அத்தியாயம் - 8
கோவிலுக்குச் சென்று இருந்த ஸ்ரீயும் மஹாவும் வீட்டிற்குத் திரும்புவதற்கு நீண்ட நேரம் பிடித்திருந்தது..
வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ஸ்ரீ,
"சாரிடா திவ்யா, இன்னைக்கு ரொம்ப நேரம் ஆச்சு.. பாவம் நீ எவ்வளவு வேலை பண்ணியிருக்க" என்றார்......
"இல்லை அத்தை, ஒன்னும் பெரிசா பண்ணலை... அவங்க ரொம்பத் தலை வலியோட வந்திருந்தாங்க.... அதனால தான் சீக்கிரம் சாப்பிட்டுட்டு படுக்கட்டுமேன்னு சப்பாத்தியும் குருமாவும் பண்ணினேன்"
"யாருடா, அருணா?"
"இல்லத்த, அவங்க, மும்பாய்ல இருந்து வந்துட்டாங்க..."
அவள் சொல்லும் போதே அவளின் குரலும் நடுங்கியது...
அர்ஜூன் திவ்யாவின் கையால் சாப்பிட்டானா?... ஸ்ரீயால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை...
வியந்தவர் மஹாவை திரும்பி பார்க்க, மஹாவின் விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்திருந்தது... ஒருவொருக்கொருவர் பார்த்துக் கொண்டவர்கள் திவ்யா அறியாமல் சிரித்துக் கொண்டார்கள்......
பின் இப்பொழுது தான் ஸ்ரீ மனம் உருக தன் மகனும் மருமகளும் ஒன்று சேர வேண்டும் என்று கோவிலில் வேண்டிக் கொண்டார்......
ஆனால் தன் வேண்டுதல் இத்தனை விரைவில் நிறைவேற ஆரம்பித்துவிட்டதை அவரால் நம்ப முடியவில்லை....
ஸ்ரீயின் மனமும் முகமும் அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த..
"சரிடா... அர்ஜூன் நல்லா சாப்பிட்டானா?" என்றார்......
"ஆமாம் அத்த, ரொம்பப் பசி போல... அதுவும் இல்லாம அங்க மும்பைல என்ன சாப்பிட்டாங்களோ?" என்றாள்.
கணவன் மேல் தன் மருமகளின் கரிசனத்தைப் பார்த்தவருக்கு உள்ளம் பூரித்தது...
திருமணம் முடிந்து வந்த இரண்டு நாட்களிலும் அவனின் உதாசீனம் திவ்யாவிற்கு எவ்வளவு வலியைக் கொடுத்திருந்தது என்பதை மற்றவர்களை விட அவர் தானே அதிகம் உணர்ந்திருந்தார்...
என்ன தான் தன் மகனின் மனம் மாற்றத்திற்காக ஒவ்வொரு நிமிடமும் அவர் காத்திருந்தாலும், அவரின் ஆழ் மனதில் அது நடக்க இன்னும் பல காலம் திவ்யா காத்து இருக்க வேண்டும் என்றே தோன்றியிருந்தது...
அதற்குக் காரணம் அவர் தன் மகனை பற்றி நன்கு புரிந்து இருந்ததே...
ஆனால் அர்ஜூனின் மனம் திருமணத்தன்று தன் திருமணத்தையே வெறுத்தது தான்... இல்லை என்று சொல்வதற்கு இல்லை...
ஆனால் அந்த வெறுப்பு ஒரு நாள் தான் நீடித்தது...
அவனுக்கே தெரியாமல் அவன் மனையாளின் முகம் அவனின் இதயத்தில் படிந்து அவன் ஆத்மாவை ஊடுருவியிருக்கிறது என்பதை அவன் தான் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை...
காதல் சில நேரங்களில் கண்டதும் வரும்...
சில நேரங்களில் பரிதாபத்தினால் வரும்....
சில நேரங்களில் திருமணத்திற்குப் பிறகு வரும்... பெற்றோர் நிச்சயத்த திருமணங்களில் வருவது போல்!
சில நேரங்களில் உரிமையில் வரும்...
ஆனால் சில நேரங்களில் ஏன்? எதற்கு? எப்படி? என்றே தெரியாமலே ஒருவரின் மேல் வரும்...
இங்கு அர்ஜூனின் காதலும் அப்படித் தானோ????
மற்ற அனைவரும் உணவு அருந்தி முடித்தவுடன் ஸ்ரீயும் திவ்யாவும் டைனிங் டேபிளில் அமர்ந்தார்கள்...
"திவ்யா, அர்ஜூனுக்குத் தலைவலின்னு சொன்னல்ல, அவனா சொன்னானா?"
"இல்லத்த, அவங்க தலைய பிடிச்சுட்டு உக்கார்ந்து இருந்தாங்க.... நான் தான் தலைவலியாத் தான் இருக்கும்ன்னு மாத்திரை குடுத்தேன்"
திவ்யாவின் அன்பும் பொறுமையும் கரிசனமும் நிச்சயம் அர்ஜூனை அவள் பால் விரைவில் இழுத்துவிடும் என்ற நம்பிக்கை வந்தது ஸ்ரீக்கு...
ஆனால் அவர் மகன் ஏற்கனவே அவளிடம் விழுந்துவிட்டான் என்பது அவனுக்கே தெரியாத போது பாவம் இவருக்கு எப்படித் தெரியும்???
"கடவுளே, இந்தச் சின்னஞ் சிறுசுகள் சேருவதற்கு ரொம்ப நாள் இல்லன்னு நினைக்கிறேன்.... அத எப்படியும் நிறைவேற்றி வைப்பா, சீக்கிரம் குலதெய்வ கோவிலுக்கு வந்து பொங்கல் வைக்கிறேன்" என்று மனதிற்குள்ளே வேண்டிக் கொண்டார் ஸ்ரீ...
