அத்தியாயம் 10
வேறு ஏதாவது காரணம் சொல்லுவான் என்று எதிர்பார்த்திருந்த அகிலிற்கு ஹர்ஷாவின் இந்தப் பதில் பேரதிர்ச்சியைக் கொடுத்து சப்த நாடியையும் ஒடுக்கக் கனிகா தன்னை விட்டு வெகு தூரம் போனது போல் இருந்தது...
ஆனாலும் அவளை அத்தனை சுலபத்தில் இழக்க விரும்பாதவனாக வெகுண்டெழுந்தவன் "வாட்?" என்றான்.
"யெஸ், ஐ லவ் கனி, இஸ் தேர் எனி ப்ராப்ளம்? [Yes, I love Kani...Is there any problem?] " என்று கொஞ்சம் கூட அசராமல் மீண்டும் சொன்ன ஹர்ஷாவைப் பார்த்த அகிலிற்கு மூளையே குழம்பிப் போனது.
"உ....உங்களுக்கு எப்படிக் கனியை தெரியும்......" என்று தடுமாறியவாறே அகில் கேட்க,
அவன் தடுமாற்றத்தை கவனித்தவன்,
"நான் அவளோட காலேஜில் தான் படிக்கிறேன்" என்றான்...
"காலேஜில் என்றால், அவள் க்ளாஸ் மேட்டா?"
"என்னைப் பார்த்தால் அவ்வளவு சின்னவனாகவா தெரியுது..... ஐ ஆம் டூயிங் ஃபைனல் இயர் MCA " என்றான் சிரித்த முகத்துடன்.
"கிட்டதட்ட தன் வயதுடையவன் தான்.... ஆனால் இவனுக்கும் கனிகாவிற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாதே....இவனைப் பார்த்தால் கோடீஸ்வர வீட்டு பிள்ளைப் போல் தெரிகிறது...கனிகாவின் நிலைமை நமக்கு நன்றாகத் தெரியும்... இது எப்படிச் சாத்தியம்? " என்று குழம்ப,
அவன் குழம்பிய முகத்தைப் பார்த்த ஹர்ஷா "அகில், நீங்க ஆச்சரியப்படுறது எனக்குப் புரிகிறது.... பட் ஐ ஆம் இன் லவ் வித் ஹெர்... [But I am in love with her]" என்றான்.
"எப்படி.... உங்களுக்கும் கனிகாவிற்கும் ஒத்து வருமா?" என்று அகில் கலக்கத்துடன் கேட்க ஆனால் மனம் இன்னும் கனிகாவை விட்டுக் கொடுக்க முடியாமல் தடுமாற ....
"ஒய் நாட்? [why not?] " என்றான் திமிராக.....
இதென்ன கேள்விக்குக் கேள்வியே பதிலாக என்று சலித்துக் கொண்ட அகில் "இல்லை உங்களைப் பார்த்தால் ரொம்ப வசதியானவர் போல் தெரிகிறது...... ஆனால் கனிகா அப்படி இல்லை..... பாவம் ஏற்கனவே வாழ்க்கையில் இந்தச் சின்ன வயதிலேயே ரொம்ப அடிபட்டுவிட்டாள்..... இதில் நீங்கள் வேறு அவளிடம் ஆசையைக் காட்டி ஏமாற்றி விடாதீர்கள்...." என்று கூற,
கோபத்தில் முகம் செந்தணலாகச் சிவக்க, இருந்தாலும் அடக்கிக் கொண்டு,
"எதை வச்சு நான் கனியை ஏமாற்றிவிடுவேன் என்று சொல்றீங்க......" என்றான்.
"உங்களுக்கே தெரியும், உங்களை மாதிரி பணக்கார பசங்களுக்கு எத்தனையோ பணக்கார பெண்கள் கிடைப்பார்கள், கனிகா நிச்சயம் உங்களுக்கு ஒத்து வரமாட்டாள்..." என்று பிடிவாதமாகக் கூற,
அவனையே உற்றுப் பார்த்திருந்த ஹர்ஷா சட்டென்று அந்தக் கேள்வியைக் கேட்டான்..
"அகில், ஆர் யூ இன் லவ் வித் கனி? [Akil are you in love with kani?] "
திடுக்கிட்ட அகில், சட்டென்று தன் பார்வையைத் திருப்பித் தன் திடுக்கிடலை மறைக்க..... அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தைக் குறித்துக் கொண்டது ஹர்ஷாவின் மனம்...... ஆக இவன் கனியை விரும்புகிறான்.... ஆனால் அது தெரியாமல் அவள் அத்தான் அத்தான் என்று உருகுகிறாள் என்று மனதிற்குள் கனிகாவை திட்டியவன் அகிலையே பார்க்க,
"இல்லை, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை" என்றான் அகில்..
