JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

2-anamikavaagiya naan

saaral

Well-known member
அனாமிகா -2



"அக்கா அந்த பொண்ணு வந்திருக்கு , மாப்பிள்ளை வீட்டுக்கு எதுவோ நெருங்கின சொந்தமாம் " லலிதா படபடப்புடன் ஜெயாவிடம் கூறினார் .



"எந்த பொண்ணு லலிதா ?" புரியாமல் கேட்டார் ஜெயா .



"அக்கா அதான் அந்த பொண்ணு அனாமிகா !! "



சற்றே ஆச்சர்யமாக பார்த்தார் ஜெயா .



"சரி வந்துட்டு போகட்டும் , நமக்கென்ன " பொதுப்படையாக சொன்னாலும் அந்த பெண்ணை பார்க்கும் ஆவல் ஜெயாவின் பார்வையிலும் .



அங்கு மேடைக்கு கீழே நின்று ஆதியுடன் பேசிக்கொண்டிருந்தாள் அவள் . இலக்கியாவின் சொந்தங்களில் சிலரின் பார்வை தன்னையே உற்று பார்ப்பது தெரிந்தும் அமைதியாக நின்று கொண்டிருந்தாள் .



வெளியே உறைந்து நின்றிருந்த சதீஷை உலுக்கினான் சிவா .



"என்ன சிவா ?" எதையும் கண்டுகொள்ள முடியவில்லை அவன் முகத்தினில் .



"அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா ?" என்றான் சதீஷ் .



"தெர்ல " என்றான் சிவா .



......................................



வரவேற்பு நன்றாகவே நடந்து முடிந்தது . நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே சுற்றி இருந்தனர் . ஆதி உண்டுவிட்டு ஒரு முக்கியமான அழைப்பு வந்தமையால் வெளியே வந்தான் .



அழைப்பை பேசி முடித்து உள்ளே செல்ல திரும்பியவன் காதில் அவர்கள் பேசுவது ஏன் கேட்க வேண்டும் , இதுதான் விதியோ .



வேகமாக உள்ளே வந்தவன் அனாமிகாவை தேடினான் . அவளைக் காணவில்லை .

அன்னையிடம் சென்றவன் "ம்மா அனாமிகா எங்க ?" சற்றே உரக்க கேட்டான் .



கேட்டான், கேட்டவன் சுற்றியும் பார்வையை சுழல விட்டான் ...அங்கு இருப்பவர் அனைவரையும் உற்று நோக்கினான் . அதற்குள் பெண் வீட்டில் அனைவர்க்கும் அனாமிகா அங்கே இருப்பது தெரிந்தே இருந்தது .



"அவ உங்க அண்ணா ரூம்ல இருக்கா ...இப்பவே பெங்களூரு கிளம்பறாளாம் , அத்தான் போன் பன்னாங்க சொல்றா , நாளைக்கு பிரணவ் கல்யாணத்துக்கு வருவான்னு சொல்லிட்டு போனா " கூறி சென்றுவிட்டார் ஆதியின் அன்னை .



வேகமாக படி ஏறி அண்ணனின் அறைக்குள் செல்ல எத்தனித்தவன் அனாமிகா வெளி வருவதை கண்டு அமைதியாக நின்றான் .



"ஹே ஆதி நான் கிளம்பறேன் " இன்முகமாகவே பேசத்தொடங்கினாள் .



"எங்க ?" ஒருமாதிரி குரலில் வினவினான் அவன் .



"வீட்டுக்கு அப்பறம் பெங்களூர்க்கு "



"நாளைக்கு அபிக்கு கல்யாணம் அனாமிகா " அவன் குரல் பேதத்தில் அவனை உற்று நோக்கினாள் அவள் .





"என்னால இங்க இருக்க முடியாது ஆதி " நேராக சொன்னாள் .



"ஏன் ?"



"நீ பேசுறதுலயே தெரியுது உனக்கு ஏதோ தெரிஞ்சிருச்சு அப்பறம் என்ன ?" அவள் அவனை கண்டுகொண்டாள் .