மறுநாள் காலையில் வழக்கம் போல் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு மற்ற வேலைகலையும் முடித்துவிட்டு காலை டிபனை செய்ய ஆரம்பித்தாள் திவ்யா.....
ஸ்ரீயும் தெய்வானையும் அவளுக்கு உதவி செய்து கொண்டு இருக்க, அர்ஜூன் சமையல் அறைக்குள் நுழைந்தான்.
"மாம்... எனக்கு இன்னக்கு நிறைய வேலைகள் இருக்கு... வீட்டிற்கு வர லேட்டாகும்" என்றவன் வெளியே கிளம்ப எத்தனிக்க,
"அர்ஜூன்... சாப்பிட்டுவிட்டு போப்பா" என்றார் ஸ்ரீ.....
"நோ மாம்... த்ரீ வீக்ஸ் இங்க இல்லாததால நிறைய மீட்டிங்ஸ் பெண்டிங்கல இருக்கு..... சில காண்ட்ராக்ட்ஸ் வேற சைன் பண்றதுக்கு முன்னாடி டீட்டெய்ல்ஸ் பார்க்கனும்.... எனக்கு மூச்சு விடறதுக்குக் கூட நேரம் இருக்காது... சாப்பாட வெளியே பார்த்துக்கிறேன்" என்றவன் திரும்பி சென்றான்.....
சமையல் அறையின் வாயில் தாண்டி செல்லும் பொழுது ஒரு விநாடி தாமதித்தவன் திரும்பி திவ்யாவை ஒரு பார்வைப் பார்க்க, தன் கணவனின் இந்தத் திடீர் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று அவளுக்குச் சத்தியமாக விளங்கவில்லை.....
ஆனால் வழக்கம் போல் ஒரு பய உருண்டை வயிற்றில் உருளவே செய்தது...
அலுவலகம் சென்ற அர்ஜூனும் என்றும் போல் அன்றும், அதற்கு அடுத்து வந்த நாட்களும் வேலை பழு அதிகமாகி தொழிற்சாலைகளைச் சந்திப்பது, தொழிற்கூட்டங்களில் பங்கேற்பது, அலுவலக வேலைகள் என்று மூழ்கி போக, காலையில் வெகு சீக்கிரம் வெளியே செல்வதும் இரவில் வெகு நேரம் கழித்துத் திரும்பி வருவதுமாக இருந்தான்..
ஒரே வீட்டில் இருந்தும் திவ்யாவின் கண்களில் அவன் படுவது அபூர்வமாகி போனது...
ஒரு விதத்தில் அவனின் எதிரில் தான் இல்லாமல் இருப்பது நல்லது தான் என்று தோன்றினாலும் ஏனோ தன்னால் தான் தன் கணவன் வீட்டில் இருப்பதைத் தவிர்க்கிறானோ என்றும் தோன்ற ஆரம்பித்தது....
மனதிற்குள் உழன்று கொண்டே இருந்த திவ்யா ஒரு நாள் ஸ்ரீயிடம் கலங்கிய முகத்துடன்....
"அத்த என் மனசுக்கு இது சரின்னு படல அத்த.... அவங்க எவ்வளவு பெரிய ஆளுன்னு இப்போ எனக்கு நல்லா புரியுது... அம்மா எப்பவும் சொல்வாங்க... ஆம்பளைங்க வெளியில எவ்வளவோ பிரச்சனைகளைச் சந்திச்சுட்டு வீட்டுக்கு வருவாங்க... அதனால வீட்டுல அவங்களுக்கு ஒரு நிம்மதியான சூழ்நிலை இருக்கனும்... வீட்டுல இருக்கிற பொம்பளைங்க அவங்க மனச புரிஞ்சிகிட்டு அவங்கள சந்தோஷமா வச்சிக்கனும்... இல்லாட்டி அவங்களால் வெளியில நிம்மதியா வேலைப் பார்க்க முடியாதுன்னு சொல்வாங்க.... இப்போ அவருக்கு என்னால இந்த வீட்டுல நிம்மதி இல்ல... அவங்க உங்க கூட உக்கார்ந்து பேசறதோ, சாப்பிடறதோ இல்லை..... எல்லாத்துக்கும் நான் தான் காரணம்... அதனால நான் என் வீட்டுக்கு போயிடறேன்" என்றாள் விழிகளில் நீர் கோர்த்து இருக்க....
அவளின் கலங்கிய முகத்தைப் பார்த்த ஸ்ரீக்கு மனம் கனக்க...
"திவ்யா, வெளியில் போற ஆம்பளைங்களுக்கு மட்டும் இல்லை... வேலைக்குப் போற பொம்பளைங்களுக்கும் நீ சொல்றது சரி... வீட்டில் அவங்களுக்கு உகந்த சூழ்நிலை இல்லைன்னா எல்லாருக்கும் கஷ்டம் தான்... அது ஆண்களுக்கும் பொருந்தும், பெண்களுக்கும் பொருந்தும்... ஆனால் நீ நினைக்கிற மாதிரி எப்பவும் அர்ஜூன் நிறைய நேரம் வீட்டுல இருக்க மாட்டான்... அவனுக்கு அவங்க தாத்தாவை போல் எப்பவும் ஏதாவது செஞ்சுக்கிட்டே இருக்கனும்.... அவன் பிஸியா இல்லன்னா தான் அவனுக்குப் பிரச்சனை... அதனால அவன் இப்போ இப்படி இருக்கிறதுக்கு நீ தான் காரணம்னு நினைச்சிக்காத, என்ன?" என்றார்....