தொண்டையைச் செருமிக் கொண்ட ஹர்ஷா,
"அகில் என் லைஃபில் நிறையப் பெண்கள் க்ராஸ் பண்ணியிருக்காங்க..மும்பையில் நான் ஸ்கூல் படிக்கும் பொழுதும் சரி.... இங்குச் சென்னையிலும் சரி.... ஈவன் இன் அவர் ஃபேமிலி டூ, பட் [Even in our family too], என் டாட் எப்பவும் ஒன்று சொல்வார்... சில பெண்களைப் பார்க்கும் பொழுது சிநேகமாகச் சிரிக்கணும் என்று தோன்றும்.. சில பெண்களைப் பார்க்கும் பொழுது திரும்பி பார்க்கணும் என்று தோன்றும்.. சில பெண்களைப் பார்க்கும் பொழுது கண்ணடிக்கணும் என்று தோன்றும்....' என்று சிரித்துக் கொண்டவன்,
"சில பெண்களைப் பார்க்கும் பொழுது ஏனோ அருவருப்பாகத் தோன்றும்....அது அவர்களின் உடையோ அல்லது செயல்களோ.. ஆனால் வெகு சில பெண்களைப் பார்க்கும் பொழுது மட்டும் தான் அவர்களை வாழ்நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்... அவர்கள் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று தோன்றும்.. அப்படி ஒரு பெண்ணை நாம் பார்த்து, அதே எண்ணம் அவளுக்கும் நம் மேல் இருந்தது என்றால், அவளைத் தவற விட்டுவிடவே கூடாதென்று சொல்வார்.....அது போல் தான் எனக்குக் கனி....... முதன் முதலாகக் காலேஜிற்கு அவள் வந்த அன்றே என் எதிரில் தோன்றினாள்.. என்னை எந்தப் பெண் பார்த்தாலும் என்னிடம் பேச வேண்டும், பழக வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறார்கள்.."
"ஆனால் கனி அதில் ரொம்ப வித்தியாசமானவள்... கீழே விழுந்திருந்த அவளைத் தூக்கி விட நான் கை நீட்டினாலும், என் கை தன் மேல் படக் கூடாதென்று என்னிடம் இருந்து ஒதுங்கி சென்றவள்.. ஒரு நாள் கோவிலில் நான் கொடுத்த குங்குமத்தை வாங்க கூடாதென்று பிடிவாதமாக மறுக்க, நானாக அவள் நெற்றியில் வைக்க வேண்டியதாக இருந்தது.. அவளிடம் நான் தனியாகப் பேச வேண்டும் என்று கூறியும், அவளுக்காகக் காத்திருப்பேன் என்று தெரிந்தும் என்னை அவாய்ட் பண்ணியவள்.... எப்படி இவளைப் போன்று ஒரு நல்ல பெண்ணை நான் நழுவ விட முடியும்... என்று அவளை முதன் முதலில் பார்த்தேனோ, அன்றே முடிவெடுத்துவிட்டேன்... இவள் எனக்குத் தான்.. எனக்கு மட்டும் தான்.."
"மட்டும்" என்று வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொன்னவன்,
"அதனால் ப்ளீஸ், நீங்கள் அவளைத் தொந்தரவு செய்யாதீர்கள்.. லீவ் அஸ் அலோன் [please leave us alone]" என்றான்.
இப்படிக் கூட இவன் பேசுவானா என்று ஆச்சரியத்தில் உறைந்திருந்த அகில், "உங்க பேரண்ட்ஸ்" என்று இழுக்க,
"இப்பொழுதுதானே சொன்னேன், என் டாட் பெண்களைப் பற்றி என்ன சொன்னார் என்று...எப்படி அவர் கனியை வேண்டாம் என்று சொல்லுவார்... என் டாட் மட்டும் இல்லை.. என் மாம்மும் என் டாட் மாதிரி தான்.. ஸோ, கனிக்கு ஒரு நல்ல லைஃபை என்னால கொடுக்க முடியும்.....அவளை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்வேன்" என்றவன் பெருமிதத்தோடு பார்க்க,
ஆனால் அகிலின் மனமோ இன்னும் ஆறவில்லை..."சரி, அடுத்த ப்ளான் என்ன?" என்க,
நம் லைஃபை பற்றி இவனுக்கென்ன கவலை.. கனியைப் பற்றிச் சொல்லி ஆகிவிட்டது... இதற்கு மேலும் என்ன கேள்வி வேண்டியிருக்கு? என்று ஹர்ஷா எரிச்சல் அடைந்தவன்,
"அடுத்த வருஷம் யூ எஸ் போகிறேன்....பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட் படிக்கறதுக்கு.." என்றான்.
