அத்தியாயம் - 27
அர்ஜூனும் திவ்யாவும் காதலோடு கூடிய கூடலும் மகிழ்ச்சியுமாகக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிய நிலையில் ஒரு நாள் காலையில் இருந்தே திவ்யாவிற்குத் தலை சுற்றுவது போல் இருந்தது....
ஒரு வேளை காலை டிஃபன் உண்டால் சரியாகி விடும் போல் என்று நினைத்தவள் அனைவரும் அவரவர் வேலையாக வெளியே செல்ல, தன் மாமியாருடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிட விரும்ப ஆனால் அவரோ அவளை உண்ணச் சொன்னவர் தனக்குக் கொஞ்சம் அல்லியிடம் காஃபி மட்டும் போட்டுக் கொடுக்கச் சொல்ல, சரி என்றவள் தானே காபி போட்டுக் கொண்டு வந்தாள்...
காபியை அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பியவளுக்கு மீண்டும் தலை சுற்றுவது போல் இருக்க ஸ்ரீயின் அருகிலேயே சட்டென்று தலையைப் பிடித்துக் கொண்டே அமர்ந்துவிட்டவளைப் பார்த்தவர் என்னவென்று கேட்க,
"கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருக்கு அத்தை.... பசியா என்னன்னு தெரியலை" எனவும்,
அவளை எழுப்பியவர் டைனிங் டேபிளில் அவளை அமர வைத்து பரிமாற ஆரம்பித்தார்...
ஒரு வாய் உணவை எடுத்து வைத்தவளுக்குக் குமட்டிக் கொண்டு வர, வாயை மூடிக் கொண்டே பின்கட்டிற்கு ஓடியவளை தொடர்ந்து அவள் பின்னேயே ஓடிய ஸ்ரீக்கு எதுவோ புரிவது போல் இருந்தது...
சில நாட்களாகவே திவ்யாவிடம் ஒரு அசதி தெரிந்திருந்தது....
முகத்தில் ஏதோ களைப்பும் சோர்வும் படர்ந்திருக்க ஒரு வேளை "அதுவாக" இருக்குமோ என்று சில நேரங்களில் ஸ்ரீக்கும் தோன்றியிருந்தாலும் அர்ஜூனும் திவ்யாவும் மனம் ஒத்து வாழ துவங்கியே கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தான் ஆகியிருந்ததால் அதற்குள் அர்ஜூன் இதற்குத் தயாராக இருப்பானா என்ற குழப்பமும் இருந்து வந்தது...
ஆனால் இன்று திவ்யாவின் மயக்கமும், களைப்பும், நிலையும் கிட்டத்தட்ட அவர் நினைத்திருந்ததை உறுதிப் படுத்த படபடக்கும் நெஞ்சத்துடன் மனதிற்குள் "முருகா... இது நான் எதிர்பார்க்கிற விஷயமாத் தான் இருக்கனும்" என்று மனம் உருக வேண்டிக் கொண்டு தவிப்புடன்....
"திவ்யா, நாள் எதுவும் தவறிப் போச்சா? என்றார்....
அவரின் கேள்வியில் சட்டென்று அவரை நிமிர்ந்துப் பார்த்தவளின் முகத்தில் யோசனையும் எதிர்பார்ப்பும் போட்டிப் போட...
"போன மாசம் பீரியட்ஸ் ஆகலை அத்தை.... இந்த மாதம் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழிந்தால் தான் தெரியும்" என்றாள் தளர்ந்த குரலில்...
மருமகளின் பதிலில் ஸ்ரீயின் வயிற்றில் பால் வார்த்தது போல் இருக்க, உள்ளமும் மகிழ்ச்சியில் திளைக்க, அவரின் முகம் அக மகிழ்ந்து பூரித்துப் போனது...
மனமொத்த ஆத்மார்த்தமான நட்பு கொண்டிருந்த இரு தோழிகள் இருவரும் ஒரே நேரத்தில் பாட்டி ஆனால்?
அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அவளின் கரம் பற்றி அவள் எழ உதவி செய்தவர்...
"சரி திவ்யா, கிளம்பு... டாக்டரிடம் போகலாம்..." என்றார்.....
"வேண்டாம் அத்தை... இன்னும் இரண்டு மூன்று நாள் கழிச்சுப் போகலாமே" என்று தயங்கியவளை மீண்டும் வற்புறுத்தி அழைக்க, அவரின் பேச்சை மறுக்க முடியாமல் கிளம்பியவள் தெய்வானையிடமும் அல்லியிடமும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள்...
அவர்கள் இருவரும் சென்றது அவர்களின் குடும்ப மருத்துவரின் மருத்துவமனைக்கு... அவரின் மனைவி சென்னையிலேயே மிகப் பிரபலமான பெண்கள் மருத்துவர்...
மருத்துவமனையை அடைந்ததில் இருந்து திவ்யாவின் மனதில் ஏதோ கலக்கமாக இருக்க, நெஞ்சுத் துடிப்பும் அதிகரிக்க, அவளின் படபடப்பு அவள் முகத்திலும் அப்பட்டமாகத் தெரியவும், மாமியாரை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு வந்தவளை ஆறுதல் படுத்திக் கொண்டே சென்றவரின் மனதில் அப்படி ஒரு சந்தோஷம்...
திவ்யாவை பரிசோதித்த மருத்துவர் மாமியார் மருமகளின் மனம் குளிரும் வகையில் அவள் பொன்னான வயிற்றில் அவர்களின் வாரிசு உதித்திருக்கும் அந்தச் சந்தோசச் செய்தியைச் சொன்னவர் அவள் ஏழு வார கர்ப்பமாக இருப்பதை உறுதிப் படுத்த, உலகமே தன் கைக்குள் வந்துவிட்ட பூரிப்பில் ஆட்கொள்ளப்பட்ட திவ்யாவிற்கு அந்த நிமிடமே அர்ஜூனைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது...
முதல் முறை கர்ப்பம் தரித்திருப்பதாலும், பத்தொன்பது வயதே ஆனவள் என்பதாலும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என்று அறிவுரைகள் வழங்கிய மருத்துவர், ஊட்டசத்து மாத்திரைகள், அவளுடைய மாதாந்திர பரிசோதனைகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
ஒரு வழியாக அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்து வெளியே இருவரும் வர, திவ்யா தயங்கியவாறே தன் மாமியாரைப் பார்த்தவள்....
"அத்தை, இந்த விஷயத்தை யாரிடமும் இப்போ சொல்ல வேண்டாம்..... தெய்வானைக்கா, அல்லியக்காவிடம் கூடச் சொல்ல வேண்டாம்" என்று கூற, ஏன் என்பது போல் ஸ்ரீ பார்க்கவும்,
"இல்லத்த... எனக்கு இந்த விஷயத்தை முதல்ல அவங்கக் கிட்ட தான் சொல்லனும்னு ஆசையா இருக்கு... அதுவும் ஃபோன்ல இல்லை... அவங்க இன்னைக்கு நைட் வீட்டிற்கு வந்தவுடன் நேரில் சொல்லனும் போல் இருக்கு" என்றாள் முகத்தில் அத்தனை நாணத்தைச் சுமந்து...