ஆனாலும் திவ்யாவின் மனதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை... திவ்யாவின் தந்தை சிவசுப்ரமணியத்திற்கு வீட்டில் எப்பொழுதும் ஒரு அமைதியான சூழ்நிலை இருந்தே ஆக வேண்டும்...
என்ன தான் கலாவும் வெளியில் வேலைப் பார்த்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினாலும் தன் அசதியைக் காட்டாது தன் கணவனுக்காகப் பொறுமையைக் கடைப்பிடிப்பார்... இன்னும் சில ஆண்கள் அப்படித் தான் இருக்கிறார்கள்...
அவர்களையே பார்த்து வளர்ந்து வந்தவளுக்கு இன்னும் அர்ஜூன் வீட்டில் அதிக நேரம் செலவிடாதது தன்னால் தான் என்று எண்ணி தன்னையே வருத்திக் கொண்டாள்..
ஆனால் திருமணம் ஆன மறு நாளும் அதற்கு அடுத்து வந்த அவன் மும்பையில் கழித்த சில நாட்களும் அவனுக்கும் அதே போன்று எண்ணங்கள் இருந்தது என்னவோ உண்மை தான்...
ஆனால் இப்பொழுது அவன் வெளியில் அதிக நேரம் தங்குவதற்குக் காரணம் வழக்கம் போல் அவனின் தொழிற்களும் வேலை பழுவும் தான்...
திவ்யாவிற்குத் தான் அது புரியவில்லை... புரியவைப்பது அவள் கணவனின் கடமை அல்லவா????
அன்று மஹாவின் கல்லூரியில் அவர்களின் துறைகளுக்குள் நடக்கும் ஒரு சின்ன விழா....
அனைத்துத் துறை மாணவர்களுக்கும் இடையில் விளையாட்டுப் போட்டிகள், நடன நாடக போட்டிகள் மற்றும் இன்னும் சில திறமை சார்ந்த போட்டிகளும் நடக்கும் நாள்...
அன்று முதன் முறையாக மஹாவிற்குப் புடவை அணிந்து செல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது....
அதுவும் திவ்யா வீட்டிற்கு வந்ததில் இருந்து அவளைப் புடவையில் பார்த்தவள், நம்மை விடச் சின்னப் பெண் எத்தனை அழகாகப் புடவை உடுத்துகிறார் என்று நினைத்தவள் தானும் அணிய வேண்டும் என்று சொல்ல, திவ்யா அவளுக்கு உதவி செய்வதாகச் சொன்னாள்....
மஹாவிற்குக் காலையில் எழுந்ததில் இருந்து "புடவை கட்டினால் தனக்கு நன்றாக இருக்குமா? நடக்கும் பொழுது தடுத்து கீழே விழுந்து விடுவோமா? உடம்பை நன்றாக மூடியிருக்குமா?" என்று ஒரே கவலை....
ஏனெனில் அவளுக்கு இப்பொழுது கொஞ்ச நாட்களாக அவளின் சீனியர் கோகுலின் எண்ணம் புரிய ஆரம்பித்து இருந்தது....
அன்று ராகிங் நாளன்று பேசியவன் தான்... அதற்குப் பிறகு இத்தனை நாளும் அவளைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறானே ஒழிய அவளிடம் பேச முயற்சிக்கவில்லை....
ஆனால் அவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவனிடம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உணர்த்திக் கொண்டே இருந்தது.
முதல் நாள் மஹாவைப் பார்த்த கோகுல் அவளின் அழகில் மயங்கி இருந்தாலும் அதற்குப் பின் அவள் அருணுடன் வர துவங்க அருணின் பணக்காரத் தோரணையிலும், அவன் ஓட்டி வந்த காரில் இருந்தும் அவர்களின் வசதி புரிபட விசாரிக்க ஆரம்பித்தவன், அர்ஜூனைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்த விநாடியே சப்த நாடியும் அடங்கி ஒடுங்க அமைதியாகி போனான்...
அர்ஜூனின் செல்வாக்கு இந்தியா முழுவதும் பிரபலம்... தொழில்வட்டாரத்தில் அவனை எதிர்ப்பவர்களை அவர்களுக்கே தெரியாமல் அழிப்பதில் கில்லாடி....
அவனின் ஒரே விரல் அசைவில் அரசியலே அடியோடு மாறக்கூடும் என்பதனை அறிந்திருந்த அரசியல்வாதிகளுக்குள் அவனின் அதிகாரத்தை நினைத்து எத்தனை பயம்?
அவனை அணுகுவது சிங்கத்தின் குகைக்குள் தனித்துச் செல்வது போல் என்று அவனைப் பற்றிப் பல விதமாகக் கேள்விப் பட்டவன் இருந்தும் மஹாவின் மேல் படிந்திருந்த தன் மனதை அகற்ற முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் காய் நகர்த்த வேண்டும் என்று முடிவு செய்தான்.
அதன் படி அதிரடியாக மஹாவை நெருங்க முயற்சிக்காமல் அவளைத் தன் கண்காணிப்பிலேயே வைத்திருந்தான்....
சிங்கத்தின் பாதுகாப்பில் இருந்த புள்ளி மானை சிங்கமும் அறியாமல் புள்ளி மானும் அறியாமல் வேட்டையாடும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான் அந்தக் குள்ள நரி....
