அரிமாக்களின் வேட்டை!
O, be some other name!
What’s in a name?
That which we call a rose by any other name would smell as sweet!
அத்தியாயம் 13
"உன் கேள்விக்கு நான் பதில் சொல்லணுமா, வேண்டாமா?"
தன்னை இறுக்கிப் பிடித்திருக்கும் வருண் தேஸாயின் கரத்தைக் குனிந்துப் பார்த்த துர்கா மெல்ல தன் கையை அவனிடம் இருந்து விலக்கிக் கொண்டவளாக, "பதில் வேணும்." என்றாள்.
"சரி சொல்றேன், but இங்க இல்லை. வா. வெளிய.."
கூறியவனாய் அவளையும் அழைத்துக் கொண்டு தாங்கள் இருந்த குடிலுக்கு வெளியே செல்ல, 'ஏன் இங்கேயே சொன்னால் என்ன?' என்று முணுமுணுத்துக் கொண்டவளாக வெளியே அவனுடன் செல்ல, மூன்று குடில்களையும் ஒன்றாக இணைத்துக் கட்டியது போல் அமைந்திருக்கும் அவ்வில்லத்திற்குப் பின்னால் சென்ற வருண் சட்டென நின்றான்.
அவன் நின்ற இடத்தில் அகன்ற கிளைகளையும், கூட்டிலைகளையும், சரஞ்சரமாய் மாலைகள் தொங்கினாற்போன்று பூத்துத் தொங்கும் மஞ்சள் நிறப் பூங்கொத்துகளையும் கொண்ட கொன்றை மரம் [Cassia fistula/Golden Rain Tree], காண்பதற்குக் கவர்ச்சியாக வளர்ந்திருந்தது.
அடர்ந்தக் காடு.. அந்தி சாய்ந்த பொழுது.. சுற்றிலும் அடர்த்தியாய் வளர்ந்திருக்கும் மரங்கள். அசையும் இலைகளுக்கு இடையில் அந்த இரவில் மினுமினுக்கும் விண்மீன்கள்.
கொடிகளைப் போன்று ஒன்றுக்கொன்றுத் தழுவி கொண்டிருக்கும் மரங்களுக்கு இடையில் பளபளக்கும் நிலவு. செவிகளுக்கு அருகில் சுற்றிக் கொண்டு இருக்கின்றதோ என்று தோன்றச் செய்யும் வண்டுகளின் ரீங்கார இரைச்சல். இவற்றுக்கு மத்தியில் தன் அழகையெல்லாம் உதிர்த்துக் கொட்டிக் கொண்டிருக்கும் மங்கலகரமான மஞ்சள் நிற கொன்றைப் பூக்கள்.
அதனடியில் நின்றவன் திரும்பிப் பார்க்க, பயமும் கலக்கமும் கலந்த உணர்வுகளுடன் இயந்திரம் போல் அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவள் அவளும் நிற்க, நிலவொளியில் மூழ்கிப் போன வெள்ளிச்சிலையாய் நின்றிருந்தவளின் தோற்றம் வருணின் மனதில் ஒருவிதமான பரவச நிலையை உருவாக்கியது.
ஆனால் துர்காவின் மனமோ விளங்கியும் விளங்காததாயும், தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது தீட்சண்யமான கண்கள் கூறிய அர்த்தத்தில் அனிச்சை மலராய் சுருண்டு போனது.
அவனது பார்வையின் வீரியம் தாங்காதவளாய் சட்டெனத் தலைகவிழ, "உனக்குத் தமிழ் பாட்டுக்கள் தெரியுமா துர்கா?" என்றான், முதன் முறையாக அவளது பெயரை விளித்து.
அவனது கேள்வியில் மெள்ள தலை நிமிர்ந்தவள், "என்ன பாட்டு?" என்றாள் சன்னமான மென்மையான குரலில்.
"சங்க இலக்கியம்?"
வடநாட்டில் வசிப்பவன். பெயரிலேயே ‘தேஸாய்’ என்ற வடநாட்டின் வம்சத்தைப் பறை சாற்றுபவன். இவனுக்குச் சங்க இலக்கியத்தைப் பற்றி எங்கனம் தெரியும்?
நினைத்தவளாக மௌனமாக நிற்க, அவளின் எண்ணம் புரிந்தவனாய் அழகிய புன்னகை சிந்தியவன், “எனக்கு எப்படிச் சங்க இலக்கியம் தெரியும்னு எல்லாம் ரொம்ப யோசிக்காத துர்கா..” என்றான்.
அவனது மார்பின் உயரமே இருந்தவள் திகைத்தவளாய் அண்ணாந்துப் பார்க்க, கம்பீரக் குரலில் பாடியவனின் சொற்களில் வியந்துப் போனாள் பெண்ணவள்.
"வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை
கானங் காரெனக் கூறினும்
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே..
இது என்ன பாடல்ன்னு தெரியுமா?"