"இதுக்காக நீ வராம இருக்கணுமா அனாமிகா .லிசென் நாட்கள் கடந்து போயாச்சு இத கூட உன்னால பேஸ் பண்ண முடியாதா " காட்டமாகவே கேட்டான் ஆதி .



"விடு இதெல்லாம் யோசிக்காத , எனக்கு பிடிக்கலை நானே நிம்மதியா இருக்கணும்னு சொல்லி தான் எல்லாரையும் விட்டு தள்ளி இருக்கேன் " சொல்லிக்கொண்டே நகர்ந்தாள் அவள் .



அவனும் அதற்கு மேல் அதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை "பிரணவ் அப்பறம் அவன் வொய்ப் வராங்கல்ல நாளைக்கு ?"



"ஹ்ம்ம் ஆமா இங்க பார் ஆதி சித்தி அப்பறம் சித்தப்பாக்கு எதுவும் தெரியாது தேவை இல்லாம எதையும் சொல்லாத ஓகே " எச்சரிக்கையுடன் சொன்னாள் அவள் .



"எப்பயுமே தெரியாமயா போய்டும் ?"



"தெரியுற அப்ப தெரியட்டும் இப்ப கல்யாணம் நல்ல விதமா நடக்கட்டும் ..." முடிவாக கூறி வெளியே வந்தாள் அனாமிகா .



"சரி நீ போய் வேலைய பார் நான் கிளம்பறேன் " ஆதியை தள்ளாத குறையாக உள்ளே அனுப்பிவிட்டு வெளியே வந்தாள் அவள் .



நேராக தனது இருசக்கர வாகனத்தின் அருகே சென்று அதை உயிர்ப்பிக்க முயற்சி செய்தாள் , வாகனமோ மக்கர் செய்தது . மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தாள் முடியவில்லை . அப்பொழுது ஒரு வலிய கரம் ஒன்று அந்த வாகனத்தி கைப்பிடியை பற்றியது .



நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் கூறாமல் மீண்டும் தன் முயற்சியில் இறங்கினாள் . அந்த வலிய கரத்திற்கான சொந்தக்காரனோ "நா ட்ரை பண்றேன் " என்றான் .



மெதுவாக வண்டிய விட்டு இறங்கி நின்றாள் அவள் . அவன் அந்த வாகனத்தின் பக்கவாட்டில் இருந்த கிக்கர் கொண்டு பல முறை உதைத்து அதை கிளப்பினான் .



நன்றி என்ற சொல்லோ எதுவும் இல்லாமல் அமைதியாக மீண்டும் வாகனத்தில் அமர்ந்து அவன் கையை மட்டும் நோக்கினாள் . அவனின் கை தானாக விலகிக்கொண்டது .



"எதுக்கு இந்த ராத்திரி நேரத்துல டூ வீலர் ,அதுவும் தனியா ?" அவனின் இந்த கேள்வியில் அவனை சற்றே உற்று நோக்கி முன்னே நகர எத்தனித்தாள் . ஆனால் அவனோ எந்த தயிரியத்தில் அதை செய்தானோ பட்டென்று அந்த வாகனத்தின் பிரேக்கை அழுத்தினான் .



கடுப்புடன் அனாமிகா ஏதோ திட்ட தொடங்கும் முன் வேகமாக அவ்விடம் வந்த ஆதி "அனா என்னாச்சு ?" கேள்வி அவளிடம் ஆனால் பார்வையோ எதிரில் இருப்பவனிடம் .



"நத்திங் ஆதி நான் கிளம்பறேன் " ஆதியின் வருகையில் பிரேக் விடுபட்டதால் வேகமாக கிளம்பிச் சென்றாள் .



"அனாமிகா இந்த நேரத்துல தனியா போகவிடறீங்க ?" அந்த வலிய கரத்தின் சொந்தக்காரன் சதீஷ், ஆதியை நோக்கி கேட்டான் .



"அவ தனியா போய்ப்பா ...நீங்க உங்க வேலையை பாருங்க " பட்டென்று கூறினான் ஆதி .