ஒரு வழியாக மஹாவிற்குப் புடவைக் கட்டி முடித்த திவ்யா அதற்கேற்றார் போல் சடைப் பின்னி, மல்லிகைச் சரத்தை சூட்டியவள்,
"மஹா அண்ணி... என்னமோ உங்கள பொண்ணு பார்க்க வராங்க போல் இருக்கு உங்கள பார்த்தா... ஒரு வேளை மாப்பிள்ளை யாராவது வந்தா உடனே உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட்டிட்டு போய்டுவாங்க" என்று வெள்ளந்தியாகச் சிரித்தவாறே சொல்ல,
அவளின் வெள்ளை மனம் பார்த்த மஹாவிற்கு "ஏன் அண்ணனுக்கு இவங்களைப் பிடிக்கவில்லை? இவங்கள மாதிரி குழந்தை தனம் உள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்தக் காலத்தில்?" என்றே தோன்றியது....
அவளின் யோசனையைப் பார்த்த திவ்யா...
"அண்ணி... இப்பவே கணவு காண ஆரம்பித்துவிட்டீர்களா?" என்ற கேட்க,
சட்டென்று வினோத்தின் முகம் மஹாவின் கண் முன்னே தோன்றியது...
ஒரே ஒரு முறை தான் அவள் அவனைப் பார்த்திருந்தது...
அதன் பின் அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை.... இருந்தும் அவனின் முகம் கல்வெட்டு போல் அவளின் பூ மனதில் பதிந்திருந்தது....
அவனின் நினைவும் திவ்யாவின் பேச்சையும் கேட்டவளுக்கு நாணமும் சேர்ந்து கொள்ள, "போங்க அண்ணி" என்றவள் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டவள்..
"கடவுளே, நான் பத்திரமா இந்தப் புடவையை இப்போ கட்டியிருக்கிற மாதிரியே திரும்பி வீட்டிற்கு வந்து சேர வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள்....
கீழே ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த ஸ்ரீயும் பாலாவும் காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க, பெற்றவர்களின் கண்கள் ஆசையுடன் தழுவியது தங்கள் இளவரசியின் அழகிய தோற்றத்தை...
பெருமை வழியும் பார்வை பார்த்திருந்தவர்களைக் கண்ட மஹாவிற்கு வெட்கம் வர புடவையை அள்ளி பிடித்தவள் தன் அன்னையை நோக்கி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.....
அரக்கு நிறத்தில் நெய்யப்பட்ட சிறிய சரிகை போடப்பட்ட புடவையை அணிந்து சொர்ண விக்கிரகத்தைப் போல் இருந்த அவர்களின் செல்ல மகள் புடவையில் அத்தனை பாந்தமாக இருந்தாள்...
அடர்ந்த வண்ண புடவை அவளது சந்தன நிற மேனியில் ஒட்டி இருக்கப் பளிங்கு கல்லில் செய்த தேகம் போல் ஓவிய வடிவத்தில் இருந்தவளின் லட்ஷணம் பெற்றோராய் அவர்களின் உள்ளத்தைப் பூரிக்கச் செய்தது...
ஸ்ரீயை அணைத்த படி நின்று இருந்தவளை தன் அறையில் இருந்து வெளி வந்த அருண் பார்க்க, பார்த்தவனிற்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை...
எப்பொழுதும் டாப்ஸ், ஜீன்ஸ் என்று அணிந்து வலம் வரும் தங்கையை முதன் முதலில் புடவையில் பார்க்கவும் அவளின் அழகு பன் மடங்காக அதிகரித்ததாகவே தோன்றியது அவனுக்கு...
"மாம், யாரு மாம் இவங்க? செம்மையாக இருக்காங்க?" என்று அழகாய் சிரிக்க...
"டேய் தங்கையை ஸைட் அடிப்பவன் உலகத்திலேயே நீ ஒருத்தன் தாண்டா" என்று ஸ்ரீ கிண்டலடிக்க, அங்கே கலகலப்புக் கூடியது....
"யூ லுக் வெரி ப்ரெட்டி ப்ரின்ஸஸ் [You look very pretty princess]" என்று கன்னத்தில் தட்டியபடியே அருண் கூற வெட்கத்தில் அவள் தலை குனிய,
"அச்சச்சோ இப்படி வெட்கம் எல்லாம் படாதம்மா.... காலேஜில் பசங்க தாங்க மாட்டாங்க" என்று மேலும் கிண்டல் அடிக்க முகம் சிவந்தவள் ஓடிப் போய்க் காரில் ஏறினாள்.
வழக்கம் போல் அருண் கல்லூரியில் அவளை இறக்கி விடத் தனியாக நடந்து வந்தவள் தன் தோழிகளைப் பார்த்து வேக அடியெடுத்து வைக்க...
சொல்லி வைத்தார் போல் எங்கிருந்தோ பைக்கில் வந்த அந்த மாணவன் அவள் மேல் இடிப்பது போல் வர சட்டென்று நகர்ந்தவள் புடவை தடுக்கி கீழே விழுந்தாள்....
முதல் முறையாகத் தன் கனவுக் கன்னியை புடவையில் பார்த்த கோகுல் அவளின் அழகில் கிறங்கியவன் தன் நண்பனை அழைத்து அவள் கீழே விழ என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யச் சொன்னான்...
மனம் முழுவதும் அழுக்கு நிறைந்து இருந்த காமுகனுக்கு இதனை விட வேறு என்ன எண்ணங்கள் வரும்???
அவன் நினைத்தது போல் மஹாவும் கீழே விழ அவளின் தோழிகள் அவளை நோக்கி ஓடி வருவதற்குள் அவள் விழுந்திருந்த இடத்தை அடைந்த கோகுல் அவளுக்கு முன் தன் கரத்தை நீட்டினான்....