எந்த ஒரு பெண்ணிற்குமே தான் கர்ப்பமாயிருப்பதைத் தன் கணவனிடம் தானே முதன் முதலாகச் சொல்ல ஆசைப்படுவாள், "சரிம்மா" என்றவர் மனம் முழுக்கத் தங்கள் வீட்டில் விடி வெள்ளி போல் இன்னும் எட்டு மாதங்களில் தோன்ற போகும் குலக் கொழுந்தின் மீதே இருந்தது.
அன்று முழுவதும் தன் கணவன் எப்பொழுது வருவான் என்று திவ்யா ஏங்கி கொண்டிருக்க, ஸ்ரீயோ தன் கணவருக்கும், கலாவிற்கும் மற்ற அனைவருக்கும் இந்த மகிழ்ச்சியான செய்தியை எப்பொழுது சொல்வது என்று காத்துக் கொண்டிருந்தார்...
உள்ளம் முழுவதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க, கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டவள் தன் மாமியாரிடம் கேட்க, அவளைத் தனியாக அனுப்ப யோசித்தவர் அவளைத் தடுக்காமல் மஹாவையும் துணைக்கு அனுப்பினார்...
இன்று அதி காலையிலேயே தங்களின் தொழிற்சாலைகளைப் பார்வையிடுவதற்கென்று சென்ற அர்ஜூனிற்கு மதிய உணவு அருந்த கூட நேரம் கிடைக்காது சுற்றிக் கொண்டிருந்தவன், அலுவலகத்திலும் வேலைகள் தேங்கி இருப்பதை அறிந்து மதியத்திற்கு மேல் அலுவலகம் சென்றவனை வேலை கழுத்தை நெறிக்க, மனமும் உடலும் அசந்துப் போனதில் அந்த நிமிடமே திவ்யாவைக் காண வேண்டும் என்று தோன்ற வீட்டிற்குச் செல்ல முனைந்தவன் கதிரை அழைத்தான்....
"கதிர், வேறு ஏதாவது இன்னைக்கே முடிக்க வேண்டிய வொர்க்ஸ் பெண்டிங்கில இருக்கா?"
"இல்ல சார்... மீதியை நாளைக்கு பார்த்துக்கலாம் "
"ஓகே கதிர்... தென் லெட் மி லீவ் [Ok, then let me leave]" என்றவன் கிளம்பியதும் வீட்டிற்கு வரும் வழியில் திவ்யாவை அழைக்க, கணவனின் அழைப்பைக் கண்டவளுக்கு அவனின் நெஞ்சில் சாய்ந்து அவன் தந்தையாகப் போகும் தித்திப்பான செய்தியை சொல்ல மனமும் நாவும் துடித்தது....
ஆனால் இந்தப் பொன்னான செய்தியை நேரில் தான் சொல்ல வேண்டும், சொல்லும் பொழுது தன் கணவனின் முகத்தில் தோன்றும் மாறுதல்களைக் கண் கொண்டு பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்பியவள் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு தான் மஹாவுடன் அஷ்டலெட்சுமி கோவிலில் இருப்பதாகக் கூறினாள்...
ஏனோ அர்ஜூனின் மனதில் அப்பொழுதே அவளைக் காண வேண்டும் போல் ஆவலாக இருக்க, அவன் உடலும் உள்ளமும் மனையாளின் அருகாமையைத் தேடித் தவித்து இருந்தது....
"கோவில் இருந்து வர எவ்வளவு நேரம் ஆகும்?" ....
"இப்போ தான் வந்தோம்ங்க.... இன்னும் அர்ச்சனையே செய்யலையே"
அர்ஜூனிற்கும் கடவுளுக்கும் எவ்வளவு தொலைவு என்பது அனைவருக்கும் தெரியும்... ஆனால் அவன் மனையாளோ கணவனுக்கு நேரெதிராக வாரத்தில் ஏழு நாட்களும் கோவிலுக்குச் செல்ல முடியாதா என்று ஏங்குபவள்...
வாழ்நாளில் எந்தக் கோவிலின் வாயிலையும் மிதிக்காதவன்..... விவரம் தெரிந்த நாளில் இருந்தே எவ்வளவு பெரிய சோதனைகளாகட்டும், எதிர்ப்புகளாகட்டும், அல்லது பிரச்சனைகளாகட்டும், அனைத்தையும் தனியாளாக எதிர்த்து நின்ற சமயங்களில் கூட அவன் தன்னுடைய புத்திக் கூர்மையையும், சாமர்த்தியத்தையும், அஞ்சா நெஞ்சத்தையும் மட்டுமே நம்பினானே ஒழிய, கடவுளின் பக்கம் மனதால் கூட ஒரு அடி எடுத்து வைத்ததில்லை...
அப்பேற்பட்ட அர்ஜூன் இன்று தன் மனையாள் கோவிலில் இருப்பது தெரிந்ததும் அவளைக் காண்பதற்கு இதற்கு மேலும் காத்திருக்க முடியாமல் கோவிலுக்கே சென்று அவளைச் சந்திப்பதாக முடிவெடுத்தவன் தான் வருவதாக அவளிடம் சொல்வதைத் தவிர்க்க...
கணவன் மனைவி இருவரின் மனமும் எத்தனை ஆழமான அழுத்தமான காதலை, அன்பை, நேசத்தைச் சுமந்திருந்தால் வார்த்தைகளால் தங்களின் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்திக் கொள்ளாமலே மனதோடு மனம் பேசிக் கொண்டதைப் போல் ஒரே முடிவை எடுத்திருந்தார்கள்....
தன் மனையாளை சந்திக்கும் ஆசையில் விரைவாகக் காரை செலுத்தியவன் அடுத்த அரை மணி நேரத்தில் கோவிலை அடைய, மீண்டும் தன்னை அழைத்த கணவனிடம் தானும் மஹாவும் மஹாலெட்சுமி சன்னதியில் இருப்பதாகச் சொல்ல, முதன் முறையாகத் கோவிலிற்குள் நுழைந்தான் "தி க்ரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட்" அர்ஜூன்...
கோவிலுக்குள் நுழைந்தவனுக்கு அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் வழக்கமான பாணியில்...
"இங்க வந்து இப்படி மொய்க்கிறதுக்குப் பதில் பேசாமல் அவங்க செய்ய வேண்டிய வேலைகளை சரியா செய்தாலே போதும்... எல்லாம் ஒழுங்காக நடக்கும்" என்று நினைக்கத் தோன்ற, ஏனோ தன் சிந்தனையை மாற்றிவிட்டுத் திவ்யா கூறிய சன்னதியை தேட....
