அத்தியாயம் - 25
மனநிறைவுடன் கூடிய கூடல் இருவரின் உள்ளங்களிலும் பரவசத்தை ஏற்படுத்த, அவளும் அவனோடு ஒன்ற, தன்னோடு அவளை இறுக அணைத்துக் கொண்டவனுக்கு விடிந்தப் பின்னும் அவளை விட மனம் வரவில்லை...
அவன் மனையாளும் கணவனின் இந்த எதிர்பாராத அனுசரணையாலும், மென்மையான அணுகுமுறையாலும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற பெண்ணிற்கே உரிய நான்கு குணங்களையும் தன் கணவனுக்காகத் தள்ளி வைத்தவள் அவனின் தேடலை பூர்த்திச் செய்ய, அவன் இத்தனை நாட்கள் பாதுகாத்திருந்த பிரம்மச்சரியம் அவனை விட்டு வெகு தூரம் போயிருந்தது...
களைத்து களைந்து போனவள் கணவனின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றி முடிக்கவும் அவன் அறையில் இருந்த கடிகாரம் மணி ஆறு என்பதை மெல்லிய ஒலியில் அடித்துக் காட்டவும் தன் கணவனை விட்டு வெட்க முகத்துடன் எழப் போனவளை அவன் சட்டென்று கரம் பற்றி இழுத்ததில் போர்வையை மட்டுமே ஆடையாகப் போர்த்தியிருந்தவளின் போர்வையும் முழுக்க விலக, நாணத்தால் துடித்துப் போனவளை கண்டு வாய்விட்டு சிரித்தவன்...
"எங்க போற?" என்றான்...
"லேட்டாகிடுச்சு... மாமாவுக்கு டிபன் செய்யனும்…" என்று மெதுவாகக் கூற....
அவளை இழுத்து தன் நெஞ்சின் மேல் போட்டுக் கொண்டவன்....
"பரவாயில்லை, படு…" என்று மேலும் அவளைத் தன்னுடன் இறுக்க, தன்னைக் களைத்தவனின் கைவளைவுக்குள் அகப்பட்டுக் கொண்டவள் அவனின் வெற்று மார்பில் தலை சாய்த்து முகம் புதைத்து தூங்கியும் போனாள்.
உடல் அசதியினால் வந்த உறக்கம் மட்டும் அல்ல அது...
திருமண நாளன்றிலிருந்து முன் பின் அறியாத இரு இளம் உள்ளங்களின் வாழ்க்கை பாதையை விதி தன் போக்கில் வளைத்து சூறாவளியாய் சுழற்றி அடித்ததில் துடித்துக் கசங்கி, கலங்கி போன மனது, மழை நாளில் மெல்லிய காற்று சில்லென்று முகத்தில் வீசும் பொழுது ஏற்படுமே ஒரு சிலிர்ப்பு அது போல் குளிர்ந்து அமைதியாய் உறங்கிய உறக்கம் அது...
தம்பதியர் இருவருக்குமே....
கணவனின் அணைப்பில், அவளை இனி ஒரு நொடி கூடப் பிரியக்கூடாது என்பது போல் அவளை இறுக்கியவாறே அவன் தூங்கிப் போக, உடல், மனக் களைப்பில் நன்றாக அசந்துத் தூங்கிக் கொண்டிருந்தவளுக்கு விழிப்பு வந்ததும் நேற்று நடந்த அழகிய சங்கமம் நியாபகத்தில் வர கண் விழித்தவள் படுத்திருப்பது தன் கணவனின் அணைப்பில், அவன் நெஞ்சில் என்று உணர்ந்து பூரிப்பில் புன்னகைத்தவள் மெல்ல எழுந்தாள் அவன் விழிக்காத வண்ணம்....
வெட்கத்துடன் தலையைத் தூக்கிப் பார்த்தவளுக்கு அங்குத் தன் கணவன் தன்னை இன்னமும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்க, மெதுவாக எழுந்து கட்டிலுக்குக் கீழே கிடந்த தன் துணிகளை எடுத்தவள் எங்கே அவன் முழித்து விடுவானோ என்று பயந்து விரைந்து குளியல் அறைக்குள் நுழைந்து புடவையை அணிந்து கொண்டு பின் மஹாவின் அறைக்குள் சென்றாள்...
குளித்து முடித்து விரைவாகக் கீழே வந்தவள் அங்குத் தெய்வானையும் அல்லியும் சமையல் அறையில் இருக்க,
"அக்கா, எப்படி இருக்கீங்க?" என்ற குரலில் திரும்பி பார்த்தவர்கள் சந்தோஷத்தில் அவளைக் கட்டி பிடித்துக் கொண்டார்கள்....
"என்னடா திவ்யா இப்படிப் பண்ணிட்ட? இப்படியா சொல்லாம கொள்ளாம போவ??" என்று தெய்வானை கேட்க,
அன்று நடந்த களேபரத்தைக் கண் கொண்டு பார்த்திருந்த அல்லிக்குத் திவ்யா திரும்பி வந்ததே பிரமிப்பாக இருக்க...
"விடுக்கா, திவ்யாம்மா வந்ததே சந்தோஷம்…" என்று கூறியவளைக் கண்ட திவ்யாவிற்குத் தன் புகுந்த வீட்டில் மாமியார் முதல் சமையல் அறையில் வேலைப் பார்ப்பவர்கள் வரையில் அனைவருக்கும் தன் மேல் இத்தனை பாசமா என்று இருந்தது.....
இரு நாட்களுக்கு முன் வரை கணவனை மட்டும் அந்தப் பட்டியலில் சேர்க்காமல் இருந்திருந்தாள்....
ஆனால் அவனும் தன் காதலின் அளவை, தன் மனையாளின் மீது தான் வைத்திருந்த நேசத்தின் உச்சியை அவளுக்கு விடிய விடிய காட்டிவிட்டானே தன் ஆண்மையின் துடிப்போடு, ஆனால் வெறியில்லாத மென்மையான சங்கமத்திலும், இணக்கமான உறவிலும்....
காலை டிஃபனை செய்து முடித்தவர்கள் டைனிங் டேபிளில் உணவை வைக்க, தன் அறையில் இருந்து பாலாவும், அருணும் கீழ் இறங்கி வர, அவர்களுக்கு டிஃபனைப் பரிமாற ஆரம்பித்தவளை மாடியில் இருந்து ரசித்துக் கொண்டே படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் அர்ஜூன்...
அவனின் அரவத்தில் திரும்பிப் பார்த்தவளைக் கண்ட அர்ஜூன் அவளைப் பார்த்து கண்ணடித்து, உதடுகள் குவித்துச் சைகையில் முத்தம் இட, அவனைப் பார்த்ததுமே கூச்சம் உடல் முழுவதும் பரவியிருக்க, இதில் அவனின் இந்தச் சைகைகள் அவளை நாணத்தின் உச்சிக்கே கொண்டு செல்ல, சட்டென்று செவ்வானமாய் முகம் சிவந்து தலைக் கவிழ்ந்தாள்...