தெரியாது என்பது போல் இடம் வலமாய்த் தலையசைக்க, மெள்ள அவளை நெருங்கியவன், "இதுக்கு நான் விளக்கம் சொல்றதை விட நீயே தெரிஞ்சுக்க.." என்றான்.
"நானே தெரிஞ்சிக்கிறதா? எப்படி?"
அவளுக்கே கேட்காத குரலில் அவள் கூற, ஆழ இழுத்து மூச்சுவிட்டவன், அவளின் விழிகளை ஆழமாய் ஊடுறுவியவாறே தொடர்ந்து கூறிய விளக்கங்களிலும் தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்புகளிலும் அவள் மயங்கி விழாமல் இருந்ததே அதிசயம் தான்.
"தோழி ஒருத்தி தன் தலைவியோடு காட்டிற்குச் செல்கிறாள். காடெங்கும் இது போன்ற கொன்றை மலர்கள் கொத்துக் கொத்தாகப் பூத்துத் தொங்குகின்றன. வண்டுகள் பூக்களின் மீது அமர்ந்து தேனுண்ட மயக்கத்தில் ரீங்காரமிட்டுச் சுற்றித் திரிகின்றன. இந்தக் காட்சி, மலர்கள் சூடிய பெண்கள் பொன்னிற அணிகலன்களை அணிந்து நிற்பது போல் இருக்கின்றது.
ஆனால் தன் தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கும் தலைவியை நினைத்த தோழியோ, கொன்றைப் பூக்கள் பூப்பது கார்காலத்தில் தானே. கார்காலத்தில் தலைவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவி இந்தப் பூக்களைப் பார்த்தால், கார்காலத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிப் போன தலைவன் இன்னும் வரவில்லை என்று வருத்தப்படுவாள் என்று நினைக்கிறாள்.
அதாவது என்னைப் போலவே என் தலைவியும் கார்காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்திருப்பாளோ? இது தலைவிக்குத் தெரிந்துவிடக் கூடாதே என மனதிற்குள்ளேயே வருந்துகிறாள் அவள் தோழி. அதற்கான பதிலாகத் தலைவி கொடுப்பது தான் இந்தப்பாடல்"
அவன் பேசப் பேச இமைக்க மறந்தது போல் நின்றிருந்தவளின் அசையா தோற்றத்தில் இலயித்துப் போனவனாய் அவளை உரசிவிடும் அளவிற்கு நெருங்கியவனின் தொட்டும் தொடாமலும் பட்ட ஸ்பரிசத்தில், பேதையவளின் தேகம் மெல்ல நடுங்கியது.
“நான் பிறந்தது தமிழ்நாட்டில் தான் துர்கா. ஸ்கூல் அங்கத்தான், காலேஜ் தான் வெளிநாட்டுல. எனக்குச் சின்ன வயசில் இருந்தே புத்தகங்கள், அது எந்த நாட்டில் வெளிவந்த புத்தகங்களா இருந்தாலும் சரி, மொழித் தெரிந்திருந்தால் அதைப் படிப்பதில் ரொம்ப ஆர்வம். அதுக்காகவே பல மொழிகளைக் கத்துக்கிட்டவன் நான். சங்க இலக்கியங்களில் எல்லாத்தையும் படிக்க முடியலைன்னாலும் சிலது படிச்சிருக்கேன்.”
கூறியவன் தனது நெஞ்சினில் இடித்துவிடுவது போல் நின்றிருந்தவளின் முகத்தைக் குனிந்து நோக்கியவாறே,
"வண்டுகள் தேன் உண்ணுமாறு இலைகளின் இடையே கொன்றைப் பூங்கொத்துக்கள் இருக்கின்றன. அவை பொன்னால் செய்த அணிகலன்களைத் தங்கள் தலைகளில் கோர்த்துக் கட்டிய, மகளிருடைய கூந்தலைப் போலத் தோன்றுகின்றன. அதாவது நீ உன் திருமண நாளன்று அணிந்திருந்த பட்டுப்புடவை போன்று. அப்படிப்பட்ட பூக்களைக் கொண்ட காடு இது. ஆனால் கார்காலம் இது என்று அந்தக் கொன்றை மரங்கள் எனக்கு உணர்த்தினாலும் நான் நம்ப மாட்டேன், ஏனென்றால் என் தலைவர் பொய் கூறாதவர்." என்று முடித்ததில் அநியாயத்திற்கு அவளின் இதயம் துடித்தது.
இவன் என்ன கூற வருகின்றான்?
அவனது ஸ்வாசக் காற்று அவளின் முகத்தில் படர்ந்தது.
ஆயினும் அவனைவிட்டு நகராதவளாய், விநாடிகள் நேரம் அவனைப் பார்த்தவள், "அப்படின்னா என் மாமா வர மாட்டாருன்னு சொல்றீங்களா?" என்றாள் கேள்வியைத் தாங்கும் கண்களுடன்.