கருப்பு நிறத்தில் முழுக்கை சட்டையும், வெளிர் சந்தன நிறத்தில் ஜீன்ஸும் அணிந்திருந்தவன், சட்டையை முட்டி வரை மடித்துவிட்டு, சன் க்ளாஸ் அணிந்து கம்பீரமாக நடக்க, திவ்யா இருந்த சன்னதிக்கு அருகிலேயே இருந்த ஒரு மண்டபத்தில் அமர்ந்திருந்த நான்கு கல்லூரி மாணவிகள் இவனைப் பார்த்ததும் இவன் அழகில் மயங்கி வாயைப் பிளந்தவாறே...
"வாவ் அங்க பாருங்கடி... செம்மையா ஒருத்தன் வரான்" என்றார்கள்....
அதே நேரம் அவர்களைப் பார்த்திருந்தவன் அவர்களை நோக்கி நடக்க அவன் அழகில் லயித்து இருந்தவர்கள் அவன் சட்டென்று தங்களை நோக்கி நடக்கவும் வியந்தவர்கள் மகிழ்ச்சியில்....
"ஹேய்! அவன் இங்க தாண்டி வருகிறான்... ஓகே.... ஒரு டீல்.... யாரைப் பார்த்து அவன் முதல்ல பேசுகிறானோ, அவளுக்குத் தான் அவன்" என்று வெகுளித்தனமாக அவர்களுக்குள்ளாகவே முடிவெடுக்க,
அவர்களின் அருகே வந்தவன் "எக்ஸ்க்யூஸ் மீ.... மஹாலெட்சுமி சன்னதி எங்கிருக்கு?" என்றான்...
ஆனால் ஜொள்ளு விட்டு அவனையே பார்த்திருந்தவர்களின் செவிகளைச் சென்று அவன் கேள்வி அடையவில்லை...
தலையைக் குனிந்து சிரித்துக் கொண்டவன் சிறு புன்னகையுடன் நிமிர்ந்து,
"கேன் யூ கேர்ள்ஸ் கம் பேக் டு திஸ் இயர்த் ஃபார் அ மினிட் [Can you girls come back to this earth for a minute]" என்றான்...
அவனின் சிரிப்பில், பேச்சில் சுதாரித்தவர்கள் அசடு வழிந்து கொண்டே..
"நாங்களும் இந்த உலகத்திற்குத் திரும்பி வரனும்னு தான் பார்க்கிறோம்... ஆனால் நீங்க தான் வர விட மாட்டேங்கிறீங்களே" என்று சலித்துக் கொள்வது போல் கூறிக் கொண்டு ஒருவருக்கொருவர் பார்த்துக் கண் சிமிட்ட,
அவர்களின் விஷமம் புரிந்தவன் மீண்டும் சிரித்துக் கொண்டே....
"சரி, மஹாலெட்சுமி சன்னதி எங்கிருக்குன்னு சொல்லுங்க" என்றான்...
"சொல்றது என்னா? கூட்டிட்டே போறோம் வாங்க" என்றவர்கள் அவனுக்கு முன் செல்ல, புன் முறுவலுடன் தலையைக் கோதி விட்டுக் கொண்டவன், அவர்களைப் பின் தொடர்ந்தான்...
சன்னதியை அடைந்ததும்...
"இது தான் நீங்க கேட்ட சன்னதி" எனவும்...
அங்கு மஹா கூட்டத்தில் நிற்பதையும் அவளுக்கு அருகில் அடர்ந்த பாக்கு நிறத்தில் சன்னமான கரைப் போட்ட பட்டுப் புடவையில் தேவதையைப் போல் அழகு மிளிற நின்று கொண்டிருந்த தன் மனையாளின் எழில் அழகில் மயங்கியவன், அவள் இறுக்கத் தன் கண்களை மூடி வேண்டிக் கொண்டு இருப்பதைப் பார்க்கவும் அவள் நிச்சயம் தனக்காகத் தான் வேண்டிக் கொண்டிருப்பாள் என்று புரிய சிறு புன்னகையுடன் கல்லூரிப் பெண்களிடம் திரும்பியவன் "தேங்ஸ்" எனவும்...
"வேறு எங்கேயும் போக வேண்டுமா?" என்று அவர்கள் கிண்டலாகக் கேட்க,
"அதை என் வைஃப்பிடம் கேட்டு சொல்றேனே" என்றான்...
அவன் வைஃப் என்றதும் அவர்களின் முகம் மாறுவதைப் புன்னகையுடன் இரசித்தவன் கூட்டத்திற்கு இடையில் புகுந்து திவ்யாவின் அருகில் சென்று அவளை உரசியது போல் நிற்க,
அவனின் திடீர் ஸ்பரிசத்தில் திடுக்கிட்டு சட்டென்று கண்களைத் திறந்தவளுக்குத் தன் கணவன் தன் அருகில் நிற்பதைக் கண்டதும் இது கனவா அல்லது நினைவா? என்றே தோன்றியது....
கோவில் என்றாலோ அல்லது பூஜை என்றாலோ தாம்தூமென்று குதிப்பவரா இன்று கோவிலுக்கு வந்திருக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டவளின் அகன்ற விழிகளைப் பார்த்தவன் அவளின் கண்களுக்குள் தன்னைத் தொலைத்தவனாக அவளின் காதுகளுக்கருகில் குனிந்து....
"சாமியைப் பாருடி" என்று சிரித்துக் கொண்டே சொல்ல, புன்னகைத்தவள் மஹாவிடம் அவன் வந்திருப்பதைச் சொல்ல...
அவள் சொல்வதை நம்பாமல் மஹா எட்டி அவனைப் பார்க்கவும், தன் தங்கையைப் பார்த்து புன்னகைத்தவன்...
"இப்போ இரண்டு பேரும் சாமியக் கும்பிடப் போறீங்களா?, இல்லை என்னையவே பார்த்துட்டு இருக்கப் போறீங்களா?" என்றான்.
தன் அருகில் தன் கணவன் இருப்பது அதுவும் கோவிலில் என்று நினைத்தவளுக்கு அவனின் மார்புக்குள் புதைந்து அந்த நிமிடமே அவன் அப்பா ஆகப் போவதை சொல்லமாட்டோமா என்று ஏக்கமாக இருந்தது...
திருமணம் நடந்த நாளில் இருந்து இவர்கள் இருவரும் ஒன்றாக இணைவார்களா என்று அனைவரும் அஞ்சிக் காத்துக் கொண்டிருக்க, தன்னைப் போல் ஒரு ஏழைப் பெண்ணைத் தன் கணவன் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ள வழியே இல்லை என்று அவள் உள்ளம் தவித்துக் கொண்டிருக்க, இதோ அவளைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டது மட்டும் இல்லாமல், தன் காதலினால் அவளைத் திக்கு முக்காட செய்த கணவன் இன்று அவனின் வாரிசையே அவளுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறான்...