அவளின் செய்கையில் இதழ் விரித்துச் சிரித்தவன் தந்தைக்கும் தம்பிக்கும் காலை வணக்கம் சொன்னவன் தன் மனையாளின் அருகில் போடப்பட்டிருந்த சேரில் அமர, தன்னருகே நெருங்கி நின்றுப் பரிமாறத் துவங்கியவளின் புடவையைத் தன் பாதத்தினால் இறுக்கி பிடிக்க, சட்டென்று தன் புடவை கீழே இழுக்கப் படுவதைக் கண்டவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றதில் கணவனை நிமிர்ந்து பார்த்து "ப்ளீஸ்" என்பது போல் கெஞ்சினாலும் அவன் விட்டால் தானே!!
நேற்று வரை அர்ஜூனின் அதிகாரத்தையும், ஆளுமையையும், கம்பீரத்தையும், கோபத்தையும் மட்டுமே பார்த்து பயந்திருந்தவளுக்கு அவனின் இந்தக் குறும்பு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்க, இதில் அவனை நிமிர்ந்துப் பார்க்க வெட்கம் தடைப் போட குனிந்தவாறே அவனுக்கும் பரிமாறிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவனின் முகத்தில் அவளின் வெட்கத்தின் அர்த்தம் புரிந்து புன்னகை படர்ந்தது..
உணவு அருந்திக் கொண்டிருந்த மாமனாரின் தட்டில் உணவு தீர்ந்துப் போனதைக் கண்டவள் தன் கணவன் அவன் காலால் தன் புடவையை இன்னும் பிடித்திருப்பதை மறந்து நகர முனைந்தவள் சேலை தடுக்கி தடுமாறச் சட்டென்று தனது இடது கையால் அவளின் இடையைப் பிடித்துக் கீழே விழாமல் நிற்க வைத்தவனுக்கு முகம் கொள்ளாத பூரிப்பு...
"பாத்துடா திவ்யா" என்ற பாலாவின் குரலில் அவளை விடுவித்தவன் புன்னகைத்துக் கொண்டே சாப்பிட்டவாறே தந்தையிடமும் அருணுடனும் பேச துவங்கவும், உண்மையில் அவனின் இணக்கமான இந்த முகமும், புன்னகை தவழும் இதழ்களும் பாலாவிற்கும் அருணிற்குமே வியப்பாய் இருந்தது.
எப்பொழுதும் தொழில், தொழில் சம்பந்தப்பட்ட மீட்டிங்குகள், வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் கூட்டங்கள், தொழிற்சாலைகளைச் சந்திக்கும் பயணங்கள், தொழில் சம்பந்தமான வெளியூர் வெளிநாடு நீண்ட பிரயாணங்கள் என்று பரபரவென்று இருப்பவன், டைனின் டேபிளில் உணவருந்தும் பொழுது கூடக் கடுமையாகப் பேசும் மகனின் முகம் இன்று மகிழ்ச்சியில் திளைத்திருப்பதைக் கண்ட பாலாவிற்கு, மகனிற்கும் மருமகளிற்கும் இடையில் நடந்தேறியிருந்த சங்கமம் புரிந்தது....
ஸ்ரீயாவது இவர்களைப் பற்றிய தன் வேதனையை, கவலைகளை வாய்விட்டு சொல்லிவிடுவார்....
ஆனால் ஒரு ஆண்மகனாக, குடும்பத்தின் தலைவனாகத் தன் மனதில் இருக்கும் கவலையைச் சொல்லி மேலும் தன் மனைவியை வருத்தப்படுத்த விரும்பாமல் தனக்குள்ளே போட்டு பூட்டி வைத்திருந்தவராயிற்றே பாலா அத்தனை வருத்தங்களையும்....
இன்று இவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு ஒரு தகப்பனாக அவரும் உள்ளம் பூரித்துத் தான் போனார்...
மூவரும் உண்டு முடித்ததும் அர்ஜூன் நேரே ஹாலிற்குச் சென்றவன் டிவியை உயிர்பித்துப் பார்க்க துவங்கவும், வெளியே கிளம்பிய பாலா அவனைக் கண்டு அதிசயித்து....
"அர்ஜூன்... கிளம்பலையா?" எனவும்..
"நோ டாட்... நான் மாமை வந்து பார்த்துவிட்டு அப்புறம் ஆஃபிஸிற்குப் போறேன்... நீங்க கிளம்புங்க…" என்றவன் கண்களைத் தொலைக்காட்சியில் செலுத்த, மூன்று பிள்ளைகளைப் பெற்றவருக்குத் தெரியாதா ஏன் வேலை வேலை என்று எப்பொழுதும் காலில் வெந்நீர் ஊற்றியதைப் போல் பறந்து கொண்டிருந்த மகன் இன்று என்றும் இல்லாத அதிசயமாய் அலுவலகத்திற்குக் கிளம்பாமல் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று...
புன்னகைத்தவர் அருணையும் அழைத்துக் கொண்டு கிளம்ப, அவர்கள் கிளம்பும் வரை காத்து இருந்தவன் "திவ்யா" என்று அழைக்க அவன் சத்தத்தைக் கேட்டு வேகமாக வந்தவளை அவள் சுதாரிக்கும் முன் தன் கைகளில் ஏந்தியவன் மாடி ஏறினான்...
சட்டென்று அவனின் இந்தச் செய்கையில் தடுமாறியவள் அவனின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொள்ள...
"கவலைப் படாதே கீழே போட்டுற மாட்டேன்" என்றவன் சிரிக்க, எப்பொழுதும் அழுத்தமான முகத்துடனும் இறுக்கத்துடனும் இருப்பவன் இன்று மீண்டும் சத்தமாக சிரிக்கவும், அவனது சிரிப்பில் அசட்டுத்தனம் இல்லாது ஆண்மையோடு கம்பீரமும் கலந்து இருப்பதை கண்டு மனம் சிலிர்க்க ரசித்தவள், இருந்தும் பகலில் என்ன இது என்று....
"ஐயோ! மாமா, அருண் அத்தான் யாராவது வரப் போறாங்க, கீழே இறக்கி விடுங்க…" என்றாள் மெல்லிய குரலில்...
இலகுவாக அவளை இரு கரங்களிலும் சிறு பிள்ளையை தூக்குவதுப் போல் ஏந்தியவாறே மாடி படிகளில் ஏறியவன்,
"அவங்க யாரும் இல்லை... இருந்தாலும் என்ன, என் வைஃப்ப நான் தூக்கறேன்…" என்றான் தன்னவளுக்குள் மீண்டும் மீண்டும் மூழ்கத் துடித்துக் கொண்டிருக்கும் மனதின் பரவசத்துடன்...
வேகமாகப் படிகளில் ஏறி தன் அறைக்கு வந்தவன் அதே வேகத்தில் காலால் கதவை சாத்தியவன் அவளைப் படுக்கையில் கிடத்த, தயங்கியவாறே மெதுவாக....
"அத்தைக்குச் சாப்பாடு செஞ்சு ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துட்டு போகனும்…" என்றாள்...
"அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்…" என்றவன் அவள் மேல் சரிய,
"இல்ல, மதிய சாப்பாடு செஞ்சுக் கொடுக்கிறேன்னு மாமாவிடம் சொல்லிட்டேன்…" என்று இழுத்தவளை ரசித்துப் பார்த்தவன்....
"இப்படி பேசிட்டே இருக்கும் வாயை எப்படி அடைக்கறது?" என்றவனின் பார்வை அழுத்தமாக அவளின் இதழில் படிய,
அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரிந்து அவள் வெட்கத்தில் முகம் சிவக்க, கணவனின் உரிமையை மீண்டும் மீண்டும் நிலை நாட்ட ஆரம்பித்தவன் அவளை விடுவிக்கும் பொழுது மதிய உணவு நேரமே வந்துவிட்டது..
ஒரு வழியாக அவளின் அசதிப் புரிந்து அவளை விடுவிக்க, அவனை விடுத்து வேகமாகப் புடவையைச் சுற்றிக் கொண்டு வெளியே செல்ல முற்பட்டவளைத் தடுத்தவன்,
"திவ்யா, உன் ட்ரெஸ் எல்லாத்தையும் இந்த ரூமிற்கு மூவ் பண்ணிடு" என்றான்...
வெட்க சிரிப்போடு சரி என்பது போல் தலையாட்டியவள் மஹாவின் அறைக்குள் நுழைந்தாள்.
மீண்டும் குளித்து முடித்துக் கீழே வர, அங்குத் தெய்வானையும் அல்லியும் மதிய சமையலை முடித்திருந்தார்கள்.
சமையல் அறைக்குள் நுழைந்த அவளை விஷம புன்னகையுடன் பார்த்த அல்லி,
"என்ன திவ்யாம்மா, மாயமா மறைஞ்சுப் போயிட்டீங்க... வேற புடவை வேறக் கட்டிருக்கீங்க... மறுபடியும் தலை குளிச்சிருப்பீங்க போல இருக்கு" என்று கிண்டல் செய்ய,
அவளின் சிவந்த முகத்தைப் பார்த்த தெய்வானைக்குக் கூட "அப்பாடி" என்று இருந்தது...
"ஒரு வழியாக ஸ்ரீம்மா ஆசைப் பட்ட மாதிரி இரண்டு பேரும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் போல" என்று மனம் மகிழ,
"அக்கா, அத்தைக்குச் சாப்பாடு எடுத்துட்டு போகனும்.... கொஞ்சம் உதவி பண்ணுறீங்களா?" என்றாள்...
மூவரும் சேர்ந்து மதிய உணவை கட்டி முடிக்கவும் அர்ஜூன் கீழே இறங்கி வரவும் சரியாக இருந்தது...
திவ்யாவிடம் வந்தவன்,
"நானே உன்னை ஹாஸ்பிட்டலில் ட்ராப் செய்துடுறேன்... வா…" என்றான்...
சரி என்றவள் அவனுடன் கிளம்பக் காரில் ஏறியதில் இருந்து தன் முகம் பார்க்க கூச்சப்பட்டுக் கொண்டு வெளியில் வேடிக்கை பார்க்கும் மனைவியைப் பார்த்தவன் காரில் நிலவிய அமைதியை கிழிப்பது போல்...
"கொஞ்சம் இந்தப் பக்கமும் பார்க்கறது…" என்றான்...
அவனின் திடிர் பேச்சில் சட்டென்று அவனைப் பார்க்க, சிரித்தவன் அவளை இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொள்ளச் சரியாக அந்த நிமிடம் அலை பேசியில் அர்ஜூனை அழைத்த கதிர் ஏதோ முக்கிய அலுவல் விஷயமாகப் பேசியவன் அர்ஜூனை உடனே வரச் சொல்லி அழைத்தான்....
மருத்துவமனை வாயிலில் காரை நிறுத்தியவன்...
"திவ்யா... நீ போ... எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கு... நைட் வந்து மாம பாக்குறேன்னு சொல்லிடு" என்றவன் அவள் இறங்க முற்பட,
சட்டென்று அவளின் கைப் பிடித்து அருகே இழுத்தவன், காரின் டேஷ்போர்டில் இருந்து அவளுக்கு ஒரு சின்னப் பெட்டியை எடுத்துக் கொடுத்தான்...
என்ன என்று திருதிருவென்று விழித்தவளைப் பார்த்தவன்...
"பிரிச்சுப் பாரு" எனவும்..
அவனைப் பார்த்தவாறே அவளும் அதனைப் பிரிச்சுப் பார்க்க அங்கு ஒரு புத்தம் புதிய தற்போதைய மாடல் அலைபேசி இருந்தது...
"ஙே" என்று அவனை விழித்துப் பார்த்தவளை ரசித்துப் பார்த்தவன்....
"அருண் வந்த பிறகு அவனிடம் இதை எப்படி ஆப்பரேட் பண்றதுன்னு கத்துக்க" என்றான்...
ஒரு மழை நாளில் அவளுக்கு முதல் முறை புடவை எடுத்த அன்று ஒரு கடையின் வாசலில் நிற்கச் சொன்னதே அவளுக்கு ஒரு அலை பேசி வாங்கித் தருவதற்காகத் தான்...
பின் ரிஷப்ஷன் அன்று அர்ஜூனின் அலை பேசிக்கு அழைத்த ஸ்ரீ, கோபத்தில் அவரின் அழைப்பை அவன் எடுக்காததைத் தெரிந்து திவ்யாவை அழைத்தவர் அர்ஜூனிடம் அவளின் அலை பேசியைக் கொடுக்கச் சொன்னாரே, அப்பொழுதே பார்த்திருந்தான் அது எவ்வளவு பழைய மாடல் அலை பேசியென்று...
அதனால் தான் மறுநாள் அவளுக்கு இந்தப் புது அலை பேசியை வாங்கியிருந்தான்...
ஒரு வேளை அவளின் புடவை அன்று நனைந்திருக்கவில்லை என்றால் அவளையும் கடைக்குள்ளே அழைத்துப் போய் வாங்கிக் கொடுத்திருப்பான்... அப்பொழுதாவது அவனின் அன்பைப் புரிந்து கொண்டு இருந்திருப்பாளோ??
எதற்கும் ஒரு நேரம் காலம் இருக்கிறது என்று விதி நினைத்துவிட்டால் அதனை மாற்றும் வல்லமை யாருக்கு இருக்கிறது இந்த உலகத்தில்??
"எதுக்குங்க இது? என்கிட்ட தான் வேற போன் இருக்கே.." என்று அவள் தயங்க...
"அது வேண்டாம்... இனி இதில் தான் நான் உன்னைக் கூப்பிடுவேன்" என்றவன் அவள் சரி என்று தலை அசைத்துவிட்டுக் காரில் இருந்து இறங்க முற்பட மீண்டும் அவளின் கரம் பற்றி இழுத்தவன்...
"திவ்யா.... இன்னையிலிருந்து நீ என் ரூமில் தான் தங்கனும்.... என் கூடத் தான் தூங்கனும்... ஆனால் நேத்து நைட் மாதிரி வெயிட் பண்ணிட்டு இருக்க மாட்டேன்.... வந்து தூக்கிட்டு போய் விடுவேன்" என்றான்...