கீழே விழுந்த அதிர்ச்சியில் புடவை எங்கு விலகி இருக்குமோ என்ற கலக்கத்தில் இருந்தவளுக்குக் கை நீட்டியவன் யாரென்று கூடப் பார்க்கத் தோன்றாமல் அவனின் கையைப் பிடித்து எழுந்தவளை நெருங்கியவன் ஆறுதல் சொல்வது போல் அவளின் இடைப் பிடிக்க, சட்டென்று சுதாரித்தவள் அவனைத் தள்ளி விட்டாள்....
"ஹே.. மஹா.. ரிலாக்ஸ்... நீ மேலும் விழுந்து விடாம இருக்கத் தான் நான் உன்னைப் பிடிச்சது" என்று கூற,
அவனின் முகம் என்னவோ அவள் விழுந்ததை நினைத்துக் கலங்கியது போல் தான் தெரிந்தது....
ஆனால் அவனின் கண்களில் ஏறிய பளபளப்பும், அதில் தெரிந்த அந்த வித்தியாசமான மாற்றத்தையும் கண்டவள் அருவருப்புடன் முகம் சுளித்து விருட்டென்று தன் தோழிகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்....
இவ்வளவு நாட்கள் தூரத்தில் இருந்து அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு இத்தனை நெருக்கத்துடன், அதுவும் அவளின் இடையை முதன் முறையாகப் பற்றியிருந்தது அவனின் அடங்காத மோகத்தை இன்னும் தூண்டிவிட்டது...
கண்களில் இருந்து அவள் மறையும் வரை அவளின் பின்னழகை ரசித்து வேடனின் வேட்கையோடு பார்த்திருந்தவன் அவளை அடையும் நாளை எண்ணி கனவு காண ஆரம்பித்தான்.
ஆனால் அந்த நாள் எத்தனை விதமான ஆபத்தான அசந்தர்ப்பமான மணித் துளிகளை எத்தனை பேருக்குக் கொண்டு வரப் போகிறது என்பதை அவன் அறியவில்லை.... அவனின் காமக் கண்கள் அதனை மறைந்திருந்தது...
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.... அதிசயமாக வீட்டில் இருந்த அனைவரும் ஒன்றாக ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்...
எப்பொழுதும் தொழிற்களிலேயே தன்னை மூழ்கடித்துக் கொண்டு இருக்கும் அர்ஜூனிற்குச் சனி ஞாயிறு என்றெல்லாம் கிடையாது...
அதே போல் தான் அருணும்...
மற்ற நாட்களில் கல்லூரிக்கு சென்று விடுபவன் விடுமுறை நாட்களில் அர்ஜூனிற்கு உதவி செய்வதற்காகவும், தொழிலை கற்று கொள்வதற்காகவும் அர்ஜூனுடனோ அல்லது தன் தந்தையுடனோ சென்று விடுவான்...
ஆக இன்று போல் அனைவரும் ஒன்று கூடி அமர்ந்திருப்பது எப்பொழுதாவது நடைபெறும் ஒரு எதிர்பாராத ஆச்சரியம்...
தந்தையுடனும் அருணுடனும் தீவிரமாக எதனைப் பற்றியோ ஆலோசித்துக் கொண்டு இருந்த அர்ஜூனை ஸ்ரீயின் தொண்டை கனைப்பு அவரை நோக்கி திசை திருப்பியது...
ஏனெனில் மும்பையில் இருந்து அர்ஜூன் திரும்பி வந்து இன்றோடு கிட்டத்தட்ட இருவாரங்களுக்கு மேல் ஆகியிருந்தது...
அவன் திரும்பி வந்ததில் இருந்து தன் திருமணத்தைப் பற்றியோ அல்லது திவ்யாவை அவள் வீட்டிற்கு அனுப்புவதைப் பற்றியோ பேசி இருக்கவில்லை...
ஆதலால் இது போல் இனி ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று தோன்ற...
"அர்ஜூன்... நானும் அப்பாவும் ஒரு முடிவு எடுத்திருக்கிறோம்பா... உன் கல்யாணம் தான் யாருக்கும் தெரியாம நடந்திடுச்சு.... பட் இன்னும் நம்ம சொந்தக்காரர்களுக்கு எல்லாம் நாம தெரியப் படுத்தல.... அப்புறம் திவ்யாவ யாருக்கும் தெரியாது... அதனால ஒரு கெட் டு கெதர் மாதிரி அரேன்ச் பண்ணி உங்க கல்யாணத்தை நம்ம சொந்தக்காரங்களுக்கு அறிவிக்கலாம்னு இருக்கோம்... உனக்கு எப்போ ஒத்து வரும்னு சொல்லுப்பா" என்றார்....
இந்த விஷயம் யாருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்குமோ இல்லையோ ஆனால் திவ்யாவிற்குப் பேரதிர்ச்சியாக இருந்தது...
தன் கணவன் அவளுடன் அதே வீட்டில் எப்பொழுதும் இருக்கிறானோ இல்லையோ ஆனால் இந்த இரு வாரங்களாக அவன் அமைதியாக இருக்கிறான்... அதுவே அந்தச் சின்னப் பெண்ணிற்குப் பெருத்த நிம்மதி...
இதில் இது வேறையா என்றே இருந்தது அவளுக்கு...
தன் மாமியார் பேசி முடித்ததும் சட்டென்று தன்னை அறியாமல் அர்ஜுனைத் திரும்பி பார்க்க, அவனும் அதே சமயம் அவளைப் பார்க்க சரேலென்று தலையைக் குனிந்துக் கொண்டாள்.
"எல்லாத்தையும் செய்து விட்டு ஆவுனா தலைய குனிஞ்சுக்கறா" என்று நினைத்தவன்,
"மாம்... வாட் டு யு மீன் [Mom.. What do you mean?] நீங்க என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சு தான் பேசுறீங்களா? இப்போ இது தேவையா? என்றான் அழுத்தமான குரலில்...