மெல்லிய இள முறுவலை உதடுகளுக்குக் கொடுத்தவன், "இந்த மஞ்சள் நிற கொன்றை பூக்கள், உன் திருமண நாளன்று உடுத்தியிருந்த தங்க நிற பட்டுப்புடவை, அதாவது தகதகத்த ஆரஞ்சு நிற புடவைப் போல இருக்குன்னு சொல்ல வந்தேன். பிறகு..." முடிக்காமல் நிறுத்தினான்.
"பிறகு?"
அவளின் ஆர்வம் வருணுக்குள் சிலிர்ப்பையும் நம்பிக்கையையும் அதுனுடன் மகிழ்ச்சியையும் ஒருங்கே உருவாக்கியது.
சற்று சத்தமாகவே சிரித்தவன்,
"தலைவன் வரவில்லை என்று அந்தத் தலைவி வருந்தியது போல் உன் தலைவன் இன்னும் வரவில்லைன்னு நீயும் வருத்தப்படுற. ஆனால் கார்காலத்தில் கொன்றைப் பூக்கள் பூக்கும்னு சொல்றதும் உண்மை. அந்தப்பருவத்தில் நான் திரும்பி வருவேன்னு தலைவன் சொன்னதும் உண்மை. ஆனால் அவன் வரவில்லை என்பதும் உண்மை. உன் ஷிவாவைப் போல்." என்று அழுத்தமாய்க் கூறி முடித்ததில் அதுவரை இருந்து வந்த ஆர்வம் முறிந்து வேதனை சூழ்ந்தது போல் உணர்ந்தாள் கன்னியவள்.
"இல்லை, என் மாமா வந்துடுவார்."
அழுதுவிடுவது போல் கூறியவளின் முகத்தில் அந்நேரம் திடுமென வீசிய தென்றல் காற்றில் அவளின் முடிக்கற்றைகள் அசைந்தாடின.
தனக்கு வெகு அருகில் பேரழகியாய் ஒளிர்ந்துக் கொண்டிருப்பவளின் முடிகளை ஒதுக்குவதற்கு உயர்ந்தக் கரத்தை சட்டெனக் கட்டுப்படுத்திக் கொண்டவன்,
"உன் மாமா நீ எதிர்பார்ப்பது போல் எப்ப வேணாலும் வரலாம். ஆனால் இப்போ, இங்க வந்திருப்பது அவன் இல்லை." என்றவனாய் விடுவிடுவென்று நடந்து குடிலிற்குள் சென்றுவிட, அவன் கூறியதன் அர்த்தம் புரிபடத் துர்காவிற்கு நிமிடங்கள் சில பிடித்தன.
‘அப்படின்னா என் தலைவன் இவன்னு சொல்றானா?’
புரிந்ததும் இதயமே அரண்டுப் போனதில் அடைக்கத் துவங்கியது.
************************************************
‘Tis but thy name that is my enemy;
Thou art thyself, though not a Montague.
What’s Montague? It is nor hand, nor foot,
Nor arm, nor face, nor any other part
Belonging to a man. O, be some other name!
What’s in a name? That which we call a rose
By any other name would smell as sweet;
So Romeo would, were he not Romeo call’d,
Retain that dear perfection which he owes
Without that title. Romeo, doff thy name,
And for that name which is no part of thee
Take all myself.
--William Shakespeare
ஆர்ய விக்னேஷின் கருப்பு நிற [black Lexus LX] லெக்ஸஸ் வெளியே நின்றிருக்க, அளவில் சிறியதாக இருந்தாலும் கண்களைக் கவரும் வண்ணம் அழகோவியமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது அவ்வீடு.
வீட்டின் உள்ளே, முன்னறையில் அலங்காரப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த சிலைகளும், மின் விளக்குகளும், சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களும், வரவேற்கும் விதமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர் ஜாடிகளும், அவற்றின் அதிகப்படியான விலையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.
தரை விரிப்பு முதல் சாளரங்களில் தொங்கிக் கொண்டிருந்த திரைச்சீலைகளும், வீட்டின் உச்சத்தில் அசைந்தாடும் அலங்கார விளக்குகளும், ஆங்காங்கு போடப்பட்டிருந்த தங்கம் மற்றும் அடர் மெரூன் நிறங்கள் கலந்து பளிச்சிடும் இருக்கைகளும் அவ்வீட்டில் வசிப்பவரின் ஆடம்பரத்தையும், வசதியையும் தெளிவாக எடுத்துரைத்தன.
ஒரே தளம் என்றாலும் அனைத்து அறைகளும் அழகழகாய் அலங்கரிக்கைகளில் வசீகரிக்க, அதனில் அவ்வீட்டின் உரிமையாளர் படுக்கும் பிரதான படுக்கையறை அது.