விழிகளில் நாணம் படர்ந்திருக்க, சிறு புன்சிரிப்புடன் சரி என்று காரில் இருந்து இறங்கியவள் அவன் கார் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்....
அவனும் அவள் மறையும் வரை கார் ரியர் வியூ கண்ணாடியில் பார்த்திருந்தவனின் மனம் நிறைந்து இருந்தது... மகிழ்ச்சியில் திளைத்திருந்தது...
ஆனால் திவ்யாவிற்கோ என்ன தான் அவன் அவளை நேற்று முதல் காதலில் திக்கு முக்காட வைத்திருந்த போதிலும், மன நிறைவுடன் ஈருடல் ஓருயிராகக் கூடியிருந்த போதிலும், அவன் தன்னை விவாகரத்து பண்ணப் போவதில்லை என்று சொல்லியிருந்தாலும் விவாகரத்துப் பத்திரத்தில் அவளிடம் கையெழுத்து வாங்கியிருந்தது மனதில் இன்னமும் உறுத்திக் கொண்டே இருக்க, உள்ளத்தில் சிறு கலக்கமும் வரத் தான் செய்தது...
"ஆனால் நிச்சயம் இனி அவர் என்னை விட்டு இருக்க மாட்டார்" என்றும் அவளின் ஆழ் மனதில் குரல் ஒன்று எழும்ப அதில் சிறிதே நிம்மதி அடைந்தவள் நேரே தன் மாமியாரின் அறைக்குள் நுழைந்தவாறே...
"மன்னிச்சிடுங்க அத்த, வர லேட்டாகிட்டுது" எனவும்,
அவளின் முகத்தை ஆராய்ச்சியுடன் பார்த்திருந்தது ஸ்ரீயின் கண்கள்...
அவரின் பார்வையைப் புரிந்து கொள்ளாமல் மதிய உணவை எடுத்து வைக்க ஆரம்பிக்க, அவளை அருகே அழைத்த ஸ்ரீ...
"திவ்யா, அர்ஜூன் நேத்து உன் கிட்ட கோபப் படலேயே?" என்றார்.
"அர்ஜூன்" என்றதும் அவளையும் அறியாமல் நேற்று நடந்ததை முகம் காட்டிக் கொடுக்க வெட்கத்தில் சிவந்த மருமகளின் முகத்தைப் பார்த்த ஸ்ரீயின் உள்ளம் குளிர்ந்தது...
அவளின் கரம் பற்றித் தன் அருகில் அமர்த்திக் கொண்டவர் சன்னமான குரலில்...
"திவ்யா... இது உங்க அம்மா கேட்க வேண்டியது... அவளுக்குப் பதிலா நான் கேட்குறேன்... அர்ஜூன் உன்னிடம் ரொம்ப முரட்டுத் தனமாய் நடந்து கொள்ளவில்லையே" என்று அவளின் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தவாறே கேட்க...
தன் மாமியார் என்ன கேட்க வருகிறார் என்பதைப் புரிந்துக் கொண்டவள் இளம் முறுவலுடனும் வெட்க முகத்துடனும் தலை கவிழ்ந்தவாறே "இல்லை" என்பது போல் மெதுவாகத் தலை அசைக்க...
ஒரு அன்னையாகத் தன் மகனின் பரிவில், மனையாளுடனான அவனின் அனுசரணையில் மனம் நிறைந்துப் போனவர்...
"அப்பா முருகா, சீக்கிரம் ஒரு பேரப் பிள்ளைய கொடுப்பா" என்று வேண்ட, முருகனோ,
"அடப் போம்மா, இதுங்க இரெண்டையும் சேர்த்து வைக்கிறதுகுள்ள எனக்கே மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கிடுச்சு... இதில நீ அதுக்குள்ள பேரப்பிள்ளை கேட்கிற" என்றார்...
அங்கு திவ்யாவை இறக்கி விட்டு தன் அலுவலகத்தில் நுழைந்த அர்ஜூனின் முகத்தில் என்றும் இல்லாத ஒரு மகிழ்ச்சியும் பூரிப்பும் தெரிய அவனின் முகம் மாற்றத்தை கண்டு வித்தியாசமாக உணர்ந்த அலுவலர்களும் அர்ஜுனின் செயலாளர்களும் ஒருவருக்கொருவரின் முகத்தை திரும்பிப் பார்த்துக் கொள்ள அவர்களின் அறைக்குள் நுழைந்த கதிரைக் கண்டவர்கள்...
"என்ன சார்? இன்னைக்கு MD முகம் செம்ம க்ளோ [Glow] ஆகுது??" என்று நக்கல் அடித்தார்கள்...
சற்று நேரத்திற்கு முன் அர்ஜூனை அழைத்துப் பேசியிருந்த கதிருக்குக் கூட அவனின் குரலில் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சிக் கலந்திருந்ததாகவே பட்டிருந்தது... அதற்கு காரணம் இந்த இரண்டு நாட்களாக அர்ஜூனின் திட்டத்தின் படி தான் செய்து முடித்திருந்த வேலைகள் என்றே கதிர் நினைத்திருந்தான்...
ஏனெனில் அர்ஜூனின் காரியத்திட்டங்களும் அதனை செயல்படுத்திய முறைகளும் கதிருக்கே வியப்பையும் சிறிதே அச்சத்தையும் கொடுத்திருந்தது...
தன் MD -யின் அறைக்குள் அவனின் அனுமதிப் பெற்று கதிர் நுழைய, அங்கு கணினியில் ஆழ்ந்து வேலை செய்துக் கொண்டிருந்த அர்ஜூனைக் கண்டவனுக்கு "அப்பா, இந்த சின்ன வயசில் என்னா தைரியம் இவருக்கு?" என்றே தோன்ற,
அவனை "சார்" என்று அழைத்தவனை நிமிர்ந்து பார்த்த அர்ஜூன்..
"என்ன கதிர்... ப்ளான் படி எல்லாத்தையும் பெர்ஃபெக்டா முடிச்சிட்டீங்க போல" என்றான் இதழ்களில் வழியும் புன்னகையுடன் ஆனால் கண்களில் அதே கடுமை...
"ஆமாம் சார்... அநேகமாக இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு அவன்கிட்ட இருந்து ஃபோன் வரும்" என்று அவன் சொல்லி முடிக்கவில்லை.... அர்ஜூனின் அலை பேசி அலறியது....
எடுத்து காதில் வைத்தவன் மௌனமாக இருக்க...
எதிர் முனையில் இருந்தவனின் உலைப் போல் கொதித்த மனம் மேலும் எரிமலையாக வெடிக்க துவங்க...
"என்ன அர்ஜூன்... நினைச்சதை செஞ்சு முடிச்சிட்டன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கப் போல?" என்றான் எதிர் முனையில் இருப்பவன் பல்லைக் கடித்துக் கொண்டு...
