Janani Naveen
Well-known member
11
Last edited:
LovelyEpilogue :
ஒரு வருடத்திற்கு பிறகு...
முத்து நகரின் மையத்தில் அமைந்திருக்கும் அந்த பெரிய மாளிகை போன்ற வீட்டின் வாயிலில் மலர் தோரணங்கள் அமைத்து வண்ண விளக்குகளால் ஒளிகளை வாரி இறைத்து விழாக் கோலம் பூண்டிருந்தது ஆத்ரேயன் - யசோதா இல்லம்..
ஆம், இன்று யசோ ஆத்ரேயன் இரட்டை குழந்தைகளான ஆர்யன் காளிங்கராயன் மற்றும் பூவினி யின் முதல் பிறந்தநாள் விழா..
அங்கே ஆத்ரேயன் அறையில் பூவினி ஆர்யனை விழாவிற்கு தயார்படுத்திக் கொண்டிருந்த யசோவிற்கு அந்த காலடி சத்ததைக் கேட்டவுடன் உதட்டோரத்தில் ஒரு கள்ளச் சிரிப்பு.. சொல்லாமலே தெரியும் அந்த காலடிச் சத்தத்திற்கு சொந்தக்காரன் யாரேன்று.. "வரட்டும், நல்ல கேக்குறேன் " என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
ஆர்யன் அம்மாவின் பின்னே தந்தையை பார்த்து தலையை அழகாக சாய்த்து "ப்ப்பா உய்" என்று தூக்கி போட்டு பிடிக்க சொல்லிக் கேட்டான் தன் மழலை மொழியில். மகனையும் மகளையும் ஒருசேர தூக்கி "இப்ப உய் வேணாம்டா பட்டுக்குட்டி, அழகா ரெடி ஆகிட்டாங்க ரெண்டு லட்டு வும்," என்றபடி பின்னால் வந்த வள்ளியம்மையிடம் கொடுத்து அனுப்பினான்.
அவர்கள் சென்றதும், அசையாமல் கட்டிலில் அமர்ந்திருந்த மனைவியை பின்னிருந்தவாறு அணைத்துக் கொண்டான். "என்னடி இப்ப உனக்கு பிரச்சனை, சொல்லு " என்றவனிடம்,"ருத்து ஏன் இன்னும் வரல, அவன் அம்மாச்சி வீட்டுக்கு போய் பத்து நாள் ஆச்சு, தேடுது... " என்றாள் அவனின் யசோதை.
"அடியே என் சக்கர வள்ளியே, நிஜமாவே மாமா க்கு அங்க டிரஸ்ட் வேலைகள் அதிகம் இந்த வாரம் அதான், எல்லாத்தையும் முடிச்சிட்டு இங்க வந்து ஒரு மாசம் இந்த குட்டீஸ் கூட இருக்க போறதா சொல்லி இருக்காரு.. "
"புரியுது டா என் அத்து, ஆனா வரும் போது இளவரசர் என்ன கலர் ல வருவாரோ தெரியலயே " என்று உதட்டை சுளித்தவளை, விஷமமாக பார்த்தவன்,
"அது... அங்க காடு மேடு வயல் கிணறு என்று சுத்தியிருப்பான், அதுனால கொஞ்சம் கருப்பாதான் வருவானோ.. " என்று அவள் காது மடல்களில் கொஞ்சிக் கொண்டு கூறியவனை திரும்பி பார்த்து அவன் மார்பில் கை வைத்து தள்ளினாள், எழ எண்ணியவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், ஆழ்ந்து குரலில், "புரியுதுடி, நீ என்ன சொல்ல வருகிறன்னு.. யாரு என்ன சொன்னாலும் அவன் நம்ம பையன் அது நமக்கு தெரிஞ்சா போதும் னு நீதானடி நித்தமும் சொல்லுவ, அப்புறம் எதுக்காக கலங்குறவ, " என்றவனை பார்த்து பளிச் சென்று சிரித்தவள், " என் அத்து இருக்கும்போது எனக்கு என்ன கலக்கம், சுஜி அக்கா க்கு ஃபோன் போட்டு கிளம்பிட்டாங்களான்னு கேட்டிங்களா.. " என்றவாறே கட்டிலில் இருந்து கீழே இறங்கி அணிய வேண்டிய பட்டுச்சேலை யை எடுத்துக் கொண்டாள். அவன் அவளுக்காக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த மாந்தளிர் நிறத்தில் ஆழ்ந்த ஊதா வண்ண கரை வைத்த பட்டு. அவளைப் பார்த்துக் கொண்டே ஒரு புறமாக சரிந்து வலது கையால் தலையை தாங்கிக் கொண்டவன், "இப்போ எல்லாம் மாமனுக்கு மரியாதை கொஞ்சம் தூக்க லா இருக்கே, என்னவாம் ", சேலையை எடுத்து கொண்டு உடை மாற்றும் அறைக்குள் நுழையப் போனவள், திரும்பி நின்று " மீச நரைத்த மாமனுக்கு மரியாதை குடுத்து தான ஆகனும், பசங்க வளர்ந்து வராங்க அதான், ஆனால் நமக்கான நேரத்தில் உனக்கு மரியாதை கிடைக்காது அத்து " என சிரித்துச் சென்றாள்.