"இல்லை அவ ஹஸ்பண்ட் இல்ல யாராச்சும் வந்திருந்தா போயிருக்கலாம் " அவளுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று அவன் அறிந்தே ஆக வேண்டும் என்று எண்ணினான் .



"சதீஷ் அவளை அவ ஹஸ்பண்ட் கேர் பண்ணிக்குவார் நீங்க போகலாம் " சொல்லிவிட்டு அவனை முறைத்துக்கொண்டு நகர்ந்தான் ஆதி .



அங்கே வந்த சிவா "சதீஷ் என்ன பண்ற நீ ?" அதட்டலுடன் கேட்டான் .



"ப்ச் " சிவா கேட்பது அவனுக்கு புரியவில்லை . அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதிலே உழன்றான் அவன் .



....................................................................................



அடுத்தநாள் திருமணம் நல்லவிதமாகவே நடந்தேறியது . சதீஷின் கண்கள் அவளின் வரவை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருந்தது ஆனால் அவள் வரவில்லை அவளின் தமயன் பிரணவ் அவனின் மனைவி ராதா தான் வந்திருந்தனர் . அவர்களுக்கு சதீஷை அடையாளம் தெரியவில்லை .





ஆதியின் குடும்பமும் அனாமிகாவின் குடும்பமும் அவ்வளோ நெருங்கின உறவு இல்லை ஆனால் இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் நெருங்கிய சொந்தமாகிவிட்டனர் .



சுப்புலெட்சுமியும் ,சுரேஷும் மாப்பிள்ளை வீட்டார் என்ன சொல்வார்களோ என்று பயந்தனர் , ஆனால் மாப்பிள்ளை வீட்டில் எதுவும் தெரியாதது போலவே நடந்துகொண்டனர் . உண்மையும் அதுதான், ஆதியை தவிர்த்து யாருக்கும் எதுவும் தெரியாது .



ஆதி சதீஷை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் முறைத்துக்கொண்டு செல்வான் .



சொக்கநாதன் பாக்கியம் கூட அனாமிகாவை பார்த்து தடுமாறினர் .



கல்யாணம் முடிந்து இலக்கியா அவளின் புகுந்த வீடு சென்றாள் . சதீஷ் மனத்தினுள்ளே உழன்றுகொண்டிருந்தான் . அவனால் எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை .



அவனின் முகம் கண்டு பயந்துவிட்டார் ஜெயா . எங்கே மகன் ஏதேனும் கூறிவிடுவானோ என்று .



சதீஷ் அவரை எதிர்த்து எதுவும் கூறியது இல்லை அதே போல் இன்றும் மௌனம் காத்தான் .



ராஜேஷ் கேப் ஏற்பாடு செய்ய நால்வரும் கிளம்பி தங்கள் வீட்டிற்கு சென்றனர் . சதீஷின் மனம் ஒரு நிலையில் இல்லை . அவளை பார்க்காமல் இருந்திருந்தாலாவது சரி ஆனால் இப்பொழுது அவள் எப்படி வாழ்கிறாள் பார்க்க வேண்டும் என்று எண்ணினான் .



....................................................



சிவா தனது பைக்கை செலுத்திக் கொண்டிருக்க , சதீஷ் பார்வையை சுழலவிட்டுக்கொண்டே பின் அமர்ந்து வந்தான் .



தென்னுர் அருகே வீடுகள் நிறைந்த ஒரு குறிப்பிட்ட பகுதியுனுள் சுற்றிக்கொண்டிருக்கிறான் .



"சதீஷ் இது தேவை இல்லாத வேலை , அனாமிகா இந்த ஏரியா சரி பட் அவ வேலை பாக்கிற ஊருக்கோ இல்லை அவள் கணவனோடவோ போயிருந்த என்ன பண்ணுவ ?" ஒரு மணி நேரமாக சுற்றிக்கொண்டிருக்கும் கடுப்பில் கேட்டான் .