"இப்பொழுது தான் கனிகா ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறாள்....அதற்குள் லவ் எல்லாம் ரொம்ப அதிகம்.... அவள் படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும்... அது மட்டும் இல்லாமல் நீங்கள் வேறு அடுத்த வருடம் யூ எஸ் போகிறேன் என்று சொல்கிறீர்கள்" என்று தயங்க,
"ஏன்? நான் அவளை மறந்து விடுவேன் என்று நினைக்கிறீர்களா?" என்று கடுப்புடன் கேட்டான்...
"இல்லை...." என்று அகில் இழுக்க,
இதற்கு மேல் விளக்க ஒன்றும் இல்லை என்பது போல் பார்த்திருந்தவனிடம் என்ன பேசுவது என்று அகிலிற்கும் புரியவில்லை...முள்ளில் மேல் புடவை விழுந்தது போல் ஆகிவிட்டது....இனி யோசித்துத் தான் செயல் பட வேண்டும்....என்று முடிவெடுத்துக் கொண்ட அகில்,
"சரி ஹர்ஷா... நான் கிளம்புகிறேன்... கனிகாவிடம் சொல்லி விட்டு தான் வந்தேன்.... உங்களைச் சந்திக்கப் போவதை.... என்னை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பாள்....." என்றவன் விடைபெற்று செல்ல,
அவனுக்குத் தன் மேல் இன்னும் நம்பிக்கை வரவில்லை என்று உணர்ந்த ஹர்ஷா, ஸோ வாட்...அவனுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் இட்ஸ் நாட் மை ப்ராப்ளம்..' என்று தோளைக் குலுக்கியவன் கனிகாவிற்கு அழைத்தான்.
அதுவரை என்ன நடந்ததோ!! அகில் அத்தான் அவரைப் பார்த்தார்களா!! என்ன பேசினார்களோ? என்று தவித்துக் கொண்டிருந்தவளின் அலைபேசி அழைக்க அழைப்பது ஹர்ஷா என்றவுடன் பதற்றத்துடன்..."ஹலோ" என்றாள்....
"கனி, இனி நீ உன் அத்தான்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு.." என்று பட்டென்று சொல்ல,
"என்னங்க.... என்னாச்சு... உங்கள் ரெண்டு பேருக்கும் ஒத்து வரலையா?"
"சொன்னதைச் செய்...இனி அத்தான் பொத்தான் என்று அவனுடன் பேசினாலோ அல்லது அவனுடன் உன்னை எங்கேயாவது பார்த்தேனோ அவ்வளவு தான்" என்றவன் டக்கென்று அலைபேசியைத் துண்டிக்கச் செய்ய,
"என்னாச்சு... ஏன் இப்படிக் கோபப்படுகிறார்கள்? அகில் அத்தான் ஏதும் சொல்லிவிட்டார்களா?" என்று பதைபதைத்தவள் அகிலுக்காகக் காத்திருந்தாள்..
ஹர்ஷாவிடம் பேசி விட்டு வெளியில் வந்த அகிலிற்கு மனமெல்லாம் பாரமாக இருப்பது போல் இருந்தது... வீட்டிற்குப் போகப் பிடிக்காமல் கடற்கரைக்கு வந்தவன் பைக்கை நிறுத்திவிட்டு கடலை நோக்கி நடந்தான்......
கடல் நீரில் கால் நனைக்கக் குளிர்ந்த நீர் தன் மனதையும் குளிர்விக்காதா என்று ஏக்கமாக இருந்தது....
எப்படி நடந்தது? சென்னை வந்து ஒரு சில மாதங்களே இருக்க எப்படி ஹர்ஷாவின் மனதில் இந்தளவிற்கு இடம் பிடித்தாள்? அப்படி என்றால் என்னைப் பற்றி அவளுக்கு எந்த அபிப்பிராயமும் இல்லையா? நாம் தான் அத்தை மகள் என்ற உரிமையில் காதலிக்க ஆரம்பித்தோமா..... மனம் கலங்க நேரம் சென்றதே தெரியாமல் நின்றிருந்தவன் இரவு வெகு நேரம் சென்றே வீட்டிற்குத் திரும்பினான்.