அதனில் ஏறக்குறைய வீட்டின் உட்கூரையை எட்டிவிடும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டிருந்த படுக்கையில் ஒய்யாரமாக, வெற்றிடை நெளிய ஒருக்களித்துப் படுத்தவாறே கட்டிலின் அருகில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த ஆர்ய விக்னேஷின் மீது பார்வையைப் பதித்திருந்த சஹானா பாக்ஷியின் தோற்றம், அப்பட்டமாகச் சொல்லியது, அவள் ஆர்ய விக்னேஷிற்கு மிகவும் வேண்டப்பட்டவள் என்று.
"இன்னும் என்ன யோசனை ஆர்யன்? இது ஏற்கனவே நீங்களும் நானும் சேர்ந்துப் போட்ட திட்டம் தானே, இதைச் செயல்படுத்த ஏன் இவ்வளவு தயக்கம்?"
"சஹானா. இது தயக்கம் இல்லை. ஒருவித எச்சரிக்கை நடவடிக்கைன்னு சொல்லலாம்."
"ஏன், நீங்களும் அந்த SSP ஷிவ நந்தனைப் பார்த்துப் பயந்துட்டீங்களா?"
அவளின் கேள்வியில் முகத்தில் எரிச்சல் படர அவளைத் திரும்பிப் பார்த்தவன், விரல்களுக்கு இடையில் பிடித்திருந்த, நெருப்பு பொறி நுனியில் பறக்கும் சிகாரை உதடுகளுக்கு இடையில் வைத்தவனாய், "பயம் ஷிவாவைப் பார்த்து இல்லை." என்றான் அழுத்தமான குரலில்.
"அப்படின்னா வேற யாரைப் பார்த்துப் பயப்படுறீங்க?"
"பயமுன்னு சொல்ல முடியாது, ஏற்கனவே சொன்னது மாதிரி ஒரு எச்சரிக்கை நடவடிக்கைன்னு சொல்லலாம்."
"அதான் ஏன் இந்த எச்சரிக்கை உணர்வுன்னு கேட்குறேன்.. அதுவும் தி ஃபேமஸ் கேபினட் மினிஸ்டர் ஆர்ய விக்னேஷ் யார்கிட்ட இவ்வளவு எச்சரிக்கையா இருக்கணும்?"
"வருண்."
அவன் கூறியதும் திடுக்கிட்டவளாக எழுந்து அமர்ந்தவள், அவனது முகத்தையே பார்த்திருக்க,
"வருணுடைய ஆவ்கோர் கம்பெனித் திட்டத்துக்கு எப்படி என்னை உட்படுத்தினானோ, அதே போல் என்னுடைய இந்த மதுபானக் கம்பெனிக்கும், அதாவது என்னுடைய ஃப்ளேமிங் பேர்ட் ஸ்பிரிட்ஸ் [Flaming Vermilion Bird Spirits] கம்பெனிக்கும் அவனை உட்படுத்தினேன், ஐ மீன் அவனும் இந்தக் கம்பெனியில் ஒரு முக்கிய investor [முதலீட்டாளர்]. ஆனால் இப்போ வருணுடைய செய்கைகள் எனக்குக் கொஞ்சம் சந்தேகத்தை வரவழைச்சிருக்கு. அதான் நாம் ப்ளான் செய்தப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்துறதுக்குக் கொஞ்சம் தயக்கமா இருக்கு." என்றவன் மறந்தும் அவன் வெகு இரகசியமாய்ச் செய்து கொண்டிருக்கும் திட்டத்தைப் பற்றிக் கூறவில்லை.
அது ஆர்ய விக்னேஷையும், அந்தத் திட்டத்திற்குத் தேவையான மனிதர்களையும் தவிர வேறு ஒரு ஜீவராசிக்கும் கூடத் தெரியாது.
அது ‘Project Vermilion Bird’ என்றழைக்கப்படும் ஒரு திட்டம்.
1982 ஆம் ஆண்டில் மதுபானங்களைத் தயாரிக்கும், 'ப்ளூபேர்ட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட்' என்ற நிறுவனம் ஒன்று அஜய் சாவ்லா என்பவரால் இந்தியாவில் நிறுவப்பட்டது.
அந்நிறுவனத்தை இரண்டு வருடங்களுக்கு முன் ஆர்யனும் வருணும் இணைந்து வாங்கியவர்கள், 'ஃபிளேமிங் வெர்மிலியன் பேர்ட் ஸ்பிரிட்ஸ்' என்று அதற்குப் புதிய பெயரை இட்டிருந்தனர்.
இந்த மதுபான நிறுவனம் ஒயின், ஷாம்பெயின், விஸ்கி, ஸ்காட்ச், வோட்கா, ரம், பிராந்தி, ஜின் ஆகிய மதுபானங்களை உற்பத்தி செய்கிறது.
துவங்கிய சில மாதங்களிலேயே சர்வதேச அளவில் பெரிய சந்தையையும், பங்கையும் பெற்றது இவர்களது இந்த நிறுவனம்.