"எனக்கு என்னமோ அவ இங்க தான் இருக்கணும் தோணுது சிவா நீ பேசாம போ ...அவ வீடு சரியாய் எதுன்னு தெரில இல்லைனா இந்நேரம் சொல்லிருப்பேன் " சலிப்புடன் பதில் அளித்தான் சதீஷ் .



அப்பொழுது அங்கே நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வீறிட்டு அழுதது அதன் அழுகை கண்டு வேகமாக வாகனத்தை நிறுத்தி என்ன வென்று விசாரிக்க இறங்கினர் இருவரும் .



"ஹாய் குட்டி என்னாச்சு எதுக்கு அழறீங்க " எங்கோ பார்த்து நின்று கொண்டிருந்த குழந்தை இவன் குரலில் திரும்பி யோசனையுடன் பார்த்தது .



"ஒய் பாப்பா என்ன யோசனை , அதான் மாமா என்னனு கேக்கறார்ல ?" சிவா அந்த குழந்தையின் முக ஜாலத்தை கண்டு மிரட்டுவது போல் கூறினான் .



"நீ என்ன அந்த பேட் அங்கிள் மாதிரி தூக்கிட்டு போகத்தான வந்த, இரு போலீஸ் கூபிட்றேன் " சிவாவை முறைத்துக்கொண்டு கூறியது அந்த சிட்டு



"ஏதே ! நா தூக்கிட்டு போக வந்தேன் ஆத்தி ...சதீஷ் வாடா போய்டலாம் " சிவா அரண்டுவிட்டான் .



"டேய் சும்மா இரு ...குட்டிமா யார் உங்கள தூக்கிட்டு போக பார்த்தது ...வீடு எங்க ?" சதீஷ் பொறுமையாக கேள்வி கேட்டான் .



"அது ஒரு பேட் கய் அனு சொல்லிக்கொடுத்த மாதிரி அவன் பேசனப்பவே பிடிக்கலை , சாப்பிட ஏதோ கொடுக்க பார்த்தான் ...கத்தினேன் ஓடிட்டான் " கையையும் கண்ணையும் அசைத்து அழகாக கூறினாள் அவள் .



"ஒஹ் சரி உங்க வீடு எங்க ?"



சதீஷ் கேட்டதை ஒரு நொடி யோசித்து பின் பதில் சொன்னாள் அந்த பெண் "அதோ அந்த ப்ளூ கலர் வீடு "



"உங்கள கூட்டிட்டு போய் விட்டுடவா நீங்க இங்க அம்மா அப்பா இல்லாம விளையாண்டா இப்படித்தான் பேட் கய் வருவாங்க " சதீஷ் பேட் கய் என்று கூறியதும் அந்த வாண்டின் கண் சிவாவிடம் சென்றது .



"ஐயோ " என்று நெஞ்சை பிடித்தான் அவன் .



சதீஷ் புன்னகையுடன் "நான் உங்களை தொடலை , நீங்க வீட்டுக்குள்ள போறவரைக்கும் கூட வரேன் அப்பறம் கிளம்பிடுவேன் ஓகே ...இல்லைனா அந்த பேட் கய் திரும்ப வந்திடுவான் "



"ஹ்ம்ம் ஓகே " பெரும் யோசனைக்கு பிறகே பதில் தந்தாள் அவள் .



வீட்டை நெருங்கவும் "அனு " என்று கத்திக்கொண்டே உள்ளே ஓடிவிட்டாள் குழந்தை .



சதீஷ் அங்கிருந்த அழைப்பு மணியை அழுத்த உள்ளே இருந்து வெளியில் வந்தார் ஒரு பெரியவர் . அவருக்கு நிச்சயம் அறுபத்திற்கு நெருங்கி வயதிருக்கும் .



அவரை கண்ட சதீஷ் யோசனையுடன் "நீங்க ?" என்று இழுத்தான் அவனின் சந்தேகம் உறுதியாகுமா ?



"தம்பி ..! நீங்க இங்க எப்படி " அதிர்ச்சியுடன் வினவினார் அவர் .