யசோ சேலை உடுத்தி தயாராகி, விழாவிற்கான ஏற்பாடுகளை கவனிக்க கீழே வரவும் , அதே நேரம் கார் வந்து நிற்கும் ஓசை கேட்கவும், யசோ ஓடோடி வீட்டின் முன் தாழ்வாரத்தில் நின்றாள். அங்கு வந்து நின்ற காரின் முன்பக்கம் இருந்து முத்துக்கருப்பன் இறங்க, பின் பக்கத்திலிருந்து பேச்சியம்மாளும் ருத்ரனும் இறங்கினர்.
ஒரு நிமிடம் குறுகுறுவென்று பார்த்தவன் ஓடி வந்து கால்களைக் கட்டி அணைத்துக் கொண்டான் யசோதையின் தவப்புதல்வன் ருத்ரன் காளிங்கராயன். முழுதாக இரண்டு வாரங்கள் கழித்து பார்க்கும் மகனை அணைத்து தூக்கிக் கொண்டாள். மனதில் சொல்லொனா நிம்மதி குடி கொண்டது அவளுக்கு. அனைத்தையும் பார்த்தும் பாராமல் உள்ளே குழந்தைகளிடம் சென்று அமர்ந்தார் பேச்சியம்மாள். முத்துக்கருப்பனும் அவளை நலம் விசாரித்து விட்டு கூடத்தின் நடுவில் காணக் கிடைக்காத ஓவியமாக இருந்த மகளது முழு உருவப் படத்தினை பார்த்து ஒரு நிமிடம் நின்றுவிட்டு திரும்பியவரின் பின்னே நின்றிருந்த ஆத்ரேயன், "வாங்க மாமா " அவரை தனது அலுவலக அறைக்கு அழைத்து சென்றான்.
ஆறு மாதத்திற்கு முன்பு, மலர் பெயரில் டிரஸ்ட் ஒன்றும் குழந்தைகள் காப்பகம் ஒன்றும் தூத்துக்குடியில் ஆரம்பித்து இருந்தனர். , மதுரையில் ஆரம்பித்து இரண்டு மாதங்களே ஆகின்றன. மதுரை டிரஸ்ட் மற்றும் காப்பகத்தினை முத்துக்கருப்பன், ஆதி யின் தூரத்து உறவும் நம்பிக்கைக்குரிய நண்பனுமான வீரபாண்டியன் துணையுடன் நடத்தி வந்தார்.
சிறிது நேரத்தில் தோட்டத்திலேயே அமைக்கப்பட்டிருந்த விழா மேடை மற்றும் அதனை சுற்றி போடப்பட்டிருந்த வட்ட மேஜைகள் அதற்கான நாற்காலிகளும், மறுபுறம் பஃபே முறையில் உணவும் என்று தயாராகின.
ஆத்ரேயன் மிகவும் முக்கியமான சில தொழில் வட்டார நண்பர்களையும், நெருங்கிய சில உறவுகளை மட்டுமெ அழைத்திருந்தான். ஊரிலிருந்து ஆதி தாய்மாமன் குடும்பத்தினர் அனைவரும் இருக்க, சுஜி கீர்த்திவாசனுடன் வந்து சேர்ந்திருந்தாள். ஆதியும் யாசோ வும் இரு குழந்தைகளை தூக்கிக் கொள்ள, நடுவே ருத்ரன் நின்று தன் தம்பி தங்கையின் கைகளைப் பிடித்து கேக்கினை வெட்டினான். கேக்கின் முதல் துண்டினை எடுத்தவன் தலையை சற்று மேல் நோக்கி யசோதையைப் பார்த்தான், அவள் கண்களைக் காட்டவும், வீட்டினுள்ளே ஓடிச் சென்றவன் மலர் படத்திற்கு கீழே இருந்த தட்டில் வைத்துவிட்டு திரும்பினான்.