அகம் மகிழ மன நிறைவுடன் கண்களை மூடி தன் கணவனுக்காகவும், தான் பெறப் போகும் தங்களுடைய குழந்தைக்காகவும் மனதார வேண்டிக் கொண்டவள் மறுபடியும் தலை சுற்றுவது போல் உணர்ந்தாள்...
தான் கீழே விழுந்துவிடாமல் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளத் தன்னையும் அறியாமல் அர்ஜூனின் கரத்தைப் பற்ற, திரும்பி பார்த்தவனுக்கு ஏதோ சரியில்லை என்று புரிய....
"திவ்யா, ஆர் யூ ஆல்ரைட்?" என்றான்...
"இல்லைங்க... ஒன்னும் இல்லை" என்று சொன்னவளுக்குத் தலை சுற்றல் மேலும் அதிகரிக்கத் தன்னிலை இழந்து அவனின் மேல் லேசாகச் சாய்ந்தவளைக் கண்டு பதறிப் போனவன்...
"என்னாச்சு, திவி?" என்று பதறியவாறு மீண்டும் கேட்க,
அவன் சத்தத்தைக் கேட்டு மஹாவும் திரும்பி பார்க்க, திவ்யாவை தன் தோளிலேயே சாய்த்துக் கொண்டவன் அப்படியே அவளை நடத்தி அழைத்து வந்தான் அந்தக் கல்லூரி பெண்கள் அமர்ந்திருந்த அதே மண்டபத்திற்கு...
அவளை தன் தோளில் தாங்கியவாறே மரத்தின் கீழ் அந்த மண்டபத்தில் அமர செய்தவன் தானும் அவளின் அருகிலேயே அமர, முதன் முறையாக இவ்வாறு தரையில் தன் அண்ணன் அமர்வதைப் பார்த்த மஹாவிற்குக் கிட்டத்தட்ட மயக்கமே வந்தது.....
விழி விரிய அவனைப் பார்த்தவள் மீண்டும் திவ்யாவை நோக்க, அர்ஜூனின் தோளில் சாய்ந்திருந்தவளுக்கு இன்னமும் தன் தலையை நிமிர்த்த முடியாமல் போக அவளின் நிலைக் குறித்து அஞ்சியவனாக அவளின் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தி...
"திவி.... என்ன பண்ணுது?? சொல்லுடி" என்று மீண்டும் பரிதவிப்புடன் கேட்க,
திவ்யாவிற்கு மறுபடியும் குமட்டிக் கொண்டு வந்தது...
இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு வயதான பாட்டி தன் அனுபவத்தால் அவளின் நிலைமையை உணர்ந்து அவளின் அருகே நெருங்கி வந்தவர்...
"என்னம்மா, ரொம்ப மசக்கையா இருக்கா? எத்தனையாவது மாசம்மா??" என்றார்...
அவரின் கேள்வி அர்ஜூனிற்கும் மஹாவிற்கும் புரிய ஒரு சில விநாடிகள் பிடித்தது...
புரிந்ததும் சட்டென்று திவ்யாவை நோக்கி குனிந்தவன் முகத்திலும் மனதிலும் அத்தனை ஆவலையும் எதிர்பார்ப்பையும் தாங்கி....
"திவி…" என்றான்...
தன் கணவன் தன்னை நோக்கி குனிந்து தன் முகம் பார்க்கவும், அவனின் எதிர்ப்பார்ப்புடனான குரலிலும் நாணம் அடைந்தவளின் முகம் அந்தி வானச் சிவப்பாய் சிவக்க கணவனின் தோளில் சாய்ந்திருந்தவள் அவனைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு மேலும் அவன் நெஞ்சில் முகத்தை ஆழ புதைக்க, இங்கு நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவிகளுக்கு இது ஏதோ சினிமாவில் நடக்கும் காட்சியைப் போல் தோன்றியது....
தன்னவளின் நாணத்தில், தன் மேல் புதைந்து இருக்கும் அவளின் செய்கையில் சிலிர்த்தவன் மீண்டும் தன் வலது கையால் அவளின் முகத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தி....
"என்னடி, கேட்டுட்டே இருக்கேன்... ஒன்னுமே சொல்ல மாட்டேங்கிற" என்று ஆசையுடன் வினவ....
இன்னமும் கூச்சம் விலகாத முகத்துடனும் புன்னகையுடனும் தன் கணவனின் காதிற்கு அருகில் எம்பி மெல்லிய குரலில்....
"ம்ம், நீங்க அப்பா ஆகப் போறீங்க" என்றாள்...
தன் காதல் மனைவியின் வாயில் இருந்து வந்த "அப்பா ஆகப் போறீங்க" என்ற வார்த்தைகளில் உடலும் உள்ளமும் சிலிர்த்தவனுக்குப் பெருமகிழ்ச்சியும் பிரமிப்பும் போட்டிப் போட, தங்களின் காதலுக்கு, அன்னியோன்யமான தாம்பத்தியத்திற்குச் சாட்சியாகத் தன் பிள்ளை தன் மனைவியின் மணி வயிற்றில் உதித்திருக்கிறான் என்ற கர்வம் தோன்ற, சுற்றம் பார்க்காமல் தனக்குத் தந்தையென்ற ஸ்தானத்தை அளிக்கப் போகும் தன்னவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்தான் அந்தக் காதல் கணவன்...
ஏற்கனவே சினிமா காட்சி போல் அங்கு நடப்பதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அந்தக் கல்லூரி மாணவிகளுக்கு இந்தக் காட்சி இன்னும் உற்சாகத்தைக் கொடுக்க,
"ஸோஓஓஓஒ ஸ்வீட்... திஸ் பியூட்டிஃபுல் மொமண்ட்ஸ் நீட் டு பி கேப்ச்சர்ட் [Sooooo sweet.... this beautiful moment needs to be captured] " என்றவர்கள்,
அர்ஜூன் திவ்யாவின் நெற்றியில் முத்தமிடுவதையும், அதனால் அவள் வெட்கத்தால் முகம் சிவந்து மீண்டும் அவனின் நெஞ்சிற்குள் ஆழ தன் முகத்தைப் புதைப்பதையும் அழகாகத் தங்களின் அலை பேசியில் படம் பிடித்துக் கொண்டார்கள்....
வழக்கமாகத் தன்னை இவ்வாறு புகைப் படம் எடுப்பவர்களை உண்டு இல்லை என்று செய்துவிடுபவன் இன்றைய நாள் தன் வாழ்நாளில் ஒரு பொன்னான நாள் என்பதாலும் மனமுழுவதும் மகிழ்ச்சி நிரம்பி வழிந்ததாலும் அவர்களின் செயலில் சிரித்தவன் இந்த வாண்டுகள் இதற்கு மேல் எதுவும் செய்வதற்குள் இங்கிருந்து கிளம்பிட வேண்டும் என்று எண்ணி....