சதீஷிற்கு தெரிந்து விட்டது இவர் ராஜன் அனாமிகாவின் தந்தை "இந்த பக்கம் ஒரு வேலையா வந்தோம் அப்ப , உள்ள போனாளே அந்த குழந்தை அழுதுட்டு நின்னா என்னனு கேட்டப்ப யாரோ பேட் கய் வந்தாங்க சொன்னா சரி சொல்லிவிட்டுட்டு போலாமேன்னு... " இழுத்தான் அவன் .



சிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை அவன் அனாமிகாவை புகைப்படத்தில் மட்டுமே கண்டிருக்கிறேன் . அவளின் குடும்பம் பற்றி அவனிற்கு ஏதும் தெரியாது .



"உள்ள வாங்க தம்பி " இருவரையும் அழைத்தார் . உள்ளே செல்லும் முன் யாரென்று கேட்டு தெரிந்துகொண்டான் சிவா .



சிவாவின் மனதில் 'இவனுக்கு நேரம் அமோகமா இருக்கும் போலயே கும்பிட போன தெய்வம் குழந்தை ரூபத்தில் கூட்டிட்டு வந்திருக்கே ' மனதினுள் சொல்லிக்கொண்டான் .



"அனு இங்க வாடா " ராஜனின் அழைப்பிற்கு வெளி வந்தவள் கூடத்தில் இருக்கும் இருவரை கண்டு புன்னகை புரிந்தாள் .



சிவா வெறும் தலை அசைத்தான் , சதீஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் . அதை அறிந்த அவளும் தந்தையிடம் பார்வையை திருப்பினாள் .



"சொல்லுங்க ப்பா "



"இவங்களுக்கு காபி போட்டு கொண்டுவாடா " என்று அவர் கூறும் பொழுதே "அனு " என்று கத்திக்கொண்டு ஓடிவந்தாள் குழந்தை .



"அனு இந்த அங்கிள் தான் கூட வந்தாங்க இவங்கள பார்த்து தான் அந்த பேட் கய் ஓடிட்டான் " கதை கூறினாள் .



அப்பொழுது ராஜனின் அலைபேசி அடிக்க உள்ளே எழுந்து சென்றார் அவர் .



"இந்த குழந்தை ?" கேள்வியாக இழுத்தான் சதீஷ் . அவனிற்கு அவளை பற்றி அவளின் வாழ்கை பற்றி தெரிந்தே ஆக வேண்டும் என்று ஒரு வெறி .



"என் குழந்தை , எங்க வீட்டுப் பெண் தான் " என்று கூறி அடுக்கலைக்குள் நகர்ந்துவிட்டாள் .



ராஜன் வெளியே வந்தார் " அது என் பேத்தி தான் தம்பி , பெயர் ஸ்ரீ லட்சுமி " என்று அங்கு அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த குழந்தை காட்டி கூறினார் .



"ஒஹ் சரி அங்கிள் "



"ஸ்ரீ மாமாக்கு தேங்க்ஸ் சொல்லு " என்றார் ராஜன் .



சிரியவளோ நேராக சதீஷிடம் சென்று "தேங்க்ஸ் மாமா " என்றாள் .



"உங்க பெயர் என்ன ?" தெரிந்தே கேட்டான் சதீஷ் . சிவா அனைத்திற்கும் மௌன சாட்சியாக இருந்தான் ஒருவேளை இதன் பிறகாவது திருமணத்திற்கு ஒத்துகொள்வான இவன் என்று அமைதிகாத்தான் .



"ஸ்ரீ லட்சுமி , அம் போர் அர்ஸ் ஓல்ட் "என்றாள் .



"குட் குட் ஸ்கூல் போறீங்களா ?"



"ஹ்ம்ம் ஆமா எல் கே ஜி " என்றாள் .



சரியாக அனாமிகாவும் காபி எடுத்து வர அதை நிமிராமல் குடித்துவிட்டு கிளம்பினான் சதீஷ் . சதீஷின் பார்வை அதன் பிறகு அனாமிகாவை தீண்டவில்லை . ஆனால் அவளோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் . என் குழந்தை என்று அவள் சொன்ன நொடியில் இருந்து அவனின் முக மாற்றங்களைத்தான் அவதானித்துக் கொண்டிருக்கிறாள் .