இது இப்போதல்ல மலரின் படம் சட்டம் போட்டு வைத்த நாளில் இருந்து கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கம். நல்ல நாளில் மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலும் சிறிது படைத்துவிட்டு உண்பது. அதனை யசோவே தான் சாப்பிடும் நேரத்தில் எடுத்துக்கொண்டு விடுவாள்.
விழா முடிந்து பெரும்பாலானவர்கள் கிளம்பி விட்ட நிலையில், ஆதி தனது அலுவலக அறையினுள் தொழில் வட்டார நண்பர்களுடன் இருக்க, மலருக்கு சித்தி முறை ஆகவேண்டிய விசாலாட்சி தன் மகளுடன் கூடத்தில் அமர்ந்திருந்தார். மலர் உயிருடன் இருக்கும் போதே ஆதிக்கு தன் மகள் ரஞ்சனியை இரண்டாவதாக மணமுடிக்க எண்ணம் இருந்தது. பின் வேலைக்கு சென்ற இடத்தில் ஒருவனை காதலித்து அவனுடன் ஓடிப்போய் திருமணமும் செய்து கொண்வள், தற்போது அவனுக்கு பொருளாதார நிலை சரி இல்லாததால், மணமுறிவு க்கு ஏற்பாடு செய்துவிட்டு அம்மா வீட்டுடன் இருக்கிறாள்.
இப்படி இருக்க, விசாலாட்சி மகளிடம், சிறிது தொலைவில் உணவு மேசையில் பூவினியை அமர வைத்து, பிள்ளைகளுக்கு பால் ஆற்றிக் கொண்டிருந்த யசோவின் காதுகளில் கேட்குமாறு, "இவளுக்கு வந்த வாழ்வ பாத்தியா ஒண்ட வந்தவளுக்கு ராணி வாழ்க்கை. இவ புருசன் செத்துப் போனானோ, இல்ல இவ ஓடி வந்துட்டாளோ, யாருக்கு தெரியும்.. ஹூம்" என்று முடிந்தவரை "எலேய் யாரது " என்ற குரல் திடுக்கிட்டுத் திரும்பச் செய்தது. பின்னால் பேச்சியம்மாள் நின்று கொண்டிருக்க, அம்மாவும் மகளும் தானாக எழுந்து நின்றனர். விசாலாட்சி பேச ஆரம்பித்த போதே கண்கள் குளம் கட்டி விட்டது யசோவிற்கு.
"யாரு வீட்டு கூடத்துல குத்த வச்சிகிட்டு யாரு குடும்பத்த பத்தி நாக்கு மேல பல்ல போட்டு பேசுறவ.. உச்சாணிக் கொம்புல வாழுறான்னு ஊரெல்லாம் பேரு, அவ ஆக்கித்திங்கிற பானைல அம்பத்திரண்டு ஓட்டையாமா....ஒம்பூட்டு பவுசு ஆருக்கும் தெரியாது ன்னு வக்கன( வக்கனை - எகத்தாளம் ) பேச வந்தீகளோ ஆத்தாளும் மவளும்.. ஆஞ்சுப்புடுவேன் ஆஞ்சு.. ஓம்புருசனுக்கொசரம் ஒங்க வூட்டுக்கு இம்புட்டுகூண்டு மருவாதி இருக்கு, அத்த காப்பாத்திக்கிட்டு வெள்ளன (விரைவாக ) கெளம்புற சோலிய பாரு... , ’ என்று முடிக்கவும் இருவரும் கூடத்தை தாண்டி சென்றிருந்தனர். நின்ற இடத்திலேயே வேரோடியது போல் நின்றிருந்தாள் யசோ. அவள் அருகில் வந்த பேச்சியம்மாள், பேத்தியை கையில் தூக்கிக் கொண்டே "ஒன்னய எங்கனால மலரா பாக்க முடியாதே ஒழிய, இன்னொரு மகளா ஏத்துகிடுதோம். நாளைக்கு திருச்செந்தூர் முருகனுக்கு நம்ம செலவுதேன், ரெண்டு பேரும் போயிட்டு வெள்ளன வாங்க, பிள்ளைகள நானும் வள்ளியும் பாத்துகிடுறோம்.. " என்று கூறிவிட்டு சென்றார்.