அர்ஜூனின் அலுவலகத்திற்கு வருமான வரிச் சோதனையின் காரணகர்த்தாவான ராம் இண்டஸ்ட்ரிஸின் வாரிசு சம்பத்...
அவன் காட்டுக் கூச்சல் போட்டும் சேரில் தணிவாக சாய்ந்து அமர்ந்திருந்த அர்ஜூன் மேலும் நன்றாக சாய்ந்து தன் தலை முடியை கோதிவிட்டுக் கொண்டே ஸ்டையிலாக சிரிக்க...
அவனின் சிரிப்பில் அதிர்ந்தது சம்பத் மட்டும் அல்ல... கதிரும் கூடத் தான்...
அது ஒரு ஆர்ப்பாட்டமான சிரிப்பு அல்ல... ஆனால் எதிராளியின் நெஞ்சுக் கூட்டை சில்லிட வைக்கும் அழுத்தமான சிரிப்பு...
முகத்தில் சிரிப்பு படர்ந்திருந்தாலும் அர்ஜூனின் உள்ளத்தில் தெறித்துக் கொண்டிருந்த கோபத்தை எதிர்முனையில் இருந்த சம்பத் மட்டும் பார்த்திருந்தால் கதி கலங்கிப்போயிருப்பான்...
கோபத்தை முகத்திலேயோ அல்லது வார்த்தைகள் வழியாகவோ வெளிப்படுத்திவிடும் மனிதர்கள் சாதாரணமானவர்களே...
ஆனால் அத்தனை சினத்தையும் ஆங்காரத்தையும் மனதிற்குள் அடக்கி வைத்துக் கொண்டு முகத்தில் முறுவலை தவழவிட்டுக் கொண்டிருந்த அர்ஜூனைக் கண்டிருந்த கதிரின் மனதில் கூட, இவரை எதிர்ப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் வீழ்ச்சியைக் காணக் கூட அவர்கள் இருக்க மாட்டார்கள் என்றே தோன்றியது...
தான் இத்தனை பேசியும் இன்னும் ஒரு வார்த்தைக் கூட பேசாத அர்ஜூனின் மௌனத்தையும், தன் கோபத்திற்கு பதிலாக வெறும் சிரிப்பை மட்டுமே உதிர்க்கும் அர்ஜூனின் ஆணவத்தையும் கண்டு மேலும் கொந்தளித்துப் போன சம்பத்...
"அர்ஜூன்... நீ தைரியமானவனா இருந்தால் என்னுடன் நேரில் மோதியிருக்கனும்... அத விட்டுட்டு இப்படி கோழை மாதிரி எங்கள் முதுகில் குத்தியிருக்கக் கூடாது" என்று கொதிக்க...
மனதில் அலைமோதிக் கொண்டிருக்கும் கோபம் எப்பொழுதாவது தன் எல்லையைக் கடக்கும் பொழுது அதன் பிடியில் இருந்து வெளி வருவதற்காகவோ, அல்லது மன உளைச்சல்களிலிருந்து தன் உள்ளத்தை நிதானப்படுத்த முயற்சிக்கும் பொழுதோ, உடற்பயிற்ச்சிக்கு அடுத்து அர்ஜூன் தேர்ந்தெடுக்கும் வழி சதுரங்க விளையாட்டு...
அவன் அறையில் அவனுக்கு எதிராக இருக்கும் மேஜையில் எப்பொழுதும் சதுரங்க பலகை காய்களுடன் இருக்கும்...
தன்னைத் தானே எதிர்த்து விளையாடுவதில் அவனுக்கு அத்தனை விருப்பம்... நமது எதிரி நமக்கு எதிராக தன் ஆட்டத்தை துவங்கும் முன் அவனின் அடுத்த மூவ் (நடவடிக்கை) என்னவாக இருக்கும் என்பதை எதிரியின் இடத்தில் இருந்து நாம் பகுப்பாய்வு செய்யும் பொழுது அவனுக்கே தெரியாமல் அவனை அடித்து வீழ்த்துவது எளிது...
“To know your enemy, you must become your enemy” என்பதுப் போல்...
சாய்ந்து அமர்ந்திருந்த தன் சேரில் இருந்து லேசாக முன்னோக்கி சாய்ந்த அர்ஜூன் தன் மேஜையின் மீதிருந்த சதுரங்க பலகையில் [Chess Board] காய்களை நகர்த்தியவாறே பேசத் துவங்கினான்...
"சம்பத்... இதுவரைக்கும் உங்க அப்பா மட்டும் தான் அடி முட்டாளுன்னு நினைச்சிருந்தேன்... ஆனால் இப்ப தான் தெரியுது... உங்கள் குடும்பத்தில் மத்தவங்களைக் கம்பேர் பண்ணும் போது அவர் எவ்வளவோ புத்திசாலிப் போலருக்கே..." என்று சிரிக்க...
அர்ஜூனின் பதிலில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற சம்பத் பேசத் துவங்கும் முன்...
"சம்பத்... நீ பேசிட்டு இருக்கும் போது நான் பேசாமக் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்... ஸோ திஸ் இஸ் மை டேர்ன்... [So this my turn]" என்றவன் சதுரங்க பலகையில் அடுத்த காயை நகர்த்தியபடியே மேலும் தொடர்ந்தான்...
"டு யூ லைக் டு ப்ளே செஸ் சம்பத்? [Do you like to play Chess Sampath?] லைஃப் இஸ் லைக் எ செஸ் கேம் [Life is like a chess game] செஸ்ஸில் ஒவ்வொரு மூவிற்கும் ஒரு காரணம் இருக்கு... அதேப் போல் நாம் கொஞ்சம் அசந்தோம்னா நாம் எடுக்க வேண்டிய முடிவுகளை நம் எதிராளி எடுத்துவிடுவான்... அது மாதிரி எதிராளியோட பார்வையில் நாம் செய்யப் போறது ஒரு விதமா தெரியனும்... ஆனால் நாம் செய்றது வேற விதமாக இருக்கனும்.. எதிராளிக்கே தெரியாமல் அவனுடைய பானில் [Pawn] இருந்து க்வீன் [Queen] வரை அழிக்கனும்... அப்போதான் கிங்க [King] நிராயுதபாணியா நிக்க வச்சு செக் வைக்க முடியும்... இப்போ நீ அந்த நிலையில் இருக்கன்னு உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்..." என்றவன் கதிரைப் பார்த்து புன்னகைத்தான்...
ஏனெனில் ராம் இண்டஸ்ட்ரீஸின் தொழிற்சாலைகளின் முக்கிய பகுதிகளை இரவோடு இரவாக தீக்கு இரையாக்கியதும், வெளி மாநிலங்களில் இருந்து வந்துக் கொண்டிருந்த அவர்களின் கண்டெயினர்களில் முக்கியமானவைகளை விபத்துக்குள்ளாக்கியதும், இவை இரண்டு விபத்துக்களிலிருந்தும் அவர்கள் காப்பீட்டுத் தொகை வாங்கமுடியாத அளவிற்கு விபத்துக்களை காப்பீட்டுத் தொகைக்காக ராம் இண்டஸ்ட்ரீஸே செய்தது போல் அவர்களின் ஊழியர்களை வைத்தே சித்தரித்திருந்தது அர்ஜூன் என்றால் அதனை சாமார்த்தியமாக செயலாற்றியது கதிராயிற்றே.....
