீட்டின் முன் நின்றது.

கார் நின்றதுமே இறங்கிய செந்தில் மார்த்தாண்டத்தின் புறம் வந்து கதவைத் திறக்க, எதிரில் தெரிந்த மிகப் பிரம்மாண்டமான வீட்டை விழிகள் அகலவிரிய பார்த்தவாறே இறங்கிய இளம்பெண்ணின் களையான அழகில், பயம் கலந்த ஆச்சரியத்துடன் விரிந்த அவளின் விழிகளின் வீச்சில், வீட்டின் வாயிலில் நின்றிருந்த மார்த்தாண்டத்தின் மனைவி முத்தம்மாளின் முகம் மலர்ந்தது.

'ஆத்தாடி! இவ்வளவு அழகும் ஒரு பொண்ணுக்கு இருக்குமா, என்ன?'

அவரது வாய் முணுமுணுக்க, வழியில் வரும்போதே, தனது இளைய மகனிடம் அலைபேசியில் தகவலை அனுப்பியிருந்த மார்த்தாண்டத்தின் அறிவுரைப்படி அந்த இளம்பெண்ணை நோக்கி நடந்து வந்த முத்தம்மாள் அவளது கையைப் பற்றினார்.

"வாம்மா. இது உன் வீடு மாதிரி.. தயங்காம வா.."

தான் பற்றிய பெண்ணவளின் கைகள் நடுங்குவதைக் கண்டு பரிவுடன் அவளை ஏறிட்டு நோக்கிய முத்தம்மாள் வீட்டிற்குள் அழைத்துச் செல்ல, மெல்ல அடியெடுத்து வைத்து நுழைந்தவளின் பார்வையின் வட்டத்தில் பட்டது, வீட்டின் நடுமுற்றத்தில், ஏறக்குறைய ஆள் உயர அளவில் சட்டத்திற்குள் அழகாய்ப் பதிக்கப்பட்ட மூன்று ஆண்களின் மகாப்பெரிய புகைப்படம்.

அவளின் பார்வை போகும் இடத்தைப் பார்த்தவாறே தானும் வீட்டினுள் நுழைந்த மார்த்தாண்டம், புகைப்படத்தைப் பார்த்தவாறே நின்றிருப்பவளின் அருகில் நெருங்கியவர், "இவங்க என்னுடைய பசங்க. இது என் மூத்த மகன், சின்ன ஐயான்னு சொல்வாங்க. இது ரெண்டாவது மகன், பேரு பால முருகன், கூப்புடுறது பாலா. இவன் என் கடைசி மகன், பேரு கார்த்திகேயன். கார்த்தின்னு கூப்புடுவோம்." என்றவர் சற்று நிறுத்த, அவரைத் தொடர்ந்து, "இவன் தான் எங்க மூத்த மகன். என் மாமனாருடைய பேருலப் பாதியை இவனுக்கு வச்சிருக்கோம், அதனால் நான் இவனை வேலுன்னு தான் கூப்புடுவேன். வேலைப்பார்க்குற இடத்துலயும், இவனுக்கு ரொம்பப் பழக்கமானவங்களும் இவனை முதல் பேரு சொல்லித்தான் கூப்புடுவாங்க. ஆனால் இங்க எல்லாரும் சின்ன ஐயான்னு கூப்பிடுவாங்க.." என்று முடித்தார் முத்தமாள்.

'ஆக, அந்தச் சின்ன ஐயா இவர் தானா?'

உள்ளம் தனக்குள்ளே கேள்விக் கேட்க, மார்த்தாண்டத்தை அவள் திரும்பிப் பார்க்கவும் அவரின் முகத்தில் இருந்த சஞ்சலத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது, இவருக்கும் அவரது மூத்த மகனுக்கும் இடையில் ஏதோ பிணக்கம் இருக்கின்றது என்று.

மீண்டும் புகைப்படத்தின் மீது பார்வையைப் பதிக்க, அவளைச் சற்று நெருங்கிய, ஏறக்குறைய அவளது வயதே இருந்த ஒரு வாலிபன்,

"நீங்க நினைக்கிறது கரெக்ட். எங்க அப்பாவுக்கும் பெரிய அண்ணாவுக்கும் ஏலாப் பொருத்தம். அப்பா சொல்றதை அண்ணா கேட்கவே மாட்டாரு. அதாவது போலீஸ் வேலைக்குப் போகாதன்னு எவ்வளவோ தடவை அப்பா சொல்லியும் பிடிவாதமா அண்ணா ஐபிஎஸ் படிச்சு பாசாகி, இப்போ தூத்துக்குடிக்கே ASP-அ ட்ரான்ஸ்ஃபராகி வந்திருக்கார். அவர் பேரு சக்திவேல். சக்தி ஆறுமுகம் நாடாருங்கிறது எங்க தாத்தாவோட பேரு. அதுல சக்தியை மட்டும் எடுத்து, அதோட வேலைச் சேர்த்து, சக்திவேல் ஆக்கிட்டாங்க. மாமனார் பேரை சொல்லக் கூடாதுன்னு எங்க அம்மா, பெரியண்ணாவை வேலுன்னு தான் சொல்வாங்க. ஆனால் சக்தின்னு சொன்னாதான் நிறையப் பேருக்குத் தெரியும்." என்று படபடவெனப் பேசியவனை அந்த இளம்பெண்ணிற்குப் பிடித்துப் போனது.

அவனை நோக்கித் திரும்பியவள், "நீங்க தான் கார்த்தியா?" எனவும், "யெஸ், அடியேன் தான்." என்றவாறே அவளுக்குக் கைக்குலுக்கும் எண்ணத்துடன் கையை நீட்டினான்.

ஆனால் அவனது கரத்தைப் பற்றாது வெறும் புன்னகையை மட்டும் அவள் கொடுக்க, மற்றொரு கையைக் கொண்டு தனக்குத்தானே குலுக்கிக் கொண்டவன், "இட்ஸ் ஒகே. போகப் போக உங்களுக்கு என்னைப் பற்றிப் புரியும். அப்ப நீங்களே வந்து ஹேண்ட் ஷேக் பண்ணுவீங்க.." என்ற நேரத்தில் முத்தம்மாள் அவர்களை நெருங்கினார்.

"வாம்மா. உள்ள போலாம்."

அவர் அழைக்க அவரைப் பின் தொடர்ந்து சென்றவளின் முகம் அவளையும் அறியாது அந்த ஆளுரப் புகைப்படத்தை நோக்கித் திரும்பியது.

அங்கு ஆறடிக்கும் மேல் உயரத்துடன் மிடுக்காய் நின்று கொண்டிருந்த சக்திவேலின் பாறையாய் இறுகிய முகம் அவனது குணாதிசயத்தை அப்பட்டமாய்க் காட்ட, அவளின் நெஞ்சுக்குள் பொருள்புரியாத பயம் ஒன்று சூழ்ந்தது.

தொடரும்.

(அடுத்த அத்தியாயம் செவ்வாய்கிழமை (22/04/2025) அன்று)
 
Last edited:

Tiny

New member
Too gud mam epo arimakalli vettaiamazon la publish pannuving naa unga Ella stroirs Amazon la tha padichen epo tha sitela start panra waiting ver level writing
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top