இந்நிறுவனத்தின் மதுபான ஆலைகள் பல இடங்களில் அமைக்கப்பட்டன.
கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் உற்பத்தி ஆலைகளையும், 8 நாடுகளில் அலுவலகங்களையும் கொண்டுள்ள நிறுவனமாக உயர்ந்தது 'ஃபிளேமிங் வெர்ம்பிலியன் பேர்ட் ஸ்பிரிட்ஸ். குறுகிய காலத்திற்குள், இந்த நிறுவனம் இந்தியாவின் சிறந்த மதுபான நிறுவனமாகக் கருதப்பட்டு வருகின்றது.
அதே வேளையில் வருண் தேஸாயிக்கே தெரியாமல், 'வெர்மிலியன் பேர்ட்' என்ற ஒரு திட்டத்தையும் துவங்கினான் ஆர்ய விக்னேஷ், வெகு இரகசியமாக.
கடுமையான போதை மற்றும் நாள்பட்ட குடிப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் கோளாறு 'ஆல்கஹால் சைக்கோசிஸ்' [alcohol psychosis] என்று அழைக்கப்படும்.
ஏறக்குறைய அது ஒரு வியாதியைப் போன்றது. அதற்கான மருந்துக்கள் இன்றுவரை சரிவரக் கண்டு பிடிக்கப்படவில்லை.
ஒருவருமற்ற அனாதையாக அலைந்து திரிந்திருந்த அச்சிறுவயதிலேயே குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆர்ய விக்னேஷ், ஏறக்குறைய பதினெட்டு வயது வரை ஹெராயின், கோக்கெயின் [narcotic drugs] போன்ற போதை மருந்துப் பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்தான்.
அவனை வெளியே கொண்டு வந்தது ஜோசஃப் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகங்கள்.
அதற்குப் பிறகு அரசியலில் அழிக்கமுடியாத அஸ்திவாரத்தை இட்டு முடித்த தருணத்தில் உருவான எண்ணம் ‘ஆல்கஹால் சைக்கோசிஸ்’- நோய் கொண்ட மனிதர்களை அதனில் இருந்து விடுவிப்பது.
ஆனால் அதற்காக அவன் தேர்ந்தெடுத்த பாதையோ ஆல்கஹால் சைக்கோசிஸையும் விட மிகவும் கொடுமையானது.
அதற்கான ஒரு ஆய்வு தான் இந்த ‘வெர்மிலியன் பேர்ட்’ என்ற திட்டம்.
இது இந்திய அரசாங்கத்தால் அனுமதிப் பெறப்பட்டு நடைபெறும் ஆய்வல்ல. காரணம், இந்தத் திட்டத்தில் சோதனைப் பொருட்களாக உபயோகப் படுத்தப்படுவது, அனாதை பிள்ளைகளும், யாருமற்ற முதியவர்களும் தான்.
அதுவும் இல்லாது அந்த ஆய்வு நடைபெறுவதும், ஆர்யனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு மதுபான ஆலையில்.
அதில் முக்கியமான பகுதியான மனக்கட்டுப்பாடு ஆய்வுகள், இந்த வெர்மிலியன் பேர்ட் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு ஆய்வும் வெவ்வேறு குறிக்கோள்களைக் கொண்டிருந்தன, ஆனால் அனைத்தும் நெறிமுறையற்றவை.
அதனில் ஒரு ஆய்வின் பிரிவு, வெவ்வேறு மதுபானங்களை அருந்துவதால் நாள்பட ஏற்படும் விளைவுகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது.
அதாவது சோதனைப் பாடங்களாகப் பயன்படுத்தப்படும் மனிதர்களுக்கு ஏராளமான மதுபானம் கொடுக்கப்படும். பிறகு அவர்கள் "பாதுகாப்பான வீடுகள்" என்றழைக்கப்படும் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
பின்னர் அவர்கள் ஒரு வழி கண்ணாடியிலிருந்து [one way mirror] கண்காணிக்கப்படுவார்கள்.
குடிப்பழக்க மனநோயைப் பெறும் அளவிற்கு அவர்களை வளர்த்துவிட்டு, பிறகு மனரீதியாக உடைப்பது தான் ஆய்வின் முதல் கட்டம்.
பிறகு ஆர்யனின் நிறுவனம் கண்டுப்பிடிக்கும் மனநோய்க்கான மருந்தை அவர்களுக்குக் கொடுத்து அதன் மூலம் அவர்களுக்குள் நேரும் மாற்றங்களையும் கணிப்பதற்கு என்று, பல ஆய்வாளர்களையும் ஆர்யன் உட்படுத்தியிருக்கின்றான்.
இதன் மூலம் அவன் அடையப்போகும் அனுகூலங்களும், பலன்களும் இரண்டு.