"கார் வரைக்கும் நடக்க முடியுமா திவி?" என்றான்...
"ம்ம்" என்றவளை மெல்ல எழுப்பித் தன்னுடைய தோள் வளைவிற்குள் வைத்துக் கொண்டவன் கோயிலின் வாயிலை நோக்கி நடக்க, கணவனின் இந்த உரிமையான ஆனால் கோவில் என்று கூடப் பாராமல் தன்னைத் தன்னருகில் வைத்துக் கொண்டு நடக்கும் செயலில் சங்கோஜப்பட்டவள் அவனை விட்டு மெல்ல நகர..
"ஏன், இப்ப என்ன? திரும்பியும் கீழே விழறதுக்கா... பேசாம இப்படியே நட" என்றான் வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டி...
அதில் கோபம் தெரியவில்லை... அவனுடையை அக்கறை தான் தெரிந்தது...
மௌனமாக அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பிக்க, அந்தக் கல்லூரி பெண்களிடம் தன் அலை பேசி எண்ணைக் கொடுத்து அர்ஜூனையும் திவ்யாவையும் அவர்கள் எடுத்த அந்த அழகிய புகைப் படத்தைத் தன்னுடைய அலை பேசிக்கு அனுப்பச் சொன்னாள் மஹா.
வாழ்க்கையில் சில நிமிடங்கள் பதிக்கப் படுவதற்குரியது அல்லவா!!!!!
கோவிலை விட்டு வெளியே வந்தவர்கள் நேரே தங்கள் காருக்கு செல்ல, அர்ஜூன் டிரைவர் முருகனை வீட்டிற்குப் போகச் சொன்னவன் மஹாவையும் திவ்யாவையும் தன் காரில் ஏறச் சொல்ல, அவர்களுக்குத் தனிமை கொடுக்க விரும்பிய மஹா...
"அண்ணா... நான் முருகன் அண்ணாவுடன் போறேன்... நீங்களும் அண்ணியும் ஒன்னா வாங்க" எனவும்..
அவளைத் திரும்பிப் பார்த்தவன்....
"ஏன்? நீயும் என் கூடவே வா" என்றான்...
அவன் வார்த்தைகளை மறுக்க முடியாமல் திவ்யாவை அர்ஜூனிற்கு அருகில் காரின் முன் பக்க இருக்கையில் அமரச் சொன்ன மஹா பின் பக்க இருக்கையில் அமர,
"திவி... நீ மஹா கூட உட்காரு" என்றவன் திவ்யா காரில் ஏறியதும் அவளின் பக்கக் கதவை சாத்தியவன் தான் ஏறி காரை கிளப்ப, ஏறியதில் இருந்து வீட்டிற்கு வரும் வழி முழுவதும் தன் கணவனின் கண்கள் ரியர் வியூ கண்ணாடி வழியாகத் தன் மேலேயே படர்ந்திருந்ததைக் கண்ட திவ்யாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது..
இது என்ன தங்கை கூட இருக்கும் போதே இந்தப் பார்வை என்று நினைத்தவள் தலை குனிய, வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகளை வென்றிருந்தாலும், எவ்வளவு மிகப் பெரிய பதவியில் வகித்து இருந்தாலும், முதல் முறை தந்தை என்ற அற்புதமான அழகான பதவியைத் தனக்குத் தந்த தன் மனைவியைப் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளில் காதலும் கர்வமுமே வழிந்து கொண்டிருந்தது....
இவர்களின் பார்வை பரிமாற்றங்களை கண்டும் காணாதது போல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த மஹாவிற்குத் தன்னையும் மீறி தன் இதயத்தில் குடியிருந்த, ஆனால் தன்னுடயை அவசரத்தினால் அவளின் மனதைக் காயப்படுத்தியிருந்த வினோத்தின் நியாபகம் வந்தது...
அன்று மொட்டை மாடியில் அவளை முத்தமிட்டு தன் காதலை சொன்னவன் அதற்குப் பிறகு அவளிடம் பேச கூட முயற்சிக்கவில்லை..
மறு நாள் அவன் தங்கள் ஊருக்கு திரும்பி செல்லும் பொழுது எவ்வளவு ஆர்வத்துடன் தன்னை எதிர்பார்த்திருப்பான் என்று தெரிந்தும் தான் அவனைப் பார்க்க கீழே இறங்கி வராததில் அவனுக்கு நிச்சயம் தன் மீது கோபமும் வருத்தமும் இருக்கும்...
ஆனால் அதற்காக இத்தனை நாட்களில் ஒரு முறைக் கூடத் தன்னை அழைக்கவோ அல்லது ஒரு குறுந்தகவல் கூட அனுப்பவோ அவன் முயற்சிக்கவில்லையே என்று கலங்கியிருந்தவளுக்கு ஒரு பெண்ணாகத் தானே வலியச் சென்று அவனிடம் பேசவும் தைரியம் வரவில்லை....
ஆனால் அவளுக்கு எங்குத் தெரியும்? வினோத் தன் மனம் கவர்ந்தவளை, தன் இதயத்தில் வீற்றிருக்கும் தன்னவளைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும் தவியாய் தவித்துக் கொண்டிருப்பதும்,
ஆனால் அர்ஜூனின் அந்தஸ்திற்கு முன்னும், அவனின் அதிகாரத்திற்கு முன்னும் தங்களின் காதல் ஒரு செல்லாத காசாகத் தான் கருதப்படும் என்று கலங்கிக் கொணடிருப்பதும்....
தன் மனதில் பூத்திருக்கும் காதல் ஒரு வேளை அர்ஜூனிற்குத் தெரிய நேர்ந்தால் நிச்சயம் அவன் எதிர்ப்புப் பலமாக இருக்கும்... அவனின் கோபாவேஷத்தில் இப்பொழுது தான் அரும்பியிருக்கும் தன் காதல் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விடுமோ என்று பயந்து தான் அவன் மஹாவின் அலை பேசி எண்ணைக் கூடத் திவ்யாவிடம் இருந்து வாங்கவில்லை என்பதும்...
ஏனெனில் அர்ஜுன் ஊருக்கு வந்த பொழுது அவன் வினோத்தின் வாகனத்தைப் பார்த்த பார்வையும், அதைத் தொடர்ந்து தன் காரை செலுத்த முடியாது என்று தன் காரில் ஏறச் சொன்னதும் வினோத்திற்கு உரைக்க வைத்தது...
தங்கள் வீட்டு இளவரசியை அவன் நிச்சயம் தன்னைப் போல் ஒரு ஏழையின் கரங்களில் ஒப்படைக்கவே மாட்டான் என்று...