வீட்டிற்கு வந்தவன் கனிகாவை பார்த்தும் பார்க்காதது போல் இரவு உணவு அருந்த டைனிங் டேபிளில் அமர அவனுக்கு உணவு எடுத்து வைக்கும் சாக்கில் அவன் அருகில் வந்தவள்,
"அத்தான்....என்னாச்சு அத்தான்.... அவரைப் பார்த்தீர்களா?" என்றாள் படபடப்புடன்...
அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஒன்றும் பேசாமல் தட்டை எடுத்து தானே உணவு பறிமாறப் போக அவன் கையைப் பிடித்துத் தடுத்தவள் இட்லியை அவன் தட்டில் வைத்து சட்னியையும் ஊற்றியவள் அவன் முகத்தையே பார்க்க அவள் தன்னைத் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்தும் அவன் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை.....
கண்கள் கலங்க உதடு கடித்துத் தன் கலக்கத்தை மறைத்தவள், அவன் உண்டு முடிக்கும் வரை கூட இருந்தவள், அவன் மாடிக்கு செல்லவும் பின்னையே செல்ல, திரும்பி பார்த்தவன்,
"எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு... தூங்கணும்... நாம் காலையில் பேசிக் கொள்ளலாம்.." என்றான்.....
ஏனெனில் அவனுக்குத் தெரியும், இப்பொழுது இருக்கும் மன நிலையில் அவளிடம் பேசினால் தன்னையும் அறியாமல் தன் மனதில் உள்ள தன் காதல் வெளிப்பட்டுவிடுமே என்று...
சரி என்று தலை அசைத்தவள் வேறு வழியில்லாமல் தன் அறைக்குச் செல்ல, அவளின் கலங்கிய முகத்தைப் பார்த்த அகிலிற்கு மனம் பாரமாக இருக்க வேகமாகத் தன் அறைக்குச் சென்றவனுக்கு மனம் முழுக்கக் கேள்விகள்.....
இது சரிப்பட்டு வருமா? இதனால் பின்னால் கனிகாவின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது... ஹர்ஷாவின் பெற்றோர் எவ்வாறு இத்திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்கள்? இப்பொழுது தான் முதலாம் வருடம் படிக்கிறாள்... இன்னும் அவர்கள் இருவரும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.... அது வரை ஹர்ஷாவின் மனம் மாறாமல் இருக்குமா? என்று அடுக்கடுக்காகக் கேள்வி கணைகளைத் தனக்குள் தொடுத்துக் கொண்டவன் சட்டென்று நிமிர்ந்தான்.....
ஹர்ஷாவைப் பற்றிய நினைப்பில் இதை எப்படி மறந்தேன்.... கனிகாவை யார் கடத்தி இருப்பார்கள்? சினிமாவில் நடப்பது போல் இருக்கிறதே.... ஹர்ஷா பேசுவதைப் பார்த்தால் நிச்சயம் இது அவர் வேலை இல்லை.,... அப்படி என்றால் யாராக இருக்கும்? மூளை சூடாகும் வரை யோசித்தவனுக்கு எங்குத் திரும்பினாலும் பதில் தான் கிடைக்கவில்லை....
**********************************
அதிகாலையில் எழுந்தவள் எப்படியும் இன்று அகில் அத்தானிடம் பேசி விடவேண்டும் என்று முடிவெடுத்து குளித்து முடித்துக் கீழே இறங்கி வர, அங்கு ஏற்கனவே கிளம்பி அவளுக்காகக் காத்திருந்தான் அகில்.....
"அத்தான், உங்க கூடக் கொஞ்சம் பேசணும்..."
"நீ போய் முதல்ல சாப்பிடு. நானே உன்னைக் காலேஜில் ட்ராப் பண்ணுகிறேன்.."
இனி உன் அகில் அத்தானுடன் பேசுவதையோ இல்லை உங்கள் இருவரையும் சேர்த்து வைத்தோ எங்கேயாவது பார்த்தேனோ அவ்வளவு தான் என்று ஹர்ஷா நேற்று இரவு எச்சரித்து இருந்தது ஞாபகம் வர பதற்றத்துடன்,
"அத்தான், எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம்.... நானே வழக்கம் போல் போகிறேன்..." என்று கூற,
அவளின் பதற்றத்தை கவனித்தவன் அவளை முறைத்தவாறே அவள் அருகில் வந்தவன் "இன்னும் பத்து நிமிஷத்தில் என் கூட வர" என்றவன் தானும் உணவு அருந்த டைனிங் டேபிளுக்குச் செல்ல வேறு வழியில்லாமல் அவனைப் பின் தொடர்ந்தவள் "இன்று ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது" என்பதை உணர்ந்தாள்....