ஒன்று இந்த உலகத்திலேயே இதுவரை கண்டுப்பிடிக்கப்படாத ஒரு மருந்தினை, அதுவும் ஏறக்குறைய 2.8 பில்லியன் மக்களுக்கும் மேல் மதுபானம் போதைக்கு அடிமையாகிவிட்டிருக்கும் நேரத்தில், இப்பேற்பட்ட ஒரு மருந்து அவர்களுக்கு விடிவெள்ளியைப் போன்றது.
ஆகையால் அதனைக் கண்டுப்பிடிக்கும் முதல் திட்டம் ஆர்யனின் வெர்மிலியன் பேர்ட் திட்டமாகத் தான் இருக்கும்.
ஆனால் அந்த மருந்து கண்டிப்பிடிக்கப்படும் வரை, அவன் அந்த ஆய்வினை மறைமுகமாகத் தான் செய்ய வேண்டும், அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது அவன் ஆய்வு பொருட்களாக உபயோகப் படுத்தப்படும் நபர்கள் [unethical human trials].
ஆக இது சர்வநிச்சயமாக அரசாங்கத்தால் அனுமதிக்கப்படப் போவதில்லை என்பதை அறிந்துக் கொண்டவனாகத் தானாகவே இத்திட்டத்தை அரங்கேற்றி வருகின்றான் ஆர்ய விக்னேஷ், ஆனால் வருண் தேஸாயிக்குத் தெரியாமல்.
இதில் ஏறக்குறைய இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டான் என்று கூடச் சொல்லலாம்.
மதுபானப் போதைக்கு அடிமையாகும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றாலும், அதனை ஆய்வு செய்யும் முறை வெகு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் கட்டுத்திட்டங்களுக்கும், சட்டத்திற்கும் மதிப்பளித்து ஆய்வு செய்வதானாலும், மருந்து கண்டிப்பிடிப்பது என்பது அரிதாகும் என்ற முடிவிற்கு வந்தவன், வருணிடம் இதனைப் பற்றி ஒரு வார்த்தைக் கூடச் சொன்னதில்லை.
ஆனால் இது மட்டும் அல்ல.
இன்னொரு முக்கியமான ஆய்வும் நடைப்பெற்றுக் கொண்டு வந்தது அதே மதுபான ஆலையில்.
அது அபின், ஹெராயின், கோடீன், ஆக்ஸிகோடோன், கோகோயின், மெத்தடோன், மார்ஃபின் என்று அனைத்தையும் மிஞ்சிவிடுமான போதையை வழங்கக்கூடிய புதிய போதை வஸ்துவைக் கண்டுப்பிடிப்பதற்கான ஆய்வு.
இவ்வாய்வுகள் நடைப்பெறுவது இரு மிகப்பெரிய ஆய்வாளர்களின் கீழ்.
மனக்கட்டுப்பாடு ஆய்விற்குத் தலைமை வகிப்பது இந்தியாவைச் சார்ந்த சயின்டிஸ்ட் விஷேஷ். போதைப்பொருளைக் கண்டுப்பிடிக்கும் ஆய்விற்குத் தலைமை வகிப்பது லண்டனைச் சேர்ந்த சயின்டிஸ்ட் சைமன் ஸ்பெக்டர்.
ஆக, ஒரு பக்கம் மதுபானத்தின் விளைவுகளால் சீரழிக்கப்படும் மனிதர்களைக் காப்பாற்றுவதற்கு என்று மருந்து கண்டுப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆர்ய விக்னேஷ், மறுபக்கம் உலகிலேயே கொடிய போதை மருந்தைக் கண்டுப்பிடிக்கும் ஆராய்ச்சிகளை 'வெர்மிலியன் பேர்ட்' நிறுவனத்தின் கீழ் நடத்தி வந்தான்.
ஆக, இது எதனையுமே அறியாதவண்ணம், இந்தத் திட்டங்களில் தானும் ஒரு பங்கீட்டாளராக, ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப சம்பந்தப்பட்டிருந்தான் வருண் தேஸாய்.
அதாவது, அவர்களது ‘ஃப்ளேமிங் வெர்மிலியன் பேர்ட்’ மதுபான நிறுவனத்தின் நிழலில் தான் இந்தக் கொடிய ஆய்வே நடைப்பெறுகின்றது.
தான் சிக்கினால் வருண் தேஸாயும் சிக்க வேண்டும் என்பதற்கான திட்டத்தை வெகு அழகாய்த் தீட்டியிருந்த ஆர்ய விக்னேஷ், அவர்களின் நிறுவனத்திற்குக் கீழ் இருக்கும் பல மதுபான ஆலைகளை விட்டுவிட்டு, புது ஆலை ஒன்றைக் கட்டி, அதனில் இவ்வாய்வை செய்து வருவதால், வருண் தேஸாயிக்கும் ஆர்ய விக்னேஷின் திட்டம் தெரியாது போனது விதியே அன்றி வேறன்ன??
