அத்தியாயம் - 1
எம்.எல்.ஏ சங்கரலிங்கத்தின் அலுவலகம்... தன்னுடைய பி.ஏ வுடன் அன்றைய நாளுக்குரிய அலுவல்களையும், மற்றும் கூட்டங்களையும் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார் சங்கரலிங்கம்.... அறையில் இருந்த இண்டர்காம் அழைக்க, அதை எடுத்த பி ஏ...
"சரி, இருங்க சாரிடம் கேட்டுட்டு சொல்றேன்.... அவர வெயிட் செய்யச் சொல்லுங்க" என்றார்.
"யாரது?" என்று சங்கரலிங்கம் கேட்க,
"சார், எ. கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸோட எம்.டி அர்ஜூன் கிருஷ்ணா வந்திருக்கார் சார்.... உங்கள அவசரமா பார்க்கணுமாம்" என்றார்...
எம்.எல்.ஏ சங்கரலிங்கம் சலித்துக் கொண்டே,
"இவனுங்க வேறடா, பெரிய தொல்லையா இருக்கு.... காசு வாங்கினாலும் வாங்கினோம்.... என்னமோ இவனுங்க வீட்டு வேலைக்காரங்க மாதிரி கூப்பிட்டவுடனேயே வேலை செய்ய வேண்டியதா இருக்கு" என்று தலையில் அடித்துக் கொண்டார்......
"கோடி கோடியா அவர் கொடுக்கும் போது பல்ல இளிச்சுகிட்டு வாங்க வேண்டியது... அவர் கொடுக்கிற பார்ட்டியில போய்க் கூத்தடிக்கத் தெரியுது.... அப்போ அவர் போடுற பிஸ்கட்ட திங்குற **** மாதிரி அவர் காலச் சுத்தித் தான ஆகணும்" என்று மனதிற்குள் திட்டிக் கொண்ட பி.ஏ இண்டர்காமில் ரிஷப்ஷனிஸ்டை அழைத்து,
"அர்ஜூன் சாரை வரச் சொல்லுங்க" என்றார்.
புயலென உள்ளே நுழைந்த அர்ஜூன்... (இங்கு நம் கதையின் நாயகனைப் பற்றி வர்ணித்தே ஆக வேன்டும்)
நெடு நெடுவென்று ஆறு அடி மூன்று அங்குலத்திற்கு உயரம்... சிவப்பு கலந்த வெண்மை நிறம்.... யாரையும் ஊடுருவி பார்க்கும் சக்தி வாய்ந்த கண்கள்... அவற்றின் கூர்மையில் தெரிவது உறுதியா? கடினமா? நிதானமா? மென்மையா?... ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது....
சில நேரங்களில் நெருப்பு வீசும் அவனின் விபரீதப் பார்வையில் எதிராளிகள் நடுநடுங்கிப் போவார்கள்... அவனை எதிர்ப்பது அபாயம் என்று சொல்லாமல் சொல்லும் அவன் விழிகள்...
அவனின் வசீகரமான தோற்றமும், ஆளை அசரடிக்கும், ஆளுமையும் கலங்கடிக்கும் துணிவும் சுற்றி இருப்பவர்களைப் பிரமிக்க வைக்கும்... அவனிடம் அடி பணியச் செய்யும்...
உள்ளுக்குள் கட்டுக்கடங்காத கோபம் இருந்தாலும் அதனை முகத்தில் காட்டாமல் உதடுகளில் நெளிந்த இளம் புன்னகையுடன் தன் அறைக்குள் கம்பீரமாக நுழைந்தவனைப் பார்த்த எம்.எல்.ஏவிற்கே ஒரு நிமிடம் வயிற்றில் புளியைக் கரைத்தது....
"என்ன, சங்கரலிங்கம் சார்... சொன்னப் பேச்சை எப்போதுமே காப்பாத்துவேன்னு சொல்லுவீங்க.... இப்பொ திடீர்னு என்னாச்சு? யாராவது என்ன விட ஜாஸ்தி பணம் கொடுத்துட்டாங்களோ?" என்றான் அவர் எதிரில் இருந்த சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி.....