விறுவிறுவென்று அவனுடன் பேசும் ஆர்வத்தில் கொஞ்சமாக உணவை கொறித்து விட்டு கிளம்பியவள் அவன் பைக்கில் ஏற, கல்லூரி வரை அவன் வாயைத் திறக்கவில்லை....
"அத்தான், என் கிட்ட பேச மாட்டீங்களா?" என்று எத்தனையோ முறை கேட்டும் அவன் எதுவும் சொன்னானில்லை....
வேறு வழியில்லாமல் அமைதியாக வந்தவள் கல்லூரியில் இறங்கியதும் அவன் முகத்தைப் பார்க்க,
"கனிகா, நீ சென்னைக்கு வந்தே நாலைந்து மாசங்கள் தான் ஆகுது...ஆனால் அதற்குள் உன்னைக் கடத்தும் அளவிற்கு யார் போய் இருப்பார்கள்?" என்று கேட்க,
"தெரியலை அத்தான்.." என்றவளின் மனம் எல்லாம் ஹர்ஷா தங்களைப் பார்த்து விடுவானோ என்பதிலேயே இருந்தது.....
அவளின் கண்கள் ஹர்ஷாவை தேடுவதைக் கண்டு கொண்டவன் இவளிடம் இதற்கு மேல் பேசுவது பலன் இல்லை...நாமாகத் தான் கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினான்.....
அங்குக் கனிகாவை எதிர்பார்த்து கல்லூரியின் நுழைவாயிலில் காத்து இருந்த ஹர்ஷாவின் கண்களில் கனிகா அகிலுடன் பைக்கில் வந்து இறங்கியது பட, கண்கள் சிவக்க அவளையே பார்த்து இருந்தவன் வேகமாகக் கல்லூரிக்குள் நுழைந்து கூட்டத்தில் மறைந்து போனான்.....
அவனைக் காணாமல் கண்கள் பனிக்க வகுப்பறைக்குள் நுழைந்தவளின் அலைபேசி குறுந்தகவல் வந்திருப்பதை அறிவிக்க,
அதில் ஹர்ஷா, "நேற்று அத்தனை சொல்லியும் இருவரும் கேட்காதது போல் இருக்கிறது...அப்ப என் பேச்சிற்கு உன்னிடம் இவ்வளவு தான் மதிப்போ..." என்று எழுதியிருக்கப் படித்தவளுக்கு ஆயாசமாக இருந்தது.....
"இல்லை... அகில் அத்தானிடம் நேற்று முன் தினம் நடந்ததைத் தெரிவித்து விட்டேன்...அதனால் யார் இப்படிச் செய்து இருப்பார்கள் என்று தெரியும் வரை அவர் என்னைக் கல்லூரியில் விடுவதாகச் சொல்லியிருக்கிறார்" என்று பதில் அனுப்ப...
அவளின் பதிலில் சிறிது ஆறுதல் அடைந்தவன் "இன்றைக்குக் கல்லூரி முடிந்ததும் நான் உன்னைக் கூட்டி செல்கிறேன்... அவனை வர வேண்டாம் என்று சொல்லிவிடு" எனவும்,
இருவர் நடுவிலும் மாட்டிக் கொண்டு திணறிவளுக்குத் தன் நிலைமையை நினைத்துக் கழிவிரக்கம் தோன்றியது..
"சரி" என்று மட்டும் பதில் அனுப்பியவள் ஹர்ஷா தன்னைக் கூட்டி வருவதைச் சொல்லாமல், தானே தனியாக வீட்டிற்கு வருவதாக அகிலுக்குத் தகவல் அனுப்ப அவனிடம் இருந்து அன்று மாலை வரை பதில் வரவில்லை....
அவள் வகுப்பறைக்குள் நுழைந்ததில் இருந்து அலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பதையும், முகம் மிகவும் கலங்கி இருப்பதையும் பார்த்த ஆஷாவிற்கும் இளாவிற்கும் எதுவோ சரியில்லை என்று தோன்ற,
"கனிகா, எதுவும் பிரச்சனையா?" என்று கேட்ட இளாவை சட்டென்று திரும்பி பார்த்தவள் "இல்லை" என்பது போல் தலை அசைக்க,
"ஏன்டி, இப்படி எல்லாவற்றையும் எங்களிடம் இருந்து மறைக்கிற... உன் முகமே காட்டிக் கொடுக்கிறது... ஏதோ சரியில்லை என்று... அப்படி இருந்தும் ஏன் எங்களிடம் எதுவும் ஷேர் பண்ண மாட்டேங்கிற?" எனவும்.
அகிலும் ஹர்ஷாவும் சந்தித்ததை மட்டும் சொன்னவள் தான் கடத்தப்பட்ட சம்பவதை மறைத்துவிட்டாள்...