ஆனால் இப்பொழுது சஹானா பேசுவது அந்த ஆய்வைப் பற்றியல்ல, ஏனெனில் ஆர்யனையும் அதன் இரகசிய ஆய்வாளர்களையும் தவிர இதனைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
இப்பொழுது அவள் வினவுவதோ அவர்களின் மதுபானம் நிறுவனத்தில் அவளையும் ஒரு முக்கியப் பங்குத்தாரராக இணைவதைப் பற்றியும், சஹானா என்ற அவளின் பெயரிலேயே [brand] ஒரு புது மதுபானத் தயாரிப்பை வெளியிடுவதைப் பற்றியும்!
அதுவும் அல்லாது அந்தப் பானத்தை அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்வது, குறிப்பாக அதிகளவில் மதுபானத்தை உபயோகப்படுத்தும் மனிதர்கள் வாழும் ரஷ்யா மற்றும் ஹங்கேரி நாடுகளில் அதனை அறிமுகப்படுத்துவது பற்றியுமே அவள் தற்பொழுது விவாதித்துக் கொண்டிருப்பது.
ஆனால் அவளின் பெயரில் புது மதுபானம் தயாரிப்பதற்கும், வெளிநாடுகளில் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் நிச்சயமாக வருணின் சம்மதம் தேவை.
இவ்விஷயத்தை அவனிடம் எடுத்துச் சென்றால், இந்நாள் வரை அவ்வளவாக இந்த நிறுவனத்தில் தலையிட்டு இருக்காத வருணுக்கு ஏதாவது சந்தேகம் வரலாம், அதன் மூலம் இரகசிய ஆய்வுகளும் அவனுக்குத் தெரிய நேரிடலாம்.
"வருண் மேல் திடீர்னு என்ன சந்தேகம், ஆர்யன்? நீங்க தான இந்த லிக்கர் கம்பெனியில் முதல் ஓனர். அதன் பிறகு தான வருண் வருவார்."
"ஆமா, ஆனால் இப்போதையச் சூழ்நிலையில் இதைப்பற்றிப் பேசுறதுல எனக்கு விருப்பம் இல்லை சஹானா."
"எனக்குப் புரியலை ஆர்யன். திடீர்னு அவர் மேல உங்களுக்கு ஏன் சந்தேகம்?"
"சஹானா, கொஞ்ச நாளா மறைமுகமா வருண் மேல ஒரு புகார் பரவிட்டு இருக்கு, தெரியுமா?"
"யெஸ், ஷிவ நந்தனின் ஃபியான்ஸி துர்க ரூபினியை வருண் தான் கடத்திட்டாருன்னு திரையுலகத்திலேயும் மாடல் உலகத்திலேயும் கூடப் பேசிக்கிறாங்களே ஆர்யன். அது தான?"
"அதே தான்"
"அதுக்கும் நம்முடைய திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?"
தலையைணையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டவளாய் கட்டிலின் மேல் சாய்ந்தவாறே கேட்க, அவளின் அருகில் நெருங்கி அமர்ந்தான் ஆர்யன்.
"நம்ம திட்டத்துக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை சஹானா. ஆனால் ஏறக்குறைய துர்காவை வருண் கடத்தியதாகத் தகவல் வந்து ஒரு மாசத்துக்கும் மேல ஆகிடுச்சு."
"தகவலா? நீங்களே அது வெறும் தகவலுன்னு சொல்றீங்க, அப்படின்னா வருண் துர்காவைக் கடத்தலையா?"
தனது மேனி முழுவதும் ஆர்யனின் மேல் படுமாறு சற்றே சாய்ந்தவளாய் கேட்டவளிடம் உண்மையைக் கூறுவதற்கு, இந்த இளம் வயதிலேயே அரசியல்வட்டாரத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஆர்யன் என்ன முட்டாளா?
"ம்ப்ச், வருண் அந்த அளவிற்கு எல்லாம் கீழே இறங்கமாட்டான்னு நான் எத்தனை தடவை உன் கிட்ட சொல்லிருக்கேன்."
"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலை ஆர்யன்."
விநாடிகள் சில அமைதியாக இருந்தவனின் செவிகளில் மெல்லிய அலைபேசி ஒலி விழ, படக்கென்று கட்டிலைவிட்டு எழுந்தவனாய் அலைபேசியை எடுத்தவன் அதில் வந்த தகவலைக் கண்டு கிளம்பினான்.
"என்ன ஆர்யன், இப்பத்தான வந்தீங்க. அதுக்குள்ள கிளம்புறீங்க?"
புருவங்கள் இடுங்க மீண்டும் ஒரு முறை தகவலைப் படித்தவன், "சீதாக்கிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு சஹானா, நான் உடனே போகணும்.." என்றவனாய் படுக்கையறையைவிட்டு வெளியே வந்தான்.
"என்ன ஒரு irony [முரண்] பார்த்தீங்களா ஆர்யன்? உங்க மனைவி பேரு சீதா.. ஆனால் நீங்கள்?”