அவன் அமைதியாக ஒவ்வொரு வார்த்தையாகக் கூறினாலும் அதில் அவனுடைய கொந்தளித்துக் கொண்டு இருக்கும் கோபம் நன்றாகத் தெரிய சங்கரலிங்கத்தின் மனம் பதற ஆரம்பித்தது... அவற்றின் விளைவாக முளைத்த திகில் அவர் பார்வையைக் கூட மறைத்தது...
தன்னிச்சையாக அவன் முன் எழுந்து நின்றவர்...
"அப்படி எல்லாம் இல்ல அர்ஜூன் சார்... உங்களுக்குத் தெரியாம இங்க ஒரு நூல் கூட அசையாதுன்னு தெரியாதா என்ன?" என்று மனதில் உள்ள கலக்கத்தை மறைத்து பல்லை இளித்துக் கொண்டே கூற,
"அப்போ என்னுடைய டெண்டர் விஷயம் என்னாச்சு?" என்றான் அவரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே....
"நாளைக்கு நீங்க போங்க சார்.... டெண்டர் நிச்சயமா உங்களுக்குத் தான் கிடைக்கும்.... எல்லா ஏற்பாடும் நான் செஞ்சுட்டேன்" என்று மீண்டும் இளிக்க...
வெடுக்கன்று சேரை விட்டு எழுந்தான் அர்ஜூன்.... அவன் எழுந்த வேகத்தில் அந்த அறையே எதிரொலித்தது போல் தோன்றியது...
"உங்களுக்கே தெரியும், நான் சாதாரணமா இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நேர்ல வர மாட்டேன்னு... நானே வந்திருக்கேனா, இந்த டெண்டர் எனக்கு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுக்கோங்க" என்று கூறியவனின் மனதில் அனல் தெறித்தாலும் முகத்தில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தவில்லை...
சட்டென்று எழுந்தவர் அவன் கரத்தை இறுக்கப் பற்றி,
"சார், நான் சொன்னால் சொன்னது தான்... நீங்க கிளம்புங்க சார்... எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்" என்று மீண்டும் இளிக்க, குனிந்தவன் தன் கரத்தின் மேல் இருக்கும் அவர் கரத்தை ஒரு புலிப் பார்வை பார்க்க, விருட்டென்று தன் கரத்தை விலக்கினார் எம்.எல்.ஏ...
அவரை ஒரு விநாடி கூர்ந்து உற்று நோக்கிவிட்டு அவன் வெளியே செல்ல, அவன் சென்ற மறு நொடியே தன் பி.ஏவை அழைத்த சங்கரலிங்கம்...
"யோவ், உடனேயே ஃபோன் போட்டு அவனுக்கே டென்டர் கிடைக்கணும்னு சொல்லிடு.... இவன் சிரிச்சாலே எனக்குக் குலை நடுங்கும், இப்போ கோபமா வேற போறான்... அவன் ஒரு விரல் அசைச்சா இந்த அரசாங்கமே நடுங்குது.... நம்மள ஏதாவது பண்ணிர போறான்..... முதல்ல அவன் வேலைய முடி" என்றார்.
எ.கே க்ரூப் ஆஃப் கம்பெனிஸ்! சேர்மன் பாலமுருகன், அவருடைய தர்மப் பத்தினி ஸ்ரீ என்கிற ஸ்ரீவித்யா... மனமொத்த தம்பதியர்...
இவர்களின் மூத்த மகன் அர்ஜூன்.... 27 வயது.... லன்டனில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு அவர்களின் அனைத்து தொழிற்களையும் வெற்றிகரமாக நடத்தி வருபவன்....
இரண்டாவது மகன் அருண்..... பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டுப் படித்துக் கொண்டிருப்பவன்... அர்ஜூனிற்கு நேர் எதிர் குணம் உள்ளவன்... மிகவும் பொறுமை சாலி... தன் அண்ணன் மேல் பயம் கலந்த மரியாதை வைத்திருப்பவன்.... அவன் முன் நின்று பேசத் தயங்குபவன்... அனைவரையும் போல்...