காரில் இருந்த மூவரும் ஒவ்வொரு மனநிலையில் உள்ளத்தில் மகிழ்ச்சியையும் திகைப்பையும் கர்வத்தையும் சுமந்து கொண்டு வர, வீட்டிற்கு நுழைந்தவர்களை அதிசயத்தோடு பார்த்த ஸ்ரீ..
"நீ எங்க இவங்களைப் பார்த்த அர்ஜூன்?" என்று கேட்க,
அர்ஜூன் பதில் சொல்வதற்குள் ஓடிச் சென்று தன் அன்னையை இறுக்க அணைத்துக் கொண்ட மஹா....
"என்ன மாம்? எவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி மறைச்சிட்டீங்களே???" என்றாள்...
மஹாவின் சந்தோஷ அலறல் திவ்யாவிற்குக் கூச்சத்தையே கொடுக்க அர்ஜுனோடு சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்தவள் தன்னையும் அறியாமல் அவனுக்குப் பின்னால் மறைந்து கொள்ள,
வரும் வழியில் திவ்யா மஹாவிடம் சொல்வதைப் போல் அர்ஜூனிடம் தானும் ஸ்ரீயும் காலையில் மருத்துவமனை போனது, பின் பரிசோதனை செய்தது என்று அனைத்தையும் கூறி இருந்தாலும்....
காலையிலேயே தெரிந்த இந்த இனிப்பான செய்தியை திவ்யா ஏன் இத்தனை நேரம் தன்னிடம் இருந்து மறைத்திருந்தாள் என்ற அர்ஜூனின் குழப்பத்திற்கு விடையளிக்கும் வகையில்...
"என்னங்க... நம்ம திவ்யா கன்ஸீவ் ஆகியிருக்கா.... இன்னைக்குக் காலையில தான் செக் பண்ணிட்டு வந்தோம்... அர்ஜூன் கிட்ட தான் முதல்ல சொல்லனும், அதுவும் அவன் வந்த பிறகு அவளே அவனிடம் நேரில் சொல்லனும்... அது வரைக்கும் யாருக்கிட்டேயும் சொல்லாதீங்கன்னு சொல்லியிருந்தா... அதனால் தான் நான் உங்கக்கிட்ட கூடச் சொல்லலை" என்றார் கணவனிற்குப் பின் வெட்கப்பட்டு மறைந்து கொண்டிருக்கும் மருமகளைப் பார்த்தவாறே......
இப்பொழுது அர்ஜூனிற்குப் புரிந்து போனது தன் மனைவி ஏன் காலையிலேயே இந்த மகிழ்ச்சிகரமான விஷயத்தைத் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று...
தன் பின்னால் தன் முதுகினை பிடித்தவாறு மறைந்து நிற்கும் அழகு மனைவியைத் திரும்பி பாத்தவன் தன் வலதுக் கரத்தைக் கொண்டு அவளைத் தன்னருகில் இழுக்க, அவனின் செய்கையில் மேலும் நாணம் அடைந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க, பார்வையாலே தன்னை விழுங்கி விடுவது போல் பார்த்திருக்கும் கணவனைக் கண்டவள் சட்டென்று ஓடி தன் மாமியாரின் அருகில் நின்றுக் கொண்டாள்...
அந்த இல்லமே மகிழ்ச்சியில் திளைத்திருந்தது....
திவ்யாவின் அருகில் வந்த பாலா அவளின் தலையைக் கோதிவிட்டவர்,
"ரொம்பச் சந்தோஷமா இருக்கும்மா" என்று கனிவுடன் கூற,
அவளின் கையைக் குலுக்கிய அருண் "கங்கிராட்ஸ் அண்ணி" என்றான்...
இவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்த அர்ஜூனின் உள்ளம் பெருமையாலும் சந்தோஷத்தாலும் திணறிக் கொண்டிருந்தாலும் ஒருவரும் தன்னைக் கவனியாததைக் கண்டவன் அருணின் பக்கம் திரும்பி சிறு புன் முறுவலுடன்...
"ஸோ கங்கிராட்ஸ் எல்லாம் உன் அண்ணிக்கு மட்டும் தானா?" என்றான்...
முதல் முறையாகத் தன் மனம் விட்டு பேசும் அண்ணனைக் கண்டவன் மனமெல்லாம் பூரிப்புடன் அவன் அருகில் வந்து அவனைக் கட்டி அணைத்துக் கொண்டவன்...
"இரண்டு பேருக்கும் தான் அண்ணா" என்றான்...
அந்த வீட்டின் குட்டி வாரிசை, அடுத்தத் தலைமுறையின் முதல் கொளுந்தை ஆர்ப்பாட்டமாக வரவேற்க அந்த வீட்டில் இருந்த அனைவரும் ஆத்மார்த்தமாகத் தயாராகிவிட்டிருந்தனர்....
ஆனால் ஒருவரும் எதிர்பார்க்காத வகையில் தங்களின் வாரிசு இந்தப் பூவுலகில் தோன்றப் போகும் நாளில் தன் மனைவியின் கதறலைக் கேட்க தான் அருகில் இருக்கப் போவதில்லை என்று அர்ஜூனிற்கோ அல்லது தங்களின் குலக் கொளுந்து பிறக்கப் போகும் நேரத்தில் தங்கள் வீட்டு மருமகள் உயிர் போகும் வலியில் தனித்துத் துடித்து இருப்பாள் என்று மற்றவகளுக்கோ இல்லை இதற்கெல்லாம் காரணம் தான் தன் குடும்பத்திடம் இருந்து மறைத்த அந்த ஒற்றை விஷயமே என்று மஹாவிற்கோ தெரிந்திருந்தாலோ பின்னாளில் நடக்க இருக்கும் அசம்பாவிதத்தைத் தடுத்து இருக்கலாமோ?????
"திவ்யா, நீ உங்க அம்மா அப்பாக்கிட்ட ஃபோன் செய்து சொல்லுமா.." என்று ஸ்ரீ சொல்ல,
"இல்லத்த.... நீங்களே சொல்லுங்க" என்றாள்.
சோபாவில் அமர்ந்த ஸ்ரீ கலாவின் அலை பேசிக்கு அழைக்க, அவர்களின் எதிரில் அர்ஜூன் அமர, ஸ்ரீயின் அருகிலேயே அமர்ந்த திவ்யா மறந்தும் தன் கணவனை ஏறெடுத்து பார்க்கவில்லை...
ஸ்ரீயின் அழைப்பை எடுத்த கலாவிடம் நலம் விசாரித்தவர் பின் அந்த மகிழ்ச்சிகரமான விஷயத்தைச் சொல்ல துவங்கினார்.....
"கலா, நாம் இரண்டு பேரும் பாட்டி ஆகப் போறோம் டீ..."
ஸ்ரீயின் கூற்றில் மகிழ்ச்சியில் உறைந்துப் போன கலாவிற்குச் சந்தோஷ மிகுதியால் கண்களில் நீரே வந்துவிட...