.....................................................................



வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது சிவா எவ்வளவோ எடுத்து கூறிக்கொண்டே வந்தான் .



"சதீஷ் இங்க பார் அந்த பொண்ணு நல்லா இருக்கா , நீ தான் தனி மரமா நிக்கிற ஒழுங்கா வீட்ல சொல்லி சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ டா " சிவா திரும்ப திரும்ப இதையே சொல்ல சலித்தது சதீஷிற்கு .



"ப்ச் "என்று சடைத்துக்கொண்டான் அவன் .



அவனின் சலிப்பில் பொங்கிய சிவா "சதீஷ் லிசன் வர வரன் எல்லாத்தையும் நீ தட்டி கழிக்கற இல்லைனா பெரியம்மா தட்டி விடறாங்க ...உனக்கு ஒன்னும் சின்ன வயசு இல்ல .. முப்பது ஆயிடுச்சு "



இன்னும் சதீஷிடம் பதில் இல்லை என்று கண்ணாடியின் வழியே அவனை பார்த்தான் . சதீஷின் பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது .



"டேய் உனக்கும் அந்த பொண்ணு அனாமிகாவிற்கும் நிச்சயம் வரை போய் நின்னது எல்லாம் சரி ...அது நடந்து ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் அதையே யோசிச்சுட்டு இருப்பயா ?" கடுப்புடன் கேட்டான் சிவா .



சதீஷ் புருவங்களை நெறித்தான் .அவனிடம் இருந்து பதில் இல்லை என்று சிவா மேலும் தொடர்ந்தான் .



"அந்த பொண்ணுக்கு நாலு வயசுல ஒரு குழந்தை இருக்குடா இன்னும் பழசையே நினைச்சுட்டு " சிவா சொல்லி முடிப்பதற்குள் "சிவா வண்டியை ஓரங்கட்டு " .



முகம் கொள்ளா புன்னகையுடன் தனக்கு எதிரில் நிற்கும் சதீஷை வினோதமாக பார்த்தான் சிவா .



"டேய் என்னாச்சு ?" பேய் பிடிச்சிடுச்சோ என்று பயந்தான் சிவா .



"எனக்கும் அனாமிகாவுக்கும் கல்யாண ஏற்பாடு எப்ப பண்ணாங்க ?" அதே புன்னகையுடன் கேட்டான் சதீஷ் .



"அது ஆச்சு ரெண்டு வருஷம் " இதயேன் கேக்கிறன் என்று நொந்துகொண்டே கூறினான் சிவா .



"குழந்தை வயசு என்ன ?" சதீஷ் அடுத்த கேள்வி கேட்டான் .



"நாலு " சிவா புரியாமல் பார்த்தான் .



"தட்ஸ் இட் .... டேய் அது அவ குழந்தை இல்லைடா ரெண்டு வருஷ கேப்ல எப்படி நாலு வயசு குழந்தை ?" விரிந்த புன்னகை அவனிடத்தில் .



"லாஜிக் கரெக்ட் தான் ...ஆனால் அந்த பெரிய மனுசன் சொன்னாரே அவர் பேத்தின்னு " சிவா குழம்பினான் .



"அது அவ அண்ணன் பிரணவ் குழைந்தை டா .... அங்க ஒரு போட்டோல எல்லாரும் இருந்தாங்க ஆனால் இவள் பக்கத்துல யாரும் இல்ல சோ இவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல " சதீஷ் அகமும் புறமும் மகிழ கூறினான் .



'ஆத்தி இனி ஜெயா பெரிம்மாகிட்ட சிக்கிட்டு நான் முழிக்கணுமா ...' சிவாவின் கவலை அவனிற்கு. சதீஷ் எது செய்தலும் சிறுவயதில் இருந்து வாங்கி கட்டிக்கொள்வது சிவா தான் . எங்கே மகனை நேராக திட்டினால் தன்னை வெறுத்துவிடுவானோ என்று பயந்தார் . .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top