ஒரே செல்ல மகள் மஹா என்கிற மகாலெட்சுமி... மூன்றாம் வருடம் பி எஸ் சி படித்துக் கொண்டிருப்பவள்.... அந்த வீட்டின் இளவரசி... அருணைப் போல் தன் மூத்த அண்ணனிடம் மரியாதை கலந்த பாசம் கொண்டு இருப்பவள்....
அர்ஜூனின் செல்ல தங்கை... ஆனால் மனதில் மட்டுமே... வெளியில் என்றுமே அர்ஜூன் தன் தங்கையின் மேல் தான் வைத்திருக்கும் பாசத்தை வெளிக்காட்டிருக்கவில்லை...
பரம்பரை பரம்பரையாகப் பல தொழிற்களைச் செய்து வரும் குடும்பம் ஸ்ரீவித்யாவின் குடும்பம்... இந்தியா மட்டும் அல்லாது வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யும் தொழிற்களிலும் கோலோச்சி கொண்டிருப்பவர்கள்...
இந்தியாவிற்குள் மட்டும் நடந்து கொண்டிருந்த தொழிற்களை வெளிநாடு வரை விரிவுப்படுத்தியது அர்ஜூனின் கடின உழைப்பும், தொழில் சாமார்த்தியமும், புத்திக் கூர்மையும், அடங்காத ஆளுமையும் தான்.
சிறு வயது முதலே அன்னையைத் தவிர மற்றவர்களிடம் அளந்து பேசுபவன்... வார்த்தைகளில் அல்லாமல் செயல்களில் தன் சாமர்த்தியத்தைக் காண்பிப்பதில் கில்லாடி...
ஸ்ரீக்கு அர்ஜூனைக் காணும் பொழுதெல்லாம் தன் தந்தை ருத்ரமூர்த்தியை பார்ப்பது போலவே இருக்கும்...
ருத்ரமூர்த்தி... பெயருக்கு ஏற்றார் போல் மற்றவர்களுக்கு ருத்ரமூர்த்தியாகவே இருந்தவர்... குடும்பத்தில் ஒரே வாரிசாகப் பிறந்து, தன் தந்தையுடைய அனைத்து தொழிற்களையும் ஒற்றையாளாகச் செம்மையாக நடத்தியவர்... யாருக்கும் அடி பணிந்திராதவர்...
அர்ஜூன் தன் தாத்தாவைப் போலவே கடின உழைப்பாளி, மிகுந்த அந்தஸ்து பார்ப்பவன், கோபக்காரன், அழுத்தக்காரன்...
எதிராளி நூறு வார்த்தைகள் பேசினால் இவன் ஒரு வார்த்தை மட்டுமே பேசுவான்... ஆனால் அந்த ஒரே வார்த்தையில் எதிராளியை எளிதாக வீழ்த்தி தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வான்...
அதனால் அவன் இருக்குமிடத்தில் இருக்கும் அனைவருக்கும் ஒரு வித பயமும் நடுக்கமும் இருக்கும்... அவனிடம் பேசும் அனைவருமே யோசித்துத் தான் பேசுவார்கள்... தவறாகப் பேசிவிட்டால் அவன் பார்க்கும் பார்வையே போதும் அவர்களைக் குலை நடுங்கச் செய்ய...
தொழிலும் சரி, அவன் அலுவலகங்களிலும் சரி, அல்ல குடும்பத்திலும் சரி... அவனை ஒரு சிங்கம் போல் தான் நினைத்துக் கொள்வார்கள்... அவன் வருகிறான் என்றால் அந்த இடத்தில் ஊசி விழுந்தால் சத்தம் கேட்குமே அத்தனை அமைதி இருக்கும்...
அவன் குரலில் தெரியும் கம்பீரம், அவனின் தோரணை, அழகும் கம்பீரமும் கலந்த அவன் தோற்றம் எல்லாவற்றிலும் உறைந்து கிடக்கும் அவனின் ஆணவம்....
தாத்தாவைப் போல் பேரன்....
சென்னை மாநகரத்தின் நடுவே அமைந்திருந்த எ.கே க்ருப் ஆஃப் கம்பெனிஸின் தலைமை அலுவலகத்தின் முதல் தளத்தில் MD என்று பொறிக்கப் பட்ட கேபினுக்கு வெளியே, கதிர் தன்னுடைய அலை பேசியில் பேசியபடியே MD யின் அறைக் கதவை தட்டினான்.