அதைப் போலவே தொழிற்களின் முதுகெலும்பான தொழிலாளர்களுக்குள்ளும், ஊழியர்களுக்குள்ளும் அவர்களின் யூனியன் தலைவரை வைத்தே மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கி கிட்டத்தட்ட இன்னும் சில நாட்களில் ராம் இண்டஸ்ட்ரிஸின் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தையும் அர்ஜூன் ஏற்பாடு செய்திருக்க, தொழிற்சாலைகளும் கண்டெயினர்களின் விபத்துக்களை மட்டுமே அறிந்திருந்த சம்பத்திற்கு அவன் கம்பெனியின் உள்ளுக்குள்ளே சிலந்தி வலைப் போல தொழிலாளர்களை கொண்டு அர்ஜூன் பின்னியிருந்த அபாயகரமான திட்டம் தெரியாமல் போனது அவனின் கொடுமையே...
மீண்டும் தொண்டையைக் கனைத்தவன்..
"என்ன சம்பத் லைனில் தான் இருக்கியா? லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... செஸ் விளையாடுறதுல இன்னும் ஒரு முக்கிய விஷயம் என்ன தெரியுமா?? என்ஜாய் யுவர்செஃப் [Enjoy yourself]... ஆண்ட் ஐ டு என் ஜாய் யுவர் டிஃபீட்... [And i do enjoy your defeat]" என்றவன் அலை பேசியை துண்டிக்க...
எள்ளும் கொள்ளும் வெடித்த முகத்துடன் அமர்ந்திருந்த சம்பத்தின் அருகில் வந்த ராமச்சந்திரன்...
"சம்பத்... இதத் தான் நான் முன்னேயே சொன்னேன்.... அவனோட மோதுறது எரிமலையோட மோதுறதுன்னு... இத இப்படியே விட்டுட்டு முதல்ல அவனால ஏற்பட்ட பிரச்சனைகளை சரி பண்ணுவது எப்படின்னு யோசி.... அர்ஜூனை தொழில் ரீதீயாக அடிக்க முடியுமான்னு பாரு... இல்லைன்னா இந்த பிரச்சனைகளை இதோடு விட்டுடு..." என்று அறிவுரைக் கூற...
அர்ஜூனின் இந்த அதிரடி ஆட்டங்களும் அதனால் ஏற்பட்ட நஷ்டங்களும் ஏற்கனவே சம்பத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்ததால் இனி அர்ஜூனை எதிர்த்து எந்த பயனும் இல்லை, அவனை எதிர்க்கவும் தெம்பில்லை என்று முடிவுக்கே சம்பத்தும் வர வேண்டியதாக இருந்தது...
கதிரை திரும்பிப் பார்த்த அர்ஜூன்...
"இஸ் தேர் எனிதிங்க் எல்ஸ் கதிர்? [Is there anything else Kathir?] " எனவும்...
"சார்... அமெரிக்க ஷிப்மெண்டும் கிளியராகிடுச்சு" என்றவன் சில நொடிகள் தயங்கி...
"சாரி சார்... நம்ம பசங்கக்கிட்ட எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கொஞ்சம் அதிகமாகவே காட்டிட்டாங்க போலிருக்கு... ஒரே நாளில் ஷிப்மெண்ட் கிளியர் பண்ணியாச்சு..." எனவும்...
"இட்ஸ் ஓகே... கதிர்... தட்டுற எடுத்துல தட்டியே ஆகனும்..." என்றவன் அவன் செல்லலாம் என்பது போல் மீண்டும் கணினியில் கண்களைப் பதிக்க...
வெளியே செல்ல எத்தனித்த கதிரை...
"கதிர்... பட் கஸ்டம்ஸ் எல்லாம் ஒழுங்கா பே (Pay) பண்ணிட்டீங்கள்ள?"
"யெஸ் சார்... நாம் பே பண்ண வேண்டியதெல்லாம் கரெக்டா செட்டில்மண்ட் பண்ணியாச்சு"
"ஹான்... தென் பேங்களூர் விஷயம் என்னாச்சு?"
"சார், இன்னைக்கு ஈவ்னிங் நான் பேங்களூர் போறேன் சார்..." என்று இழுக்க...
"கதிர்.. நீங்க போக வேண்டாம்... நானே போறேன்... இத இன்னும் இழுக்கக் கூடாது…" என்றவன் திவ்யாவிற்கு அழைத்தான்...
மாமியாருக்கு உணவு பரிமாறியவள் இரவு முழுவதும் சுத்தமாக உறக்கம் இல்லாததாலும் மதியம் வரை தன் கணவனின் வலுவான அணைப்பில் திணறி இருந்ததால் வந்த களைப்பிலும் சிறிதே உறங்க முற்பட அர்ஜூன் வாங்கிக் கொடுத்திருந்த அலை பேசி சிணுங்கியது...
அலை பேசியைப் பார்த்தவள் அதில் தன் கணவனின் எண் ஒளிரவும் சில நொடிகள் அதை எப்படி உபயோகப்படுத்துவது என்று தடுமாறி ஒரு வழியாக கண்டுப் பிடித்து, வெட்கத்துடன் பேச துவங்க மறுமுனையில் என்ன சொன்னானோ அவள் முகம் வாடியதை பார்த்த ஸ்ரீக்கு திக்கென்றது...
அவள் பேசி முடித்ததும் என்ன என்று கேட்க,
"இல்லை அத்த, அவங்களுக்குத் திடீர்னு பெங்களூர் போகனுமாம்.... (மறுபடியுமாஆஆஆ? என்று வாசகர்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது... என்ன செய்ய பெரிய பிஸ்னஸ்மேனிற்கு இதெல்லாம் சகஜமப்பா.. ஆனால் இந்த முறை அவன் கோபத்தில் போகவில்லையே!!!!).... ஏதோ பிஸினஸ் விஷயமா... வர மூன்று நாளாகுமாம்" என்றவள் அலை பேசியை அவரிடம் கொடுக்க, அவன் பேசியதை கேட்டவர்,
"சரிப்பா, நீ பத்திரமா போய்ட்டுவா" என்றார்...
அர்ஜூன் பெங்களூர் சென்றதும் தன் கணவன் இல்லாத வீட்டிற்க்கு போகப் பிடிக்காமல் திவ்யா ஸ்ரீயுடன் மருத்துவமனையிலேயே தங்கிவிட்டாள்.
அவன் பெங்களூர் சென்ற மூன்று நாட்களுக்குள் ஸ்ரீக்கும் உடல் நிலை தேறியதால் அவரை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்...
இதற்கிடையில் கலாவும் பேசி ஸ்ரீயின் உடல் நிலையை விசாரித்தவர், திவ்யாவின் செயலுக்கு மன்னிப்பு கேட்கவும் தவறவில்லை..