"நிஜமாவாடி... ஸ்ரீ என்னால சந்தோஷத்தில பேசவே முடியலைடி... டாக்டரிடம் போனீங்களா?"
"ஆமாம் கலா.... காலையில் நானும் திவ்யாவும் ரெண்டு பேரும் தான் போனோம்... ஏழு வாரம்னு சொன்னாங்க கலா"
"ஸ்ரீ... நான் திவ்யாக்கிட்ட பேசனும்... கொஞ்சம் அவகிட்ட ஃபோன கொடுக்கிறியா?"
சரி என்றவர் திவ்யாவிடம் தொலை பேசியைக் கொடுக்க...
கருத்தரித்திருக்கும் தங்களின் செல்ல மகளை இந்த நிமிடமே பார்க்க வேண்டும் என்று ஆர்வம் மேலிட....
"திவ்யா, ரொம்பச் சந்தோஷமா இருக்கும்மா.... எனக்கு இப்போவே உன்ன பார்க்கனும்னு போல இருக்கு" என்றார் கலா...
ஸோஃபாவில் தன் எதிரே தன் அன்னைக்கு அருகில் ஒண்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் தன் மனைவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும் பூரிப்பையும், அங்கு இருந்த அனைவரும் அவளையே பார்த்திருப்பதை உணர்ந்து அவளின் முகத்தில் படர்ந்திருந்த வெட்கத்தையும் கண்ட அர்ஜூனிற்கு அவளைத் தனிமையில் தங்கள் அறையில் எப்பொழுதடா சந்திப்போம் என்று இருந்தது...
சிரிப்பும் கலகலப்புமாக நேரம் செல்ல மதியம் வேறு அவன் உணவு அருந்தாததில் பசியில் உயிர் போகத் தன் அன்னையைப் பார்த்தவன்...
"மாம்... டின்னர் ரெடியா... லஞ்ச் வேற சாப்பிடலை" என்று கூறி முடிக்கும் முன்னரே வெடுக்கென்று எழுந்த மருமகளைப் பார்த்த ஸ்ரீ...
"என்ன திவ்யா... ஏன் இப்படி வெடுக்குனு எழுந்திரிக்கிற... இனி இந்த மாதிரியெல்லாம் செய்யக் கூடாது" என்று பரிவுடன் கூற...
தன் கணவனின் களைத்த முகத்தைப் பார்த்தவள்...
"இல்லைத்த... அவங்க மதியம் சாப்பிடலைன்னு சொன்னாங்களே.... அது தான் சாப்பாடு எடுத்து வைக்கலாம்னு" என்று அவள் கூறியதில் தன் குழந்தைக்குத் தாயாகும் முன்னரே தனக்குத் தாயாக மாறியிருந்த தன் மனையாளை நினைத்து அர்ஜூனின் மனம் சிலிர்த்தது...
அவளுடன் எழுந்தவன் டைனிங் டேபிளை நோக்கி நடக்கத் துவங்க அவனைப் பின் தொடர்ந்தவள் அவன் அமர்ந்ததும் சமையல் அறையில் இருந்து உணவு பதார்த்தங்களை எடுத்து வந்து பரிமாறத் துவங்கவும், அவளின் கரம் பற்றியவன் பின் திரும்பி தங்களை ஒருவரும் கவனிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டு அவளின் பஞ்சு போன்ற கரத்தில் மென்மையாக முத்தமிட்டான்....
தன் கணவனின் முத்தத்தில் சிலிர்த்தவள் இனிமையாகப் புன் முறுவலிக்க,
"திவி... நீயும் உட்காரு... என் கூடச் சேர்ந்து சாப்பிடு" என்றான்....
"இல்ல.... நான் அத்தக்கூடச் சேர்ந்து சாப்பிடுறேன்... நீங்க சாப்பிடுங்க" என்றவுடன் விருட்டென்று எழப் போனவனின் கரத்தைப் பற்றி இழுத்தவள் அவனின் கோபம் புரிந்து...
"அப்பா, எதுக்கு இப்ப இவ்வளவு கோபம்?" என்றவாறே தானும் அவனுடன் அமர....
அவளுக்குத் தட்டை எடுத்து வைத்தவன் தானே முதல் முறை அவளுக்குப் பரிமாறினான்...
கணவன் மனைவி இருவரின் மனமும் நிறைந்திருந்தினாலோ என்னவோ உணவு சரியாக இறங்காமல் ஏனோதானோ என்று கொறித்துவிட்டு எழுந்தவன் அவளின் கரம் பற்றி...
"சீக்கிரம் ரூமிற்கு வா திவி" என்று விட்டு மாடி ஏறினான்...
சரி என்று தலை அசைத்தவள் மற்றவர்களும் உணவு அருந்தி முடிக்கவும் தங்களின் அறைக்குச் செல்ல, தன்னவளுடனான தனிமையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கட்டிலில் படுத்திருந்த அர்ஜூன் அவளைக் கண்டவுடன் எழுந்து அவளை நோக்கி வந்தவன் இறுக்கக் கட்டி அணைத்து...
"திவி... எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்றவனின் குரலில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.
கணவனின் அணைப்பிற்குள் அடங்கி இருந்தவளுக்குக் காலையில் மருத்துவர் தான் தாயாகப் போவதை உறுதி செய்யும் பொழுது வந்த சந்தோஷத்தை விட, தான் தந்தையாகப் போவதை அறிந்ததில் இருந்து என்றுமே உணர்வுகளை வெளிக்கொணறாத தன் கணவன் இன்று தன்னையும் அறியாமல் வெளிப்படுத்திக் கொண்டிருந்த மகிழ்ச்சி அவளுக்குப் பேரின்பத்தைக் கொடுக்க, அவனின் நெஞ்சில் ஆழ புதைந்துக் கொண்டவளின் முகத்தைத் தன் ஒற்றை விரலால் தன்னை நோக்கி நிமிர்த்தியவன்....
"காலையிலேயே சொல்லியிருந்தா நானும் உங்க கூட டாக்டரிடம் வந்திருப்பேனே" என்று ஏக்கத்துடன் கூற.
"இல்லங்க, எனக்குச் சரியா தெரியலை.... அதான் டாக்டர் உறுதியா சொன்னவுடனே சொல்லலாம்ன்னு அத்தக் கிட்ட சொல்லிட்டேன்" என்றாள்.
அவளின் கரம் பற்றி அழைத்துச் சென்று கட்டிலில் அமர்ந்தவன் அவளைத் தன் கால்களுக்கு இடையில் நிற்க வைத்து அவளின் மாராப்பு சேலையை விலக்கி அவளின் வயிற்றில் முகம் புதைக்க, அவனின் ஸ்பரிசத்தில், செய்கையில் சிலிர்த்தவள் அவனின் தலை முடியை கோத,
மென்மையாகத் தன்னவளின் வயிற்றில் முத்தமிட்டவன் தன் முகத்தை எடுக்காமலே..