"எஸ் கம் இன் [Yes come in]" என்ற கம்பீரக்குரலுக்குச் சொந்தக்காரனான அர்ஜுன் தன்னுடைய சேரில் அமர்ந்து கணினியில் கண்ணைப் பதித்துக் கொண்டே கதிரை வர பணித்தான்.
அறையில் நுழைந்த கதிர் வழக்கம் போல் தன்னுடைய MD அமர்ந்திருந்த தோரணையையும், தோற்றத்தையும் பார்த்து ஒரு நொடி அசந்த பிறகு தன்னைச் சுதாரித்துக் கொண்டு "குட் மார்னிங் சார் [Good Morning sir]" என்றான்...
கதிரைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்த அர்ஜுன் "எஸ் ஜே இண்டஸ்ட்ரீஸிலிருந்து வந்த ஆர்டர் எல்லாம் கம்ப்ளீட் பண்ணியாச்சா? எனவும்...
"இல்ல சார், ஆனால் அதுக்கான வேலையெல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு... இன்னிக்கு ஈவ்னிங்குள்ள முடிஞ்சிரும்... அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல.... நான் பார்த்துகிறேன் சார்" என்று கூறியவன் அர்ஜுனின் முகம் மாறியதை கண்டதும்,
"சார், அப்புறம் அந்த டெண்டர் நமக்கே ஷான்க்ஷன் ஆகிடுச்சு" என்றான்.
அதைக் கேட்டவுடன் மறுபடியும் கணினியைப் பார்க்க ஆரம்பித்த தன் முதலாளியின் முகத்தில் சிறு புன்னகை படிவதைக் கவனித்த கதிருக்குத் தெரிந்தது இதுவும் தன் முதலாளியின் கை வண்ணமாகத் தான் இருக்கும் என்று.
"சரி, கதிர், யூ கேன் கோ [you can go]" என்று கூறிவிட்டு வேலையில் கவனத்தைச் செலுத்த ஆரம்பிக்க, அப்பொழுது தான் அவன் அலை பேசி அழைத்தது....
எடுத்து எண்ணைப் பார்த்தவன் அழைத்தது தன் அன்னை என்றவுடன் உடனே பேச ஆரம்பித்தான்....
"அர்ஜூன், வீட்டுல ஒரு சின்னப் பூஜை ஏற்பாடு செஞ்சிருக்கேன்பா, கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வரியா?"
"மாம், எத்தன தடவை சொல்றது... கடவுளுக்கும் எனக்கும் ரொம்பத் தூரம்னு.... ப்ளீஸ் மாம். எனக்கு நிறைய வேலை இருக்கு.... அருணையும், மஹாவையும் வச்சு பூஜைய முடிங்க" என்று கூறிவிட்டு அலை பேசியைத் துண்டித்தான்.
தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்த பாலா, "என்ன ஸ்ரீ, ஒரு மாதிரியா இருக்க" என்று கேட்க,
"அர்ஜூனை பூஜைக்கு வரச் சொன்னேன், வரலைன்னு சொல்லிட்டாங்க"...
"என்ன ஸ்ரீ, இது என்ன புது விஷயமா? இது எப்பவும் நடக்கிறது தான... அவன் என்னைக்குக் கோயிலுக்கோ இல்லை பூஜைக்கோ வந்திருக்கான்.... தாத்தா மாதிரி பேரன்... நீ மத்த வேலைகளைப் போய்ப் பாரு" என்று கூறிவிட்டு தன் காரில் ஏறப் போக, அவர் பின்னாடியே வந்த ஸ்ரீ,
"இப்படியே இருந்தா எப்படிங்க? குடும்பத்தில நடக்கிற எந்த விஷேஷத்திலேயும் கலந்துக்க மாட்டேங்குறான்.... யார் கூடவும் சரியா முகம் கொடுத்துக் கூடப் பேசமாட்டேங்கிறான்.... தம்பி, தங்கை கிட்ட கூட ஒரு லிமிட்டோட தான் பழகுறான்.... இவனுக்கு ஒரு கல்யாணக் காட்சி செய்ய வேண்டாமா? இப்படிப் பிஸினஸே கதின்னு இருந்தால், எப்படிங்க?" என்று ஆதங்கத்துடன் கூறிய மனைவியைப் பார்த்த பாலாவிற்கும் அதே விஷயம் தான் மனதை குடைந்து கொண்டிருந்தது.