கேள்வி என்னவோ தன் அன்னையிடம் தான்... ஆனால் பார்வை இன்னும் தரையிலேயே புதைந்து விடும் அளவிற்குத் தலை கவிழ்ந்து இருந்த தன் மனையாளின் மீது தான் இருந்தது....
"அர்ஜூன்... யெஸ்.. இப்போ இது தேவை தான்.... கிட்ட தட்ட ஒன்றறை மாசம் ஆகப் போகுது உங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு.... நாம கண்டிப்பா உங்க கல்யாணத்தைப் பற்றி அனௌன்ஸ் பண்ணியே ஆகனும்.... இல்லைன்னா திவ்யாவ வெளியே அழைச்சுட்டு போகும் போது பார்க்கிறவங்க யாருக்கும் அவ யாருன்னு தெரியாது.... அது எப்பொழுதும் ஒரு கேள்வியாவே இருக்கும்... அவள எல்லோர்கிட்டையும் முறைப் படி அறிமுகப் படுத்தறது தான் சரி" என்றார் தன் மகனை விட அதிகாரமான குரலில்...
பின், ருத்ரமூர்த்தியின் பேரனுக்கே இத்தனை அதிகாரமும் கம்பீரமும் இருந்தால் அவரின் மகளிற்கு எத்தனை ஆளுமை இருக்கும்...
அவரின் கண்களைக் கூர்ந்து பார்த்தவன் சில நிமிடங்கள் மௌனமாக இருக்க, அந்த அறையில் தன் மாமியாரின் அருகில் அமர்ந்திருந்த திவ்யாவிற்கு ஒவ்வொரு நொடியும் ஏதோ ஆழ்கடலில் மூழ்கடித்துக் கொண்டு இருப்பது போல் மூச்சு திணறியது...
அவளைத் திரும்பியும் பார்க்காதவன் என்ன நினைத்தானோ வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தான்...
"நோ மாம்... நான் டைவர்ஸ்க்கு லாயர் கூட டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கிறேன்.... அதனால ப்ளீஸ் நீங்க இந்த மாதிரி அவசர முடிவு எதுவும் இனிமேலாவது எடுக்காதீங்க" என்று திவ்யாவின் தலையில் மட்டும் அல்ல, அங்குக் கூடியிருந்த அனைவரின் தலையிலும் அலுங்காமல் குலுங்காமல் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான்....
"அவளை அவளுக்குத் தெரியாமல் பார்க்கறதும், தனியா படுக்கை அறையில் அவளை நினைத்துக் கனவு கண்டுக்கிட்டும் இருந்துட்டு இப்போ இப்படிப் பேசுனா எப்படி அர்ஜூன்?" என்று மனசாட்சி கேள்விக் கேட்க,
"அது எப்படி? இவங்களே முடிவு பண்ணி கல்யாணத்தை நடத்திடுவாங்களாம்.... அத நாம எதுவும் சொல்லாம ஏத்துக்கனுமாம்... இதுல இப்போ எல்லோருக்கும் அனௌன்ஸ் வேற பண்ணனுமாம்.... இது எப்படி இருக்கு?"
என்று அவனுடைய ஈகோ அவன் மனசாட்சிக்கு எதிராகப் பதில் கொடுக்க,
அவ்வளவு பெரிய இடியை எல்லோர் தலையிலும் போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்த மகனைப் பார்க்க ஸ்ரீக்கே கோபம் கோபமாக வந்தது என்றால் திவ்யாவிற்கோ இதயமே நின்று விடும் போல இருந்தது.
தன் தனிப்பட்ட வாழ்க்கையில் தன் அன்னையின் ஆளுமை அவரின் அதிகாரம் அர்ஜூனிற்குப் பிடிக்கவில்லை...
ஆனால் அதற்காக அவரைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு தன் ஆழ் மனதை அறியாமலே தன் மனம் கவர்ந்தவளின் மலர் போன்ற மனதை பொசுக்கிக் கொண்டு இருந்தான்....
மலரினும் மெல்லியவளின் மிருதுவான மனதை கருக்கிக் கொண்டு இருந்தான் அவளின் கணவன்...
இத்தனை நாட்கள் அவன் அரவம் எதுவும் இல்லாமல் திருமணத்தைப் பற்றி விவாதிக்காமல் இருக்கச் சிறிதே தெளிந்து இருந்தவளுக்கு அவனின் விவாகரத்து என்ற வார்த்தை மீண்டும் உணர்த்தியது...
நிலை இல்லாத தன் இல்லற வாழ்க்கையின் போக்கை...
ஹாலில் இருந்த ஒருவரையும் பார்க்காமல் சட்டென்று எழுந்தவள் விடுவிடுவென்று மாடியேறி தன் அறைக்குள் நுழைந்தவள் சத்தம் வராமல் வாயை மூடிக் கொண்டு கதறினாள்....
அவள் அவ்வாறு செல்லவும் வலிக்க வலிக்கத் தன் மகன் தன் மனையாளை வார்த்தைகளால் அடிப்பதை பார்த்த ஸ்ரீ,
"அர்ஜூன்... நீ என்ன பேசுறேன்னு தெரியுதா? வேணும்னா வச்சுக்கிறதுக்கும் வேண்டாம்னா வெட்டிவிடறதுக்கும் கல்யாணம் என்கிறது விளையாட்டு இல்ல அர்ஜூன்... நீ சொல்றது கொஞ்சம் கூட மனதாபிமானமே இல்லாத ஒரு விஷயம்... ஒரு சின்னப் பொண்ணுக்கு நாம செய்ற பாவம்... உனக்கும் ஒரு தங்கச்சி இருக்கு.. அவளுக்கு இந்த மாதிரி நிலைமை வந்தா என்ன பண்ணுவ?" என்றார் முகம் சிவக்க ஆத்திரத்தில்...