"என்னது ஹர்ஷா உன் அத்தானை மீட் பண்ணினாரா... என்னடி அதற்குள் எப்படி உங்கள் வீட்டிற்கு விஷயம் தெரிந்தது?"
"இளா, ஸ்ட்ரைக் அன்று நான் அகில் அத்தானோடு வீட்டிற்குப் போகவில்லை, அவர் தான் என்னை ட்ராப் பண்ணினார்.."
"அடியே நீ என்ன பைத்தியமாடி...மூளை ஏதும் குழம்பிருச்சா?" என்று இளா அலற...தன் நிலைமையை நினைத்து நொந்து கொண்டவள்,
"அவர்கள் ரெண்டு பேரும் என்ன பேசினார்கள் என்றே தெரியவில்லை டி, ஆனால் அவர், நான் அகில் அத்தானோடு பேசவோ பழகவோ கூடாதுன்னு சொல்றார்...அது எப்படி முடியும்...நான் அவங்க வீட்டில் தான் தங்கி இருக்கிறேன்...இதில் அவரோட பேசாமல் இருந்தால் அத்தைக்கும் மாமாவிற்கும் சந்தேகம் வராதா... இதை எப்படி அவருக்குப் புரியவைப்பது" என்று கூறியவள் அதற்கு மேல் ஒன்றம் பேசாமல் அமைதியாக இருக்க,
"நன்றாக மாட்டிக் கொண்டாள், இது தேவையா... ஆனால் இது இவள் விருப்பம் அல்லவே... இதற்கெல்லாம் காரணம் ஹர்ஷா ஆயிற்றே...ஆனால் அவனை எதிர்க்க யாரால் முடியும்?" என்று நினைத்துக் கொண்ட தோழிகள் இருவரும் அதற்கு மேல் கேள்விகள் கேட்டு அவளைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை....
மாலை கல்லூரி விட்டதும் ஹர்ஷாவைக் காண ஆவலுடன் கிளம்பியவளுக்குக் கிலிபிடிக்க வைத்தது அகிலின் அலைபேசி அழைப்பு...
"கனி, நான் உன் காலேஜ் வாசலில் தான் நின்று கொண்டு இருக்கிறேன்...சீக்கிரம் வா.."
"அத்தான்....நானே வந்துவிடுகிறேன் என்று சொன்னேனே"
"சீக்கிரம் வா... உன்னை வீட்டில் ட்ராப் பண்ணிவிட்டு நான் வெளியில் போக வேண்டும்... எனக்கு வேறு வேலை இருக்கிறது" என்று கூற..
அகிலை தேடி வெளியில் வந்தவளின் கண்ணில் காரில் சாய்ந்து கொண்டு நின்றிருந்த ஹர்ஷா பட்டான்... அவனை நோக்கி செல்ல காலடி எடுத்து வைக்க....சொல்லி வைத்தார் போல் அவள் அருகில் வந்த அகில் "வா" என்றான்...
யார் பக்கம் செல்வது என்று புரியாமல் குழம்பி நின்றவளின் கரத்தைப் பற்றியவன் தன் பைக்கை நோக்கி கூட்டி செல்ல... அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த ஹர்ஷாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது...
இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன் விருட்டென்று காரில் ஏற.... கனிகா அகிலின் பைக்கில் ஏறி அமர்ந்தவள் ஹர்ஷாவும் தன் காரில் ஏறியதைப் பார்த்தவளுக்குத் தெரிந்து போனது... அவன் சும்மா இருக்கப் போவதில்லை என்று....
காரை அதி வேகமாக ஓட்டியவன் ஒரு குறுக்குச் சந்தில் செல்லும் பொழுது அகிலின் பைக்கை முந்தி சென்று நடுவில் வழி மறிப்பது போல் காரை நிறுத்த தடுமாறிய அகில் கீழே விழாமல் சாமாளித்து நின்றவன் கனிகாவை திரும்பி பார்த்து "இறங்காதே" என்றான்...
காரை விட்டு இறங்கி வந்த ஹர்ஷா கனிகாவின் கரம் பற்றி "வா" என்க, நடு ரோட்டில் என்ன இது இத்தனை பேர் பார்க்க என்று தயங்கிய கனிகா அகிலைப் பார்க்க, "வான்னு சொன்னேன்" என்று பற்களைக் கடித்துக் கொண்டு கூறிய ஹர்ஷாவின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தைக் கண்டு நடுங்கியவள் ஒன்று பேசாமல் அமைதியாக அவனுடன் சென்று காரில் ஏறினாள்....