ஒரு தந்தையாகப் பாலாவிற்கு அர்ஜூனை நினைத்துப் பெருமையாக இருந்தது...
தொழிலில் அவனின் சாமார்த்தியத்தைப் பார்த்து அவரே அசந்து போய் இருக்கிறார்.... தொழில் வட்டாரத்தில் அவனின் புகழ் தீப் போல் பரவியிருப்பதைக் கண்டு கர்வம் கொண்டு இருக்கிறார்...
ஆனால் அதே சமயம் அவன் குடும்பத்தில் இருந்து தன்னைத் தொலை தூரத்தில் வைத்திருக்கிறான்... தன்னைத் தொழில் என்ற சமுத்திரத்தில் மூழ்க அடித்துக் கொண்டு இருக்கிறான் என்ற வருத்தமும் மேலோங்கியே இருந்தது...
ஆனால் தந்தையானாலும் அவனுக்கு அறிவுரை கூறும் தைரியம் அவருக்கும் கூட இல்லை....
ஸ்ரீ பூஜையை முடிக்கவும், வீட்டின் தொலைப் பேசி அழைக்கவும் சரியாக இருந்தது...
அதை ஸ்ரீ எடுக்க, அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ ஸ்ரீயின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி தெரிந்தது.
"ஏய் கலா, நீயாடி? எப்படிடி இருக்க? எத்தனை வருஷமாச்சு உன் குரலைக் கேட்டு... எங்கடி இருக்க? கடைசியா நம்ம ஊர் கோயில் திருவிழாவில உங்க அப்பாவ பார்க்கும் போது உன்ன பத்திக் கேட்கனும்னு ரொம்ப ஆசையா இருந்தது... ஆனா எங்க அப்பா பண்ணினத நெனைக்கும் போது, எந்த முகத்த வைச்சுக்கிட்டு பேசுறதுன்னு தெரியல... அதனால நானும் பேசல... எப்படிடி இருக்க? என் நம்பர் எப்படிக் கெடைச்சுது?" என்று மூச்சுக் கூட விடாமல் பேசும் தன் அன்னையைப் பார்த்த மஹாவிற்கு, "கலா" என்றவுடனேயே தெரிந்தது....
அது அவர் அன்னை அடிக்கடி சொல்லும் அவரின் ஆருயிர் தோழியாகத் தான் இருக்கும் என்று.
மிகவும் வசதிப்படைத்த குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீ... தன் தந்தை ருத்ரமூர்த்திக்கும் தாய் சரசுவதிக்கும் நீண்ட காலத்திற்குப் பிறகு பிறந்த ஒரே வாரிசு...
தந்தையின் கண்டிப்பிற்கும் தாயின் செல்லத்திற்கும் இடையே வளர்ந்திருந்த ஸ்ரீக்கு சிறு வயது முதலே ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு பார்க்கத் தெரியாது.
என்ன தான் வசதி இருந்தாலும், ருத்ரமூர்த்தித் தன் மகளை அங்கிருந்த அரசு பள்ளியிலேயே படிக்க வைத்திருந்தார்....
மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது தான் கலா அப்பள்ளியில் சேர்ந்தாள்.
துறுதுறுவென்றிருந்த ஸ்ரீயைப் பார்த்த மாத்திரத்திலேயே மிகவும் பிடித்துவிட்டது அமைதியான சுபாவம் கொண்ட கலாவிற்கு....
இருவரும் நெருங்கிய தோழிகளானார்கள்.
பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன் ஸ்ரீ கல்லூரிக்கு போக, வசதியில்லாத காரணத்தினால் கலாவால் படிப்பைத் தொடர முடியவில்லை.... இருந்தும் இவர்கள் நட்புக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.