"மாம் இன்னும் பழைய காலத்து அம்மா மாதிரி பேசாதீங்க.... மாப்பிள்ளை ஓடிப் போய்ட்டா கல்யாணத்திற்கு வந்த யாரோ ஒருத்தன என் தங்கைக்கு நான் கல்யாணம் பண்ண அவ ஒன்னும் சீப் இல்ல.."
வார்த்தைகளில் மேலும் விஷத்தை கக்கினான் அவர் மகன்...
ஆனால் நல்ல வேளை அதற்குள் அவன் மனைவி அவளின் அறையை அடைந்து கதவை சாத்தியிருந்தாள்...
"அர்ஜூன்... வார்த்தைய அளந்துப் பேசுப்பா... திவ்யா மட்டும் என்ன சீப்பா? உங்க அம்மா அவ அம்மாவோட க்ளோஸ் ஃப்ரெண்டுங்கிற ஒரே காரணத்தில் தான் அவள் உன் கையால தாலி வாங்க சம்மதிச்சிருக்கா.... அம்மா சொல்லலை, அப்படியும் அவள் அந்தப் பையன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னவுடனே தற்கொலை தான் பண்ண போயிருக்கா.... யாராவது கல்யாணத்திற்கு வந்தவன் நம்மளை கல்யாணம் பண்ணிக்குவான்னு அவ மணமேடையிலையே உட்கார்ந்து இருக்கலை" என்று தன் கோபத்தை அடக்கியவாறே கூறினார் பாலா....
"நோ டாட்... இதுக்கு மேலே என்னைய கம்பெல் பண்ணாதீங்க" என்று கூறியவன் விருட்டென்று எழுந்து இரண்டு இரண்டு படிகளாகத் தாவி தன் அறைக்குச் சென்று படீரென்று வேகமாகக் கதவை அடைக்க, அந்தச் சத்தம் மூடியிருந்த கதவின் வழியே திவ்யாவிற்கு நன்றாகக் கேட்டது....
"இவ்வளவு கோபம் என் மேலே ஏன்? அப்படி நான் என்ன பாவம் செஞ்சேன்?" என்று அவள் மௌனமாக அழுது கரைய, அங்கே அர்ஜூனோ குறுக்கும் நெடுக்குமாகத் தன் அறைய அளக்க, அவன் மனசாட்சியோ மீண்டும் மீண்டும் அவனைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டது....
"அர்ஜூன்... நீ அந்தப் பொண்ணோட ஃபோட்டோவை தினம் ஒரு தடவையாவது பார்த்து ரசிக்கிற... வெளியில போகும் போழுது அவளுக்கே தெரியாமல் அவளைக் கண்களாலேயே முழுங்கிவிடுவது போல் பார்க்கிற.... அப்போ அதற்கெல்லாம் என்ன அர்த்தம்? எங்கிருந்துடா வந்தாங்க லாயர்? எப்போ அவங்ககிட்ட நீ டைவர்ஸ் பற்றிப் பேசின? எனவும்,
இரு கரங்களாலும் தன் தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவனின் இதயத்திற்கும் மூளைக்கும் அங்கு ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டு இருந்தது...
திவ்யாவை அவனுக்குப் பிடித்திருந்தது... அவளை அவளுக்குத் தெரியாமல் ரசிக்கப் பிடித்து இருந்தது... தன் மனதில் அவளின் உருவம் பதிந்து போனதையும் அவன் உணர்ந்தே இருந்தான்...
ஆனால் இன்னும் ஏன் என் மனது அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது?
"மாமை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அவளைப் பழி வாங்குகிறேனா???"
ஏற்கனவே குழம்பி தத்தளித்து தடுமாறி இருந்த அவனது மனது இன்று அவன் அன்னையின் பேச்சில் மேலும் குழம்பியது.
ஒரு முடிவும் எடுக்க முடியாமல் மனக்குழப்பத்தில் திகைத்து போய் அப்படியே கட்டிலில் அமர்ந்து தன் தலையைப் பிடித்து இருந்தவன் வெகு நேரம் யோசித்தும் ஒரு முடிவு எடுக்க முடியாமல தடுமாறினான்...
எந்த நிலையிலும் நிதானமாகவும் அதே சமயம் துரிதமாகவும், சில நேரங்களில் தயவு தாட்சண்யம் ஏதுமின்றியும், பதட்டங்கள் ஏதுமின்றியும் சர்வ சாதாரணமாகவே முடிவுகளைத் தீர்மானித்து இருந்தவன் இன்று சங்கடத்தில் அகப்பட்டது போல் தத்தளித்து இருந்தான்...
புத்திக்கும் மனதிற்கும் இடையில் கிடந்து தவித்தது அவனது இதயம்....
மறுநாள் கீழே இறங்கியவனுக்குத் தன் அன்னை யாரிடமோ தொலை பேசியில் பேசியது கேட்டது...
"ஆமாம் வனிதா... இது ஒரு சின்னக் கெட் டூ கெதர் தான்... நம்ம குடும்பத்தில் இருப்பவர்களை மட்டும் தான் இன்வைட் பண்றேன்.... கண்டிப்பா குடும்பத்தோட வந்துடனும்... இன்னும் இடம் முடிவு ஆகலை.... முடிவு செஞ்சோனே மறுபடியும் கூப்பிடுறேன்" என்றார்....
அர்ஜூனுக்கோ என்ன பேசுவதென்றே தெரியவில்லை....