ஒரு வழியாக வீட்டிற்கு வந்த ஸ்ரீக்கு நிம்மதியாக இருக்க ஆனால் தன் கணவன் இல்லாமல் திவ்யாவிற்குத் தான் வீடே வெறிச்சோடி இருந்தது...
ஆனால் அவன் சொன்னது போல் முன்று நாட்களுக்குள் அவனின் வேலை முடியவில்லை...
அவர்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததை அறிந்தவன் ஓர் இரவு ஸ்ரீயை அழைத்தவன் அவரின் நலம் விசாரித்த பிறகு திவ்யாவை கேட்க, திவ்யாவை அழைத்த ஸ்ரீ அலை பேசியைக் கொடுத்தவர்...
"உங்க ரூமிற்க்கு போய்ப் பேசும்மா…" என்றார்...
தன் கணவனின் குரல் கேட்க ஆவலுடன் இருந்தவள் அலை பேசியை எடுத்துக் கொண்டு மாடி படிகளில் வேகமாக ஏற...
"பாத்து, அவன் லைனில் தான் இருப்பான்... மெதுவாகப் போ.... நீ விழுந்திடாத" என்று ஸ்ரீ சொல்ல,
சிரித்துக் கொண்டே அவனின் அறையை அடைந்தவள் கதவை சாத்திவிட்டுக் கட்டிலில் அமர்ந்து மெல்ல "என்னங்க" என்றாள்...
"சொல்லுங்க…" என்று அவன் மறுமுனையில் கிண்டல் செய்ய, அவளுக்கும் வெட்கத்தில் அதற்கு மேல் பேச்சு வரவில்லை...
சிரித்தவன் "உன்னைப் பார்க்கனும் போல இருக்குடி... அதுவும் இப்பவே…" எனவும், அவள் ஏதும் பேசாமல் போகவே "திவி, லைன்ல இருக்கியா?" என்றான்...
கணவன் தன் பெயரை முதன் முறை திவி என்று சுருக்கி அழைத்ததில் மனதிலும் உடலிலும் சிலிர்ப்பு உண்டாக அவன் நெஞ்சில் அந்த நிமிடமே சாய்ந்து கொள்ள மனம் அவனைத் தேடியது...
ஆனால் அர்ஜூன் அன்று கூடலின் போதே அவளை அவ்வாறே அழைத்திருந்தான்... அதனை உணர்ந்து கொள்ளும் நிலையில் அவள் தான் இல்லை...
ஆனால் இன்றும் அதே போல் அழைக்க முதன்முறை அவனின் செல்ல அழைப்பைக் கேட்டு சிலிர்த்தவள் "ம்ம்ம், இருக்கேன்" என்றாள்...
"த்ரீ டேய்ஸ்ல முடியும்னு நினைச்ச வேலை முடிய இன்னும் த்ரீ ஃபோர் டேய்ஸ் ஆகும் போல இருக்குடி... எப்படா வருவேன்னு இருக்கு, உனக்கு?" என்று கேட்க, இதற்கு என்ன பதில் சொல்வது என்று தான் அவளுக்குத் தெரியவில்லை....
மனது முழுவதும் தன் கணவன் எப்பொழுது வருவான் என்று ஏங்கி கிடக்க, ஆனால் வெட்கத்தை விட்டு அவனிடம் அதை எப்படிச் சொல்வது என்று தடுமாறியவள் மீண்டும் அமைதியாக இருக்க, அது அவனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது...
"என்னடி, எனக்கும் உங்களைப் பார்க்கனும் போல் இருக்குன்னு சொல்லுவன்னு எதிர் பார்த்தா ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற.... உனக்கு அப்படி எதுவும் இல்லையா என்ன?"
"ஐயோ! என்னங்க??" என்று அவள் அலற, சிரித்தவன் இந்த நிமிடம் அவள் முகம் எப்படி இருக்கும் என்று அவளின் முக மாற்றத்தை தன் கண் முன் கொண்டு வந்தவன், மனம் முழுவதும் தன் மனையாளின் முகமே நிரம்பியிருக்க, குதூகலத்துடன் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
ஒரு வழியாகச் சென்ற வேலை வெற்றிகரமாக முடிய சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவனின் நினைவில் தன் மனையாளின் நினைவே இருக்க, அவளைப் பார்க்க ஆவலுடன் வீட்டிற்கு விரைந்து வந்தவன், அங்கு வீட்டில் எல்லோரும் ஒன்றாகக் கூடி இருக்க அவன் காத்திருந்த மனைவியுடனான தனிமை வெகு நேரம் கிடைக்கவே இல்லை...
அவளும் முடிந்தவரை நாணத்தால் அவனைப் பார்ப்பதை தவிர்த்தவள் சமையல் அறையிலேயே முடங்கிக் கிடக்க, எப்படியும் இரவு ரூமிற்கு வந்து தானே ஆகனும் என்று நினைத்துக் கொண்டான்...
இரவு உணவு முடித்து, இன்னமும் திவ்யா மாடிக்குச் செல்லாமல் இருந்ததைப் பார்த்த ஸ்ரீ,
"என்னம்மா, இவ்வளவு நேரமாச்சு.... இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க... போ" எனவும்,
"தோ முடிச்சுட்டேன் அத்தே" என்றவள் இதற்கு மேலும் கீழே இருக்க வழியில்லை என்று நினைத்து மாடி ஏறினாள்...
அவளுக்காகக் காத்திருந்தவன் அவள் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைய, அங்குப் புன் சிரிப்புடன் கட்டிலில் சாய்ந்து படுத்திருந்த கணவனைப் பார்த்தவள் கூச்சத்தில் தலை கவிழ,
"அங்கேயே நின்னுட்டு இருந்தா எப்படி? இங்க வா" என்றான்...
அருகில் சென்றவள் நின்று கொண்டே இருக்க, அவன் அவளின் கையைப் பிடித்து இழுக்கவும் தடுமாறி அவனின் மேலே விழுந்தாள்...
பூந்தளிர் மேனியவள் அவனின் மேல் மல்லிகைக் கொடி போல் படர்ந்திருக்க, ஒரு வாரம் அவளைப் பிரிந்திருந்த ஏக்கம் அவனின் தாபத்தைக் கட்டவிழ்க்க, கைகள் அவளின் இடையை இறுக்கமாகத் தழுவியது...
அவனின் செயலில் மனம் மயங்கியவளாய் அவளும் அவன் இழுத்த இழுப்பிற்கு உடன் பட, அவளைத் தூக்கியவன் கீழே சரித்து அவளின் மேலே படர்ந்தவன் தன்னுடைய ஒரு வாரப் பிரிவை, பிரிந்திருந்ததால் தன் மனைவியுடனான கூடலை இழந்து தவித்து இருந்த மனதின் புழுக்கத்தைத் தீர்த்துக் கொள்ளும் வரை அவளை விடவில்லை...
நாட்கள் அதன் போக்கில் செல்ல அர்ஜூன் திவ்யாவின் இணக்கத்தையும் மகிழ்ச்சியையும் பார்த்திருந்த பெரியோர்களுக்கு அத்தனை பூரிப்பாகவும் நிம்மதியாகவும் இருந்தது....