ஆனால் இவர்கள் இணையில்லா நட்பிற்கும் வந்தது ஒரு கேடு... ருத்ரமூர்த்தியின் ஒன்று விட்ட அண்ணனும், ஸ்ரீயின் பெரியப்பாவும் ஆன காத்தவராயனின் மகன் சுந்தரேசனின் மூலம்.
அடிக்கடி ஸ்ரீயைப் பார்க்க வரும் போது தான் ஸ்ரீயின் பெரிப்பாவின் மகன் சுந்தரேசனின் கண்ணில் பட்டுவிட்டாள் கலா....
ருத்ர்மூர்த்தியின் அண்ணன் காத்தவராயனும் கிட்டத்தட்ட அவர் தம்பி போலவே குணத்தில்.
சுந்தரேசனின் விருப்பம் கலாவிற்குப் புரிய ஆரம்பிக்க, கலா ஸ்ரீயை பார்க்க வருவதைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.... இதை உணராத ஸ்ரீ அவர் மீது கோபப்பட, அப்பொழுது தான் கலா தன் நிலைமைக் கூறி இதை நீடிக்கவிட்டால் தங்களுடைய நட்புக்கே பிரச்சனையாக முடியும் என்று கூறினார்.
இதைப் பற்றித் தன் ஒன்று விட்ட சகோதரனிடம் பேசுவதென்று முடிவெடுத்த ஸ்ரீ, சகோதரனைத் தேடி போக, கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல வந்தான் சுந்தரேசன்.
"சுந்தரேசண்ணா, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...." என்றவர் சட்டென்று நேரே விஷயத்திற்கு வந்தார்...
“நீங்க கலாவ விரும்புறீங்களா?"
தன் தந்தை தங்கள் அருகில் ஒரு மரத்திற்குப் பின்னால் நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது தெரியாமல் தன் காதலைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான் சுந்தரேசன்...
படீர் என்று தன் தலையில் அடி விழுந்த பின் தான் தெரிந்தது தன் தந்தை தான் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டார் என்று.
இது ருத்திரமூர்த்தியின் காதுகளுக்குப் போக, ருத்திரமூர்த்திப் போட்ட ஆட்டத்தில் கலாவின் குடும்பம் கலாவை வேறு ஒரு ஊரில் வசித்து வந்த அவள் அத்தை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டியதாகியிருந்தது.
நாட்கள் செல்ல, ஸ்ரீயின் திருமணமும் முடிய, அவர் தகப்பனார் ருத்ரமூர்த்தியும், தாய் சரசுவதியும் ஒருவர் பின் ஒருவராகக் காலமாக, தன் சொந்த ஊருக்கு போவதையே குறைத்துக் கொண்டார் ஸ்ரீ.
ஆனால் மூன்றாம் வகுப்பில் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட பதினொரு வருடங்கள் இணைப் பிரியாத தோழிகளாகக் கலாவுடன் சுற்றிய நினைவுகள் என்றுமே ஸ்ரீயின் மனதில் மலரும் நினைவுகளாக.
பல வருடங்களுக்குப் பிறகு தன் தோழி அழைத்ததை இன்னும் ஸ்ரீயால் நம்ப முடியவில்லை.
"என் நம்பர் எப்படிடி கலா கெடைச்சுது?" என்ற கேள்விக்குக் கலா சொன்ன பதிலில் ஸ்ரீக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
"நம்ம ஊருக்கு போயிருந்தேண்டி... அப்போ உன் பெரியப்பா மகன் சுந்தரேசனப் பார்த்தேன்... அவர் தான் உன் நம்பர் குடுத்தது" என்றார்.
"ஆஹா! இது தான் விதி என்பதோ? யார் தங்களுடைய நட்பு பிரியக் காரணமோ, அவரே சேர்த்தும் வைத்திருக்கிறார்" என்று எண்ணி மகிழ்ந்த ஸ்ரீ கதை பேச ஆரம்பிக்க, அங்கே கலாவோ....