கூறியவளாய் சிரித்தவளின் தோற்றம் ஆர்யனுக்குச் சற்றுமுன் இருந்த மயக்கத்தை சடுதியில் துடைத்தெறிந்தது.
ஆயினும் அதனை வெளியில் காட்டாது, “நான் கிளம்பறேன்..” என்று மட்டும் கூறியவனின் நடையை நிறுத்தியது அடுத்து அவள் கூறிய வார்த்தைகள்.
"என்னத்தான் என் அழகில் நீங்க மயங்கி இருந்தாலும் உங்க வைஃபுன்னு வரும் போது அவளுக்குத் தான் முதலிடம் தர்ரீங்க ஆர்யன்?"
"நான் இராமன் இல்லைன்னாலும் அவ உண்மையான சீதா தான் சஹானா. அவளுக்குத் தான் என் வாழ்க்கையில் எப்பவும் முதலிடம்னு உனக்கும் தெரியும். அது மட்டும் அல்ல, அவளை நீ மரியாதையா தான் கூப்பிடணும்னு பல முறை சொல்லிருக்கேன். மறந்திடாத."
அவனது பதிலில் கோபம் கொள்ளவில்லை அவள், ஏனெனில் மனைவி மேலான ஆர்யனின் காதல் எத்தனை வலியது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.
அவளுக்குத் தேவை அரசியலில் கோலோச்சி கொண்டிருக்கும் அந்த மத்திய மந்திரியினால் கிடைக்கும் பலன்கள்.. அவ்வளவே.
இருந்தும் விடாப்பிடியாய் அவனைப் பின் தொடர்ந்து வந்தவளாய் இகழ்ச்சியுடன், "ஒரு வேளை அவங்களுக்குச் சீதாலெட்சுமின்னு பெயர் வைக்காம மீனாட்சின்னு வச்சிருந்தால்? நானும் அப்பப்ப ராமாயணம் படிச்சிருக்கேன் ஆர்யன்." என்றாள் அதே நக்கலான புன்னகையுடன்.
அவள் பேசுவதன் அர்த்தம் ஆர்யனுக்குப் புரிந்தது.
காரணம் ராமாயணத்தில் ராமனுக்கு எதிரியாக வரும் இராவணனின் தங்கை சூர்ப்பணகைக்கு மீனாட்சி என்ற பெயரும் உண்டு என்று கூறப்படுகின்றது.
[பிறக்கும்போதே சூர்ப்பணகை தன் தாய் கேகசி மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களையும் அழகில் விஞ்சியிருந்தாள். அவள் கண்களின் அழகை முன்னிட்டு மீனாட்சி என்றும் அழைக்கப்பட்டாள்.]
பதில் கூறாது சில விநாடிகள் அவளைக் கூர்ந்துப் பார்த்தான்.
பிறகு முன்னறையில் மேஜையில் வைத்திருந்த கார் சாவியை எடுத்தவனாய் வீட்டின் வாயிலிற்குச் சென்றவன் சற்று நின்று நிதானமாய் அவளைத் திரும்பிப் பார்த்தவனாய்,
"உனக்கு ராமாயணம் தெரிஞ்சிருக்கு, குட்.. பட், இதை நீ கேள்விப்பட்டிருக்கியா சஹானா? O, be some other name! What’s in a name? That which we call a rose by any other name would smell as sweet" என்றான்.
இப்பொழுது அவன் கூற வருவது அவளுக்குப் புரிந்தது.
சற்று அதிகமாகவே இதழ்களை விரித்துச் சிரித்தவள், " A quotation from William Shakespeare’s play Romeo and Juliet. அதாவது ரோஜா மலரை ரோஜான்னுக் கூப்பிடலைன்னாலும் அதனுடைய வாசம் மாறாது, அதே போல் உங்க சீதாவிற்குச் சீதான்னு பெயர் வைக்காவிட்டாலும் அவங்க தான் சிறந்தவங்கன்னு சொல்றீங்க, ரைட்?" என்றாள்.
தானும் புன்னகைத்தவனாய் வீட்டினை விட்டு வெளியில் வந்தவன் தனது கருப்பு நிற லெக்ஸஸில் ஏறியதுமே அதனைச் சீறிக் கிளப்பினான்.
அரிமாக்களின் வேட்டை!
தொடரும்
Reference:
10 Outrageous Experiments Conducted on Humans
Some truly bizarre and troubling things have been done through the ages in the quest for scientific knowledge. The 10 experiments on this list all made humans into lab rats.
science.howstuffworks.com
What is the real name of Surpanakha in Ramayan?
Meenakshi is the real name of Surpanakha (Fish shape eyed woman). Surpanakha means Sieve shape nailed (Soorpa = Sieve + Nakha = Nail) . She was very beautiful (unlike portrayed in movies and TV as a dark colored demon).