விருட்டென்று காரை கிளப்பியவன் தன் கோபம் முழுவதையும் காரின் வேகத்தில் காட்ட, "என்னங்க.... கொஞ்சம் மெதுவாகப் போங்க... ரொம்பப் பயமா இருக்கு..." என்றாள்...
சிறிது தூரத்தில் யாரும் அற்ற ஒரு இடத்தில் காரை நிறுத்தியவன் அவள் புறம் திரும்ப... அங்கு ஏற்கனவே அவன் நடந்து கொண்ட விதத்தில் அரண்டு போய் அமர்ந்திருந்தவள் மலங்க கண்களை விரித்து அவனையே பார்த்திருக்க,
"நான் ஏற்கனவே உனக்குச் சொல்லி இருக்கிறேன்...நான் சொல்வது மட்டும் தான் நீ கேட்க வேண்டும்.. வேறு யார் சொல்வதையும் கேட்க கூடாதென்று... சொல்லி இருக்கேனா? இல்லையா?" என்று குரலில் சத்தத்தைத் திடீரென்று ஏற்ற, திடுக்கென்று தூக்கி வாரிப் போட்டது கனிகாவிற்கு....
அவள் உடம்பு தூக்கி போட்டதைப் பார்த்தவனுக்கு அவளின் நிலை உணர்ந்து கனிவு வந்தது....
"கனி.. எனக்கு உன் மாமன் மகன் அகிலை பார்த்தாலே பிடிக்கவில்லை... நீ அவனோட பேசுவது பழகுவது எதுவும் பிடிக்கவில்லை.."
"நான் அவங்க வீட்டில் தான் இருக்கிறேன்... அவங்க தான் என்னைய பார்த்துக் கொள்கிறார்கள். அவங்க வீட்டில் இருந்து கொண்டே எப்படி அவருடன் பேசாமல் இருப்பது?" என்று அவனை நிமிர்ந்து பார்க்காமல் பயந்தவாறே கேட்க,
அவளின் நிலைமை நன்கு புரிந்தவனுக்கு அகில் அவளை விரும்புவதைச் சொல்வதா வேண்டாமா என்று இருந்தது...
ஆனால் இப்பொழுது தான் என் காதலை ஏற்றிருக்கிறாள். இந்தச் சமயத்தில் அகிலும் உன்னைக் காதலிக்கிறான் என்று சொன்னால் ஒரு வேளை தன்னை விட்டு அவனுடன் போய் விட்டால் என்று தப்பு தப்பாக அவளை எடை போட்டவன் சொல்லாமல் இருப்பதே மேல் என்று முடிவு செய்தான்..
ஒரு வேளை சொல்லியிருந்தால் பின்னால் வரவிருந்த அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாமோ???
"சரி, ஆனால் அவனுடன் நீ பைக்கில் ஒன்றாக அமர்ந்து வருவது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை..." என்றான் வெறுப்புடன்...
"அன்று நடந்ததற்கு யார் காரணம் என்று கண்டு பிடிக்கும் வரை அவர் கூடத் தான் நான் வரவேண்டுமாம்" எனவும்,
அவளை உறுத்து பார்த்தவன்,
"அதற்குக் காரணம் யார் என்று நான் கண்டு பிடித்துவிட்டேன் என்று அவனிடம் சொல்லு..." என்றான்.
அதிர்ந்தவள் "யார்?" என்று வினவ,
"ம்ப்ச்..அது உனக்குத் தெரிய வேண்டாம்...இனி நீ போகும் பொழுதும் வரும் பொழுதும் உன்னைப் பார்த்துக் கொள்ள அங்கங்கு ஆட்களைச் செட் பண்ணியிருக்கேன்...நீ பயப்படாமல் இரு..உனக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன்..." என்று சொல்லும் பொழுது அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் அவளே சற்று பயந்து தான் போனாள்.
காரைக் கிளப்பியவன்,
"அந்தப் பஸ்டாப்பில் இறக்கி விடுகிறேன்... நீ பஸ் பிடிச்சு போ... நான் பஸ் பின்னாலேயே வருகிறேன்" எனவும்,
இந்தக் கஷ்டம் இவருக்கு எதற்கு... நான் அகில் அத்தானோடே போய்க் கொள்வேனே.... புரிந்துக் கொள்ளவே மாட்டாரா?' என்று மனதிற்குள் புலம்பியவள் அவனிடம் சொல்லும் தைரியம் இல்லாமல் சரி என்று தலை அசைத்தாள்.