"ஸ்ரீ, முதல்ல நான் கூப்பிட்ட விஷயத்தைச் சொல்லிடறேன்... என் பொண்ணு திவ்யாவுக்குக் கல்யாணம் பேசி இருக்கோம்டி... வர இருபத்தி நாலாம் தேதி கல்யாணம்... அதச் சொல்லத் தான் கூப்பிட்டேண்டி... உன் விலாசம் சொல்லு, பத்திரிக்கை அனுப்புறேன்.... எனக்கு உன்னை நேரில வந்து அழைக்கனும்னு ஆசை... ஆனால் கல்யாணம் இன்னும் ஒரு வாரத்தில... மாப்பிள்ளை வீட்டுல வேற ரொம்ப அவசரப்படுத்திறாங்க... அதுவும் இல்லாம நீ கணடிப்பா நான் கூப்பிட்டா வருவேன்னு தெரியும். வருவ இல்லடி? என்று ஆசையாக வினவ,
ஸ்ரீக்கோ இன்னும் தன் காதுகளையே நம்ப முடியவில்லை...
ஒரு காலத்தில் இருவரும் தங்கள் ஊரில் உள்ள ஆற்றங்கரையில் அமர்ந்து...
"டீ கலா, நாம இரண்டு பேரும் கல்யாணம் முடிச்சு, குழந்தைகள் பெற்றுக் கொண்டால், என் பொண்ண உன் பையனுக்கும், உன் பொண்ண என் பையனுக்கும் கல்யாணம் முடிச்சு வச்சிருலாமா" என்று விளையாட்டாகப் பேசிக் கொண்டது ஞாபகம் வந்தது.
"கண்டிப்பா கலா, நீ ஒன்னும் வர வேண்டாம்... கல்யாண வேலைய கவனி... நான் இருபத்தி நாலாம் தேதி அங்க இருப்பேன்" என்றார்.
மற்ற விஷயங்களையும் பேசி முடித்துத் தொலை பேசியைக் கீழே வைக்கும் போது மனசு நிறைந்து இருந்தது ஸ்ரீக்கு.
இருபத்தி நாலாம் தேதி அதிகாலையில் எழுந்த ஸ்ரீ திருமணத்திற்குச் செல்வதற்குத் தயாராக, அப்பொழுது தான் பாலா வந்தார்.
"ஸ்ரீம்மா, நேற்றே சொல்லனும்னு நினைச்சேன், டயர்ட்னஸ்ல வந்ததும் தூங்கிட்டேன்... திடீர்னு கம்பெனியில ஒரு முக்கிய ஆடிட்டிங்... நான் கண்டிப்பா போகனும்... நீ அருணையோ அல்லது மஹாவையோ அழச்சுட்டுப் போம்மா"
"இல்லைங்க, இரண்டு பேருக்கும் எக்ஸாம்ஸ் நடக்குது.... நான் தனியா நம்ம காரிலேயே முருகனோடையே போயிட்டு வந்திடுறேன்"
வீட்டில் உள்ள அனைவருக்கும் தனித் தனிக் கார்கள்... அதிலும் அர்ஜுன் தன் காரை தன்னைத் தவிர வேறு யாரையும் தொட கூட விடமாட்டான்...
அதனால் ஸ்ரீக்கு என்று அவர்கள் ட்ரைவர் முருகனை பணித்திருந்தார்கள்... வீட்டில் பல கார்கள் இருந்தாலும் ட்ரைவர் முருகன் மட்டும் தான்....
அர்ஜூன் அவ்வளவு எளிதாக வேறு யாரையும் நம்பி விடமாட்டான்... ஸ்ரீ சொல்லவும் ட்ரைவர் முருகன் வீட்டிற்குள் நுழையவும் சரியாக இருந்தது.
"வாப்பா முருகா, இப்போ தான் உன்னப் பத்தி பேசிட்டு இருந்தோம்... போன வாரமே சொன்னேன், கடலூர் வரை போகனும்னு... நியாபகம் இருக்கா... போய்க் கார ரெடிப் பண்ணு"
"அம்மா, என் பொண்ணுக்கு உடம்பு சரியில்லை, ஆஸ்பத்திரியில சேர்த்துவிட்டுட்டு தான் வந்திருக்கேன்... அதைச் சொல்லத் தான் வந்தேன்... ஆனா நீங்க ஏதோ முக்கிய விஷேஷத்துக்குக் கிளம்பியிருக்கிற மாதிரி தெரியுது.... நான் என் பொண்டாட்டிட்ட சொல்லிடுறேன். நீங்க கெளம்புங்க"
"என்ன முருகா விளையாடுறியா? போடா போய், பிள்ளைய பாரு... நான் வேற ஏதாவது வழிய பார்த்துக்கிறேன்" என்று கூறிவிட்டு, அவன் கையில் பணத்தைத் திணித்துவிட்டு,
"ஏதாவது வேணும்னா அய்யாவுக்கு ஃபோன் பண்ணு... என்னா?" என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்.