மறுநாள், ஆதியும் யசோவும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகம் பார்த்து பூஜை முடிய கிளம்பினர். கோவிலை விட்டு வெளியே வரும் நடைபாதையில் ஒரு கடைக்குச் சென்று ஒரு சின்ன ஓலைப்பெட்டியுடன் வந்தவன், யசோவிற்கு கார்க்கதவினை திறந்துவிட்டு தானும் ஏறிக் கொண்டான். உள்ளே அமர்ந்தவன் கடையில் வாங்கிய ஓலைப்பெட்டியினைத் திறந்து அவளிடம் கொடுத்தான், "இது என்ன அத்து " என்றபடி எடுத்துக் கொண்டாள். " இது சில்லு சுக்கு கருப்பட்டி, உடம்புக்கு ரொம்ப நல்லது யதும்மா, பனங்கருப்பட்டியில் சுக்கு சேர்த்து காய்ச்சி சில்லு சில்லாக வில்லைகள் போடுவாங்க. பிள்ளைங்களுக்கும் தரலாம்.. " என்றான் காரை கிளப்பிக் கொண்டே. தலையை சாய்த்து அவன் முகம் நோக்கி ஒரு பரவசப் பார்வையை சிந்தியவள்," எப்பிடி அத்து இவ்ளோ அழகா கருப்பட்டி க்கு மார்கெட்டிங் பண்ணுற, ச்சோ ச்ச்வீட் டா நீ" என்று கிளுக்கிச் சிரித்தவள் ஒரு ஜெட் வேக அச்சாரமிட்டாள்... கண்ணத்தில்.. சுந்தர புன்னகை சிந்தியவன்,
அவளை இரு வினாடி ஆழ்ந்த பார்வை பார்த்தவன் "யதும்மா, சந்தோஷமா இருக்கியா " என்றான். ஒரு பெருமூச்சினை விட்டவள் " புரியுது அத்து.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன், ருத்து அன்பு கிடைத்ததும், மலரக்கா அம்மா எனக்காக பேசினதும், " அவனது இடது கையை ஒருபுறமாக வளைத்து கட்டிக் கொண்டவள், "ருத்து ஒவ்வொரு முறையும் ஊருக்கு போய்ட்டு வரும்போது மனசுக்குள்ள திக்திக் ன்னு ஒருவித பயம், எங்க என்னை வெறுத்து விடுவானோன்னு, அம்மா இருந்தும் அந்த உணர்வை, அன்பை அவன் உணராமலே வளர்ந்துடுவானோ ன்னு, உனக்கு அம்மா பாசம் கிடைக்கல, எனக்கு அம்மா பாசத்தை, உரிமையை முழுமையா உணர்ந்து வளரும் சூழல் கிடைக்கல, இப்ப அவங்களும் இல்லை, ருத்து வுக்கும் அப்படி எந்த ஒரு சின்ன சுணக்கமும் வந்துட கூடாது, அந்த எண்ணம் தான் அத்து.. யாருக்கும் உண்மை தெரியாமல், ருத்து அன்பும் கிடைச்சு, மலர க்கா ஆசையும் நிறைவேறியதுல சந்தோஷம் டா கருவாயா இப்போ எனக்கு " என்றவளின் மூக்கினை நிமிண்டியவன்," இது போதும் யதும்மா.. " என்றான்.
" அத்து, ரொம்ப நாள் ஆச்சு, ஏங்கி போய் இருக்கேன்..." அவனது குறு குறு பார்வையை அனுபவித்தவள் " எனக்காக.. நம்ம பாட்டு பாடேன், செல்லம்ல" என்று எண்ணம் கொஞ்சினாள். கொஞ்சிய அவள் கையை பிடித்து தன் மார்பில் வைத்து அழுத்திக் கொண்டவன் , பாடத் துவங்கினான்...
" உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு சென்மம் ஒண்ணு போதுமா
நூறு சென்மம் வேணும்
அத கேட்குறேன் சாமிய...
நூறு சென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா?
சாகா வரம் கேட்போம்
அந்த சாமிய, அந்த சாமிய...
காத்தா அலைஞ்சாலும்
கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கனும்
இருக்கனும், கலக்கனும்...
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்லை எவளுமில்லை..."
கண்கள் மூடி அந்த குரலின் காதலை அனுபவித்தவளும், பாடினாள்..
" வாழ்க்க தர வந்தான் விருமாண்டி
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி.. "
(வரம் கொஞ்சம் தாமதித்து தானே கொடுத்தான்)..
எத்தனையோ தடைகளையும், இன்னல்களையும், உயிர் போராட்டங்களையும், உணர்வு போராட்டங்களையும், மீறி கை சேர்ந்த இந்த காதலை வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்..
******
View attachment 329