தான் அவ்வளவு சொல்லியும் இவர் தன்னிஷ்டம் போல் தான் செய்கிறார் என்று நினைத்தவன் எதுவும் பேசாமல் யோசனையுடன் டைனிங் டேபிளில் அமர, அவனைப் பார்த்த திவ்யா வேகமாக ஸ்ரீயிடம் சென்றவள் அர்ஜூன் சாப்பிட அமர்ந்திருப்பதைத் தெரிவித்தாள்....
"திவ்யா... நான் பிஸியா இருக்கேன்.... நீயே அவனுக்குச் சாப்பாடு எடுத்து வை" என்று அர்ஜூனைப் பார்த்தவாறே ஸ்ரீ சொல்ல...
அதனைக் கேட்ட அர்ஜுன் அடங்காத ஆத்திரத்தில் விருட்டென்று எழுந்தான்....
அங்கு அவனுக்கும் அவன் அன்னைக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு போராட்டமே நடந்து கொண்டு இருந்தது...
அவனின் கோபத்தைக் கண்ட திவ்யாவிற்கு அவன் உணவு வேறு அருந்தாமல் வெளியே செல்ல எத்தனிப்பதைக் கண்டு மனம் பதற தன் அச்சத்தை ஒதுக்கி வைத்து அவன் அருகில் வந்தாள்...
இது வரை அவன் வீட்டினுள் நுழையும் பொழுது அவள் சமையல் அறையில் பதுங்கி கொள்வாள்...
அவன் ஹாலில் அமர்ந்திருந்தாலோ அல்லது வீட்டில் வேறு எங்கும் இருந்தாலோ மஹாவின் அறையே கதி என்று கிடப்பாள்...
ஆனால் இன்று தன் கணவனின் பசி அறிந்து தன் பயத்தைத் தன்னிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் அகற்றி வைத்தவள் தன்னால் முடிந்த அளவு தைரியத்தைத் திரட்டி முதல் முறையாக அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து..
"உ... உங்களுக்கு என்ன விருப்பமோ அதை நீங்க செய்யுங்க.... நான் உங்க எந்த முடிவுலையும் தலையிட மாட்டேன்.... ஆனால் கோபத்தைச் சாப்பாட்டில் காட்டாதீங்க... உ... உட்காருங்க" பதட்டத்துடன் தடுமாறியவாறே கூறியவள்...
அவனுக்குத் தட்டையும் எடுத்து வைத்து காலை உணவான இட்லியையும் தக்காளி சட்னியையும் எடுத்து வைத்தாள்.....
அவன் உள்ளம் முழுவதும் தன் அன்னையின் அலட்சியத்தால் அடி பட்டுச் சினம் சூழ்ந்து இருந்தாலும் தன் வாழ்க்கையில் முதல் தரம் தன் மனைவி தன்னிடம் யாசிப்பது போல் கேட்டிருந்ததைக் கண்டவன் தன் கூரிய பார்வையை அவளை விட்டு ஒரு நொடி கூட அகற்றாமல் அவளின் சொற்களுக்கு அடி பணிந்தான்...
தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த தன் கணவன் தன் பேச்சிற்கு மறு பேச்சுப் பேசாமல் மௌனமாக உணவு அருந்த அமர திவ்யாவிற்குத் தான் அப்பாடி என்றிருந்தது....
அவன் உண்ட பின் கை கழுவியவன் வழக்கம் போல் அவளுக்குத் தெரியாமல் அவளைத் திரும்பி பார்க்க, அதே சமயம் அவன் தட்டை எடுத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தவள் எதேச்சையாக அவனைப் பார்க்க கண்ணும் கண்ணும் நோக்கியது....
அவனின் அம்பு போன்ற பார்வையின் கூர்மையில் பெரிதும் நெளிந்தவளின் உடலெங்கும் அச்சம் ஆட் கொண்டது....
அவனது அழுத்தமான பார்வை அவளுக்கு எதனையோ சொல்லாமல் சொல்லியது...
அதன் விளைவாக அவளது சிந்தனை ஓட்டமும் தடைப் பட்டது...
அதன் பலன்?? அவன் பார்வையின் அர்த்தம் அவளுக்கு இன்றும் விளங்கவில்லை...
தன் கணவனின் பெயரைக் கேட்டாலே மனம் பதற உடலில் உதறல் எடுக்க எழுந்து நிற்பவளுக்கு அவனின் ஆழ்ந்த பார்வையின் அர்த்தம் எங்கனம் புரியும்....
ஆனால் அவன் இன்னும் அவள் மீது படிந்து இருந்த விழிகளின் போக்கை மாற்றவில்லை... அதில் விஷமமே நிறைந்து இருந்தது...
தன் கணவனின் விபரீத பார்வையில் அவள் இதயம் படு வேகத்தில் அடித்துக் கொள்ள உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாததால் பெரிதும் சங்கடத்தில் அகப்பட்டுத் தத்தளிக்கவே செய்தவள் மித மிஞ்சிய கட்டுப்படுத்த முடியாத சங்கடத்தால் அகப்பட்டுத் தன் பார்வையை அவனை விட்டு அகற்றினாள்..
தன் மனையாளின் உணர்வுகளை அவளின் மனதிலோடிய எண்ணங்களைப் புரிந்துக் கொன்டவன் போல் கண்களில் வழியும் சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு அகன்றான்...
இவற்றை எல்லாம் தொலைப் பேசியில் பேசியபடியே பார்த்துக் கொண்டு இருந்த ஸ்ரீ...
"அர்ஜூன்... உன்னைப் பெத்தவ டா நான்.... எனக்குத் தெரியாதா உனக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காதுன்னு" என்று நினைத்தவர் தன்னுடைய பட்டியலில் மீதம் இருந்தவர்களை அழைக்க ஆரம்பித்தார்.
தொடரும்..