அவளைப் பேருந்து நிலையத்தில் இறக்கியவன் அவள் கீழே இறங்கும் நேரம் கரத்தைப் பற்றியவன்,
"கனி நான் திரும்பவும் சொல்கிறேன்....நீ எனக்கு மட்டும் தான்.....உனக்கு எதுவும் வர நான் விட மாட்டேன்.." என்று கூறியவன் அவள் விரல்களை இறுக பற்றி மென்மையாக முத்தமிட மயற்கால்கள் கூச்செரிய விழிகளைத் தாழ்த்தியவாறே "வருகிறேன்" என்று தலை அசைத்து விடை பெற்றாள்.
வீட்டிற்கு வந்தவளுக்கு எப்படியும் இன்று அகில் அத்தானோடு பேசி விட வேண்டும் என்று இருந்தது... இன்று நடந்தது போல் தினமும் நடக்கக் கூடாது என்று நினைத்தவள் அவனுக்காகக் காத்திருக்க ஏதோ சிந்தனையுடன் வீட்டிற்குள் நுழைந்தவன் அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் செல்ல, அவன் பின் சென்றவள் அவனுடன் அவன் அறைக்குள் நுழைந்தாள்.
திரும்பி பார்த்தவன்,
"இன்னும் பேசுவதற்கு எதுவும் இருக்கிறதா... என்ன?" என்று வார்தைகளை உச்சரித்ததிலேயே தன் கடுப்பை வெளிப்படுத்த,
"ப்ளீஸ் அத்தான் கொஞ்சம் நான் பேசுவதை நீங்களாவது கேளுங்க?" என்றாள்.
"ஏன் அவன் கேட்கவில்லையோ?"
"அத்தான் ப்ளீஸ்" என்று கெஞ்ச, "சரி சொல்லு, என்ன பேசணும்?" என்றான்.
"அத்தான் அன்று நடந்த அசம்பாவிதற்கு யார் காரணம் என்று அவர் கண்டு பிடித்துவிட்டாராம்" என்றவள் தயங்க,
அவளை உறுத்து பார்த்தவன் "யாராம்?" என்றான்.
"அதை அவர் சொல்லவில்லை அத்தான்...ஆனால் எனக்கு எதுவும் நடந்து விடாம இருக்க அவர் அங்கங்கு ஆளுங்களைச் செட் பண்ணியிருக்கிறேன்னு சொன்னார்" என்று சொல்லும் பொழுதே அவள் முகத்தில் ஹர்ஷாவை நினைத்துப் பெருமை வழிந்தது.
அதை எரிச்சலுடன் பார்த்திருந்த அகில்,
"அதனால், இனி நீ என்னுடன் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டானா?" எனவும்,
ஆம் என்பது போல் தலை அசைத்தவளை ஒரு நிமிடம் உறுத்து பார்த்தவன் அவள் அருகில் வந்து,
"கனிகா, நீ ரொம்பச் சின்னப் பெண். உனக்கு இதற்கு இன்னும் வயது வரவில்லை... ஆனால் நான் சொல்றதை நீ கேட்கிறாயோ இல்லையோ, அவன் நிச்சயம் உன்னைக் கேட்க விடமாட்டான்... எனக்குப் பயம் எல்லாம் அவனால் உனக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது... நீ ஒழுங்கா படிச்சு முடிக்க வேண்டும்... இது மட்டும் தான் என்னோட விருப்பம்" என்று அவள் தலையைத் தடவியவன்,
"ஹர்ஷா மட்டும் இல்லை, வேற யாராலும் உனக்கு எதுவும் நடக்க நான் விட மாட்டேன்.." என்று அழுத்தி சொல்லியவன், "சரி, நீ போய்த் தூங்கு" என்றான்.
ஒரு வழியாக அவனைச் சமாதானப்படுத்திய நிம்மதியில் அவளும் உறங்க போனாள்.
ஆனால் உறக்கம் அத்தனை சீக்கிரத்தில் அவளைத் தழுவவில்லை...
ஹர்ஷாவிற்கும் அகிலிற்கும் எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சனை வருமோ, அகில் அத்தான் மாமாவிடமோ அல்லது அத்தையிடமோ தங்களைப் பற்றிச் சொன்னால் என்ன ஆகுமோ? என்று கலக்கத்துடன் படுத்திருந்தவளுக்குத் தன்னைக் கடத்தியது யார் என்று கண்டு பிடித்துவிட்டதாகச் சொன்னாரே, யாராக இருக்கும் என்ற யோசனையும் வராமல் இல்லை....
ஆனால் அவளுக்கு எப்படித் தெரியும்.... கடத்தியது ரியா என்றும்... கடத்தப்பட்ட மறு நாளே ஹர்ஷா ரியாவை சந்தித்து மிரட்டியதும்....
தொடரும்