ஆக மொத்தம் யாரும் துணைக்கு இல்லை... என்ன செய்யலாம்? என்று யோசித்தவருக்கு ஒரே வழி அர்ஜுன் தான் என்று தோன்றியது.
ஏனெனில், அவருக்கு ஆக்டிவ் ட்ரைவரெல்லாம் சரி வராது... பாலாவும் யாரோடும் தனியாக அனுப்ப மாட்டார்... இப்பொழுது எப்படியும் திருமணத்திற்குப் போயே ஆக வேண்டும்...
சாட்சிக்காரனைப் பிடிப்பதை விடச் சண்டைக்காரனையே பிடிப்பது மேல்.
அர்ஜூனின் அலை பேசிக்கு அழைத்தார்... நீண்ட நேரத்திற்க்கு பிறகே அவன் அழைப்பை எடுத்தான்...
எடுக்கும் போதே ஏதோ கோபத்தில் இருப்பது போல் தெரிய, ஸ்ரீ தன் மகனைப் பற்றி நன்கு தெரிந்தவர் ஆகையால், தன்னுடைய அஸ்திரத்தை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்.
"அர்ஜுன், நான் கிளம்புறேம்பா.."
மொட்டையாகத் திடீரென்று ஸ்ரீ சொல்லவும் யோசனையில் புருவத்தைச் சுருக்கியவன் "என்ன மாம், எங்க கிளம்புறீங்க?" என்றான்...
"என்னோட க்ளோஸ் ஃபிரெண்ட் கலாவோட பொண்ணோட கல்யாணம்பா... கடலூருக்கு பக்கத்துல... அப்பாவோட போலாம்னு பார்த்தேன், அப்பாவுக்கு ஏதோ ஆடிட்டிங்காம்... அருணுக்கும், மஹாவுக்கும் எக்ஸாம்ஸ் நடக்குது... ட்ரைவர் முருகன் பொண்ணுக்கு உடம்பு சரியில்லையாம், அதனால ஒரு ஆக்டிவ் ட்ரைவர அரேஞ் செஞ்சுருக்கான்பா... நான் அவருக் கூடப் போயிட்டு வந்திடுறேன்" என்று கூறி முடிக்கவில்லை, அங்கு அவன் தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்திருந்தான்.
"என்ன மாம் இப்படிக் கேஷுவலா சொல்றீங்க... கடலூர் என்ன பக்கத்திலயா இருக்கு? நீங்க பாட்டுக்குத் தனியா போறேன்னு சொல்றீங்க... நீங்க ஒன்னும் கல்யாணத்திற்குப் போக வேண்டாம்" என்று கூறினான்.
அய்யய்யோ இதென்னடா பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது போல இருக்கு என்று யோசித்தவர்,
"அர்ஜூன் அவ என்னோட க்லோஸ் ஃப்ரெண்ட்பா... கண்டிப்பா நான் போகனும்... உனக்கு என்ன தனியா அனுப்ப பயமா இருந்தால் பேசாமல் நீயே என் கூட வாயேன்... நாம இரண்டு பேரும் நல்லா பேசியே ரொம்ப நாளாச்சு... இன்னைக்கு நீ என் கூட டைம் ஸ்பெண்ட் செஞ்சா ரொம்பச் சந்தோஷமா இருக்கும்பா"....
தன் அன்னையின் குரலில் ஏதோ ஒரு ஆற்றாமையைக் கண்டவன் இந்தப் பயணம் தன் வாழ்க்கையையே மாற்றப் போவது தெரியாமல் தன் தாயுடன் செல்வதற்கு முதன் முறையாக ஒப்புக் கொண்டான்.
தொடரும்...