வீட்டில் ஏற்கனவே இருந்திருந்த உற்சாகத்திற்கு மேலும் சந்தோஷம் கூட்டும் வகையில் மஹாவின் பிறந்த நாளும் வர, வழக்கமாகப் பிறந்த நாளை பெரிதாகக் கொண்டாடுவதெல்லாம் ஸ்ரீயிடம் செல்லாது என்றாலும் அன்று ஏனோ அவள் தன் தோழிகளுடன் சேர்ந்து கொண்டாட அனுமதி வழங்கியிருந்தார்...
தன் தோழிகளுடன் ஹோட்டலுக்கு அன்று இரவு செல்வதாகத் தன் அன்னையிடம் கேட்க எங்குச் சென்றாலும் இரவு சீக்கிரம் வர வேண்டும் என்றும், அதுவும் அர்ஜூன் வருவதற்கு முன் வீடு வந்து சேர வேண்டும் என்று ஸ்ரீ கட்டளை இட்டிருந்தார்...
சரி என்றவள் முதன் முறை தன் தோழிகளின் நச்சரிப்பால் உணவகம் [Restaurant], பார், நடன அரங்கம் என்ற அனைத்தும் உள்ள அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்குள் நுழைய, மஹாவிற்கு வினோத்தின் மீது இருந்த காதலை தன் நெருங்கிய தோழிகளிடம் மட்டும் அவள் சொல்லியிருந்தாலும் அந்த விஷயம் எப்படியோ கோகுலின் காதுகளுக்குப் போக, உலையாகக் கொதித்துக் கொண்டிருந்தவன் தன் வேட்டையைத் துவங்க நேரம் பார்த்துக் காத்திருந்தவனுக்கு இன்று அவள் தன் தோழிகளுடன் இந்த ஹோட்டலிற்குச் செல்லப்போவதை அறிந்ததும் இன்றைய நாளையே குறித்திருந்தான் தன்னவளாக அவளை எடுத்துக் கொள்வதற்கு.....
இது தெரியாத மஹா தன் தோழிகளுடன் ஹோட்டலின் உணவகம் இருந்த பகுதிக்கு சென்றவள் அவர்களின் விருப்பம் போல் உணவு பதார்த்தங்களை ஆர்டர் செய்துவிட்டு கலகலவென்று பேசி சிரித்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்திலேயே அங்கு இருந்த நடன அரங்கில்/தளத்தில் [Dance Floor] நடனம் ஆட ஆரம்பித்து இருந்தார்கள்...
வசதி படைத்த மேல் தட்டு வர்க்க இளைஞர்களுக்குத் தங்கள் தாய் தந்தை சேர்த்து வைத்த சொத்தை செலவழிக்க இது ஒரு பிடித்தமான வழி...
ஆரம்பத்தில் லேசாக ஆரம்பிக்கும் இசை நேரம் ஆக ஆகக் காதுகள் கிழிய அலற துவங்க, இளவட்டங்கள் அருந்தியிருந்த வெவ்வேறு வகையான வெளிநாட்டு மது, அவர்களின் ஒவ்வொரு நரம்பிலும் சூடேற்ற, வெறித்தனமான நடனம் ஆரம்பிக்கும்...
நாகரிகம் என்ற பெயரில் அளவுக்கதிகமான ஆபாச ஆடை அணிந்து, வாழ்க்கையில் நாளை என்ற ஒன்றே கிடையாது இன்றே முடியுமளவு அனுபவித்து விட வேண்டும் என்பது போல் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் கட்டிப் பிடித்துக் கொண்டு ஆட ஆரம்பிக்க முதன் முறையாக இது போன்ற இடத்திற்கு வந்திருந்த மஹாவிற்கு "ஏண்டா இங்கு வந்தோம்" என்று கதிகலங்கிப் போனது...
அத்தனை ஆபாசமாகவும், வெறித்தனத்தோடும், கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டு நடனம் என்ற பெயரில் உடல்கள் பின்னி பிணைந்து கொண்டு நடனத் தளத்தில் கூத்தடித்துக் கொண்டிருந்தார்கள் இளவட்டங்கள்...
நமது இந்தியாவின் வருங்காலத் தூண்களில் ஒரு பகுதி!!!!!
முகத்தைச் சுளிக்க வைக்கும் அவர்களின் நடன அசைவுகளும், குமட்டிக் கொண்டு வந்த மதுக்களின் வாடையும், காதே கிழியும் அளவிற்குக் கேட்டுக் கொண்டிருந்த இசையின் கூச்சலும் அவளுக்குத் தலைவலியை உண்டு பண்ண இப்படியா தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டவள் தன் அருகில் அமர்ந்து இருந்த தன் நெருங்கிய தோழியான நிருபமாவின் காதை கடித்தாள்....
"நிரு, என்னடி இது? ஒழுங்கா எப்போவும் போற ஹோட்டலுக்குப் போய் இருக்கலாம் இல்ல... எனக்கு இங்க இருக்கக் கொஞ்சம் கூடப் பிடிக்கலைடி.... எங்க அம்மாவுக்கோ அல்ல அர்ஜூன் அண்ணாவுக்கோ இது தெரிஞ்சது நான் செத்தேண்டி"
"மஹா... ஜஸ்ட் ஒன் டே தானடி.... நீ சொல்லாட்டி எப்படி உங்க வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியும்.... நான் தான உன்னை ட்ராப் பண்ணப் போறேன்.... கண்டிப்பா சீக்கிரம் உங்க அண்ணா வரதுக்குள்ள உன்னைக் கொண்டு விட்டுடறேன்" என்று நிருபமா அவளைச் சமாதானப்படுத்த முயல...
எத்தனை தான் அவளின் கலக்கத்தை அகற்றவும், அவளை அமைதிப்படுத்தவும் நிருபமா முயன்றாலும், அங்கு ஆடிக் கொண்டிருந்தவர்களின் கூத்தும் கும்மாளமும், கூட நடனம் ஆடிய பெண்களின் மேல் ஆண்களின் வரைமுறையற்ற அசிங்கமான தொடுகைகளும் அவளின் அச்சத்தை நொடிக்கொரு தடவை அதிகரிக்கச் செய்ய,
இதில் அவளின் உள்ளத்தில் மூலையில் இன்று ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போவதை போல் உள்ளுணர்வு உறுத்திக் கொண்டே இருக்க மஹாவின் மனதிலும் உடலிலும் உதறல் எடுக்க ஆரம்பித்தது....
ஆர்டர் செய்திருந்த உணவும் வந்துவிடத் தோழிகளுடன் சேர்ந்து அருந்த துவங்கியவளுக்கு உணவும் உள்ளே இறங்காமல் போகவும், ஒவ்வொரு நிமிடமும் நெருப்பில் இருப்பது போல் மனம் உலையாகக் கொதித்து இருக்க, இதில் ஏற்கனவே எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றி விட்டதைப் பல மடங்கு அதிகரிக்க செய்வதுப் போல் டான்ஸ் ஃப்ளோரில் ஏறினான் கோகுல்...
தொடரும்..