"திவி ஏழு வாரம்ன்னு சொன்னா ஒரு வேளை அன்று பார்ட்டி முடிந்ததும் உன் கிட்ட என்னோட லவ்வ சொன்னேனே, அன்று தான் இருக்குமா? என்றான் குரலில் கிரக்கத்தையும் களிப்பையும் கூட்டி....
கணவனின் கேள்வியில் நாணத்தின் உச்சிக்கே, கூச்சத்தின் எல்லைக்கே சென்றவள் இது என்ன கேள்வி என்பது போல் பதில் சொல்லாது இருக்க, கேள்வி கேட்டவன் பதில் வராமல் போகவே நிமிர்ந்து அவளின் முகம் பார்க்க, அவளுக்குத் தான் அவனின் பார்வையில் வெட்கம் பிடுங்கி தின்றது...
அவன் தன்னை நிமிர்ந்து பார்க்கவும் கூச்சத்தில் அவனிடம் இருந்து அவள் விலக முற்பட அவளை இழுத்து தன் மேல் சரித்துக் கொண்டவனின் மனமெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது...
அவனின் மேல் சாய்ந்திருந்தவளை மெல்ல தூக்கியவன் கட்டிலில் படுக்க வைத்து அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு...
"டுடேய் இஸ் தி மோஸ்ட் ஹாப்பியஸ்ட் டே இன் மை லைஃப் திவி [Today is the most happiest day in my life Dhivi]" என்றான்...
எந்த ஒரு ஆண்மகனுக்கும் தான் தந்தையாகப் போவது ஆணாக ஒரு கர்வத்தைக் கொடுக்கும்...
சில சமயங்களில் தோன்றும் கர்வமும் பெருமை தான்...
மீண்டும் அவளின் வயிற்றில் கை வைத்தவன்...
"வேற என்ன சொன்னாங்க டாக்டர்?" என்றான்...
"கார்ல வரும் போது சொன்னேனே அதான்.... மத்த படி செக்கப் வருவது பத்தி சொன்னாங்க" என்றவளுக்கு அவன் என்ன கேட்க வருகிறான் என்று புரியவில்லை...
"இல்ல, வேற ஏதாவது சொன்னாங்களா?" என்று மீண்டும் கேட்க,
அவனை நிமிர்ந்து பார்த்து "ஙே" என்று திருதிருவென்று விழித்தவளைக் கண்டவன் புன் சிரிப்புடன்...
"ம்ம்ம், ஒரு சின்னப் பொண்ண என் கழுத்தில் கட்டி வச்சு படுத்திறாங்கப்பா" என்றவன்,
அவளின் வயிற்றில் வைத்த தன் கையை மேலும் முன்னேற்ற கணவனின் அத்து மீறலை உணர்ந்தவளின் உணர்வுகளும் தாபத்தில் சிலிர்த்து எழ ஏற்கனவே அவன் மேல் படுத்திருந்தவள் மேலும் அவனுடன் ஒன்றவும்...
"இதத் தாண்டி கேட்டேன்...." என்றான் தவிப்புடனும் இளம் மனைவியின் அருகாமை தந்த கிளர்ச்சியுடனும்...
இப்பொழுது கணவனின் கேள்வியின் அர்த்தம் புரிந்தவளாக கூச்சத்துடன் அவனைப் பார்த்தவாறே...
"தெரியலைங்க, டாக்டர் ஒன்னும் சொல்லலையே.. ஒரு வேளை அத்தைக் கிட்ட எதுவும் சொல்லியிருப்பாங்களோ" என்று குழந்தைத் தனமாகக் கேட்ட தன் மனையாளைக் கண்டு புன்னகைத்தவன் அவளைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து...
"சரி, நீ தூங்கு" என்றான்.
அவனின் அணைப்பைத் தேடி அவனுடன் ஒண்டிக் கொண்டிருந்தவளுக்கு அவன் தூங்கச் சொல்லவும் ஏமாற்றமும் பரிதவிப்பும் போட்டிபோட சில நிமிடங்கள் வரை அமைதியாகப் படுத்திருந்தவள் மேலும் பொறுக்க முடியாமல் சன்னமான குரலில்...
"எனக்குத் தூக்கம் வரலையே" எனக் கூற...
மனைவியின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் புரிந்திருந்தவன் அவளின் முகத்தை நிமிர்த்தி...
"திவி... இது நமக்கு ஃபர்ஸ்ட் டைம் ப்ரெக்னன்ஸி... முதல்ல நான் எப்படி உன் கிட்ட நடந்துக்கனும், உன்னை எப்படிப் பார்த்துக்கனும் அப்படின்னு எனக்குத் தெரியனும்... அதுக்கு நான் நாளைக்கே டாக்டர் ஆன்டிக்கு கால் பண்ணி விசாரிச்சுக்கிறேன்... அப்புறம் பார்க்கலாம்" என்று சொன்னவன்,
அவளை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டு கண்களை மூட,
தன் மேல் தன் கணவனுக்கு இருந்த கரிசனத்தில் விழிகளில் கண்ணீர் துளிகள் பனிக்க, அவன் முகத்தை நோக்கி எம்பியவள் முதன் முறை தானாகத் தன்னவனின் இதழ்களில் மென்மையாக முத்தம் பதித்தாள்....
தன்னவளின் முதல் இதழொற்றலில் சிலிர்த்தவனின் உடல் உணர்ச்சிகளின் பிரவாகத்தால் துடிக்க, தாபத்தைத் தட்டி எழுப்பும் தன் மனையாளின் எழில் முகத்தைத் தன் கரங்களில் ஏந்தியவன் மென் குரலில்....
"ப்ளீஸ்டி, என்ன ரொம்பச் சோதிக்காதடி" என்றான்...
அப்பொழுது தான் தான் செய்த செயலை உணர்ந்தவள் சட்டென முகம் சிவக்க அவனை விட்டு விலகப் போக, அவளைத் தன் பக்கம் இழுத்தவன் அவளை மூச்சு முட்ட இறுகக் கட்டி பிடித்துப் பின் விடுவிக்க மனமில்லாமல் விடுவித்துத் தூங்க சொன்னவன் அவளைத் தன் கையணைப்பிலேயே வைத்துக் கொண்டு சடுதியில் தூங்கிப் போனான்.
கணவனின் அரவணைப்பில் படுத்து இருந்தவளுக்கு ஏனோ சந்தோஷத்தில் உறக்கம் வரவில்லை...
அவனின் இடது கையை எடுத்து தன் வயிற்றில் வைத்துக் கொண்டு இன்னும் அவனை நெருங்கி படுத்தவளின் மனம் முழுக்க வரப் போகும் அந்தக் குட்டி பொக்கிஷத்தின் நினைவிலேயே இருந்தது... மனம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தது...